Thursday, February 7, 2013

யோகப் பயிற்சி



சித்தர்கள் முதல் ரிஷிகள் வரை மனித ஆரோக்கியத்தை முதனிலைப்படுத்தியே வந்தனர். தங்களின் தவ வலிமையால் கண்டறிந்து சொன்ன முறைகளில் மருந்திலா மருத்துவ முறையும் ஒன்றாகும்.
நோய் வரும் முன் தடுக்கும் முறையே மருந்தில்லா மருத்துவமுறையாகும்.
நோய் வரும் முன் தடுக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் அரை மணி நேரமாவது செய்தல் நல்லது. இந்த வகையில் யோகா செய்வது எப்படி, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் ஒரு யோகாசனம் பற்றி அறிந்து வருகிறோம்.
இந்த இதழில் அர்த்த சந்த்ராசனம் என்று அழைக்கப்படும் யோகாசனத்தைப் பற்றி அறிவோம்.
அர்த்த சந்த்ராசனம்:
சமஸ்கிருதத்தில் அர்த்த என்றால் பாதி என்று பொருள். சந்திரா என்றால் நிலா என்று பொருள். இந்த ஆசனம் பாதி நிலா வடிவில் இருப்பதால் இதனை அர்த்த சந்திராசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை:
முதலில் விரிப்பின் மீது காலை அகற்றி வைத்து நேராக நின்று கொள்ள வேண்டும்.
வலது கையை தோள்பட்டைக்கு நேராக நீட்டி உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
வலது கையை மேல்புறமாக நோக்கி உங்களது இடதுபுறத்தில் நேராக கொண்டு செல்லவும். அப்போது உங்களது இடது கையை இடது காலின் முட்டியைத் தாங்கிக் கொள்ளும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் மூச்சானது சாதாரண நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு ஒருசில நிமிடங்கள் இருந்து விட்டு பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
அதுபோல் இடது கையை நீட்டி வலது புறமாகக் கொண்டு வந்து வலது கால் முட்டியை வலது கையால் தாங்கி மூச்சை சாதாரண நிலையில் இருக்க வேண்டும்.
பயன்கள்:
* உடலின் முதுகுத் தண்டு இடப்புறமும், வலப்புறமும் மாறி, மாறி வளைவதால் உடலுக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் நரம்புகள் வலுப்பெறும்.
* கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குவதுடன் உடல் பலமடையும்.
* தொப்பையைக் குறைக்கும். இடுப்பு பகுதி வலுப்பெறும்.
* நன்கு பசியைத் தூண்டும், அஜீரணத்தைப் போக்கும்.
* உடலில் உள்ள தேவையற்ற நீர்களைப் போக்கும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.
இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்
Click Here
மனிதனின் உடலும் உள்ளமும் சீராக இருந்தால்தான் நீண்ட ஆரோக்கியத்தைப் பெற முடியும்.
இன்றைய நவீன சூழலில் மன அழுத்தம், கோபம், பயம், எதிர்கால நம்பிக்கையின்மை, பொறுமையின்மை, குறுக்கு வழியில் முன்னேறத் துடிப்பு என பல வகையில் இளைய தலை முறையினர் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.
இவர்கள்,  தாங்கள் சாம்பாதிக்கும் பணம் வாழ்வின் அனைத்து சந்தோஷத்தையும் கொடுத்துவிடும் என்று எண்ணி இரவைப் பகலாக்கி உழைக்கின்றனர்.
மூளைக்கு வேலை கொடுப்பது மட்டுமே சிறந்தது என எண்ணி பொருள் தேடி கடைசியில் நோயின் பிடியில் சிக்கி மருந்து மாத்திரை என காலத்தைக் கழிக்கின்றனர்.    இத்தகைய மக்களின் பிரச்சனையைத் தீர்க்க இன்று பல இடங்களில் உடற்பயிற்சி கூடங்களும் யோகா பயிற்சி மையங்களும் அதிகம் முளைத்துள்ளன.
நீண்ட ஆரோக்கியம் பெற தினமும் அரை மணி நேரமாவது யோகா, தியானம் செய்வது சாலச் சிறந்தது.

யோகாவை பதஞ்சலி முனிவர் முதல் பல சித்தர்கள் வரை போதித்துள்ளனர்.  இவற்றில் நவ்காசனம் என்ற ஆசனமும் ஒன்று.

நவ்காசனத்தை படகு ஆசனம் என்றும் அழைக்கின்றனர்.  நவ்கா என்றால் படகு என்று அர்த்தம்.
செய்முறை
விரிப்பின் மீது கால்களை  நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.
இரண்டு கால்களையும் படத்தில் காணப்படுவது போல் மெதுவாக மேலே தூக்கவும்.
அதேபோல் தலை, கழுத்தை மெதுவாக மேலே தூக்கவும்.  600  அளவுக்கு உயர்த்தவும்.  இது பார்க்க படகு நீரில் மிதப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
கைகளை நேராக நீட்டிக்கொள்ளவும்.  மூச்சை சாதாரண நிலையில் வைத்துக்கொள்ளவும்.
பயன்கள்
· வயிற்றுத் தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
· வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதால் தொப்பை குறையும்.  வயிற்றுக்குத் தேவையான இரத்தம் சீராகச் செல்லும்.
· கணையத்தைத் துண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது.  இதனால் நீரிழிவு நோய் போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
· நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கிறது.
· நுரையீரலைப் பலப்படுத்துகிறது.  இதனால் ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைகிறது.
இளமையைக் காப்பதில் இவ்வாசனம் பெரும்பங்கு வகிக்கிறது.

யோகாசன பயிற்சி – பகுதி1

இப்போதைய சமுதாயத்தில் பரபரப்பு, மனஅழுத்தம் என்று எத்தனையோ விடயங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கான தீர்வு என்ன


என்பது பற்றி சிந்தித்தால் விடாத இறை சிந்தனை மட்டுமே என்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து இறைசிந்தனையில் திளைப்பதால் நம்முடன் ஒரு சக்தி உடன் இருப்பது போன்ற உணர்வை பெறுகிறோம். மனது கடினமான நிலையிலிருந்து விடுபடுகிறது.
உடலும், மனமும் ஒன்றுக்கொன்று மிகநெருங்கிய தொடர்பில் இருக்கிறது. மனதில் குழப்பமும், நெருக்கடியான எண்ணங்களும் சூழ்ந்து கொள்ளும் போது உடலானது இயற்கையாகவே சோர்ந்து போகிறது. தொடர்ந்து இது போன்ற நிலை எழும் போது ஒருகட்டத்தில் அது நோயாகவே மாறிப்போகிறது.
இப்போதும் கூட ஒரு நிகழ்வை காணமுடியும். மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள் என்று கூறப்படும் சாலையில் திரியும் நோயாளர்களை கவனிக்க யாரும் இருப்பதில்லை. அவர்களுக்கு நேரத்திற்கு தகுந்த உணவும் இருப்பதில்லை. ஆனாலும் அவர்கள் பெரிதாக நோயால் பாதிக்கப்படாதவர்கள் போல் தான் இருக்கின்றனர். இதற்கு காரணம், அவர்கள் மனதிற்கு பெரிதாக சிந்திக்கும் திறன் இருப்பதில்லை என்பதால் தான் அவர்கள் அவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அனைத்து திறனும் படைத்த சாதாரண வாழ்க்கையில் ஈடுபடும் சராசரி மனிதன் எப்போதும் இயல்பான அமைதியான மனநிலையிலும், நோயற்ற உடலை பெறுவதற்கும் ஒரே வழி யோகசானங்களை பயில்வதும், மனதை செம்மைப்படுத்தும் தியானங்களை கற்றுக் கொள்வதும் தான் என்பதே எப்போதும் தீர்வாக இருக்கிறது.
யோகாசனம் என்பது ஒரு அற்புதப் பயிற்சி. மனோதத்துவப்பயிற்சி என்றும் சொல்லலாம். மனநிம்மதியை இழந்து விடாமல் வாழ்க்கையை அமைதியாகவும், ஒரு ஒழுங்குடனும் சீரான மனநிலையில் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. தவிர்க்க முடியாத நிலையில் உடலில் தோன்றும் நோய்களை அகற்றும் அற்புத மருத்துவ விஞ்ஞானமாகவும் இது இருக்கிறது. கூடவே மனதில் எழும் கெட்ட எண்ணங்களை அகற்றி, மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும் யோகாசனத்திற்கு உண்டு.
யோகம் என்ற சொல்லுக்கு தமிழில் சரியான பொருள் ஒருங்கிணைத்தல் என்பது. ஆசனம் என்றால் உடலை அமர்த்தும் நிலை. மனிதன் தன்னுள் நிறைந்து கிடக்கும் சக்தியை ஆற்றலை திறனுடன் கண்டு கொள்ளவும், அந்த ஆற்றலை அடக்கியாளக் கற்றுக் கொள்வதும் தான் யோகப்பயிற்சிகளின் மூல நோக்கம். இதே வேளையில் இந்த பயிற்சிகளை செய்யும் போது மனதையும் ஒரு நிலைப்படுத்த முடிகிறது. மூன்றாவதாக, இந்த பயிற்சிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களை வராமல் தடுத்து விடுகின்றன. யோகசனக்கலை என்பது இந்திய நாட்டில் தான் முதலில் தோன்றியது. முனிவர்களும், சித்தர்களும் தங்களது தியான நிலையில் உறுதியுடனும், உடல் நோய்வாய்ப்படாமலும் இருக்க இந்த கலையை கண்டறிந்தனர்.
தமிழ்மருத்துவமான சித்தமருத்துவத்தின் அடிப்படையில் முக்கிய பங்கை யோகக்கலை வகிக்கிறது. சித்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்த உலகில் சூட்சுமாக இன்றும் இருந்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டு வருகிறது. இவர்களில் திருமூலர், ராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, லோகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதரு, பாம்பாட்டி சித்தர், சட்டை முனி, சுந்தாரனந்த தேவர், குதம்பைச்சித்தர், கோரக்கர் ஆகிய பதிணென் சித்தர்கள் தமிழ் மருத்துவத்திற்கு பெரும்பங்கை அளித்திருக்கிறார்கள்.
இவர்கள் தான் யோகாசனம் மற்றும் நாடிசுத்தி பிராணயாமம் ஆகியவற்றின் மனித உடலில் தோன்றும் நோயை போக்கவும், நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்று கண்டறிந்து மனித குலத்திற்கு அதற்கான சூட்சுமத்தை சொல்லியும் வைத்தார்கள். பதஞ்சலி முனியின் யோகசூத்திரத்தில், ” மனதையும், மனதில் எழும் எண்ணங்களையும் நன்கு கட்டுப்படுத்துவதே யோகம். இந்த பயிற்சியில் ஒருவர் முழுமை பெறும் போது அவர் தமக்குரிய தூய்மை¬யும், பிரகாசமும் பொருந்திய நிலையில் நிறுத்தப்படுகிறார். மற்ற வழிகளை பின்பற்றும் போது மனநிலையில் ஏற்படும் விபரீத உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது.
யோகாசனங்கள் உடலை நோயின் பிடியில் விழாமல் தடுத்து நிறுத்துகின்றன. தற்போது உலகம் முழுவதும் யோகசனத்தின் பலன்கள் உணரப்படுவதால் மேற்கத்தியர்களும் இந்த கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். யோகசனத்தை கற்றுக் கொள்ள உடல் நிலை இடம் தராத நிலையில் உள்ளவர்கள் சாதாரண அமர்ந்த நிலையில் இருந்த படி தியானிக்க கற்றுக் கொண்டு உடலையும், மனதையும் சாந்தப்படுத்திக் கொள்கின்றனர். கடுமையாக உடலை வளைத்து பிரயாசைப்பட்டு செய்ய தேவையில்லாத நிலையில் எளிதாக செய்த பத்மாசனம் போன்ற எளிதான உட்காரும் நிலை ஆசனங்களையும், படுத்தபடி தியானிக்க சவாசனத்தையும சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்.
இது பற்றி இனி இங்கு விரிவாக காணலாம். யோகாசனங்களுக்கு போகும் முன்பாக மனதை ஒழுங்குபடுத்துவது முக்கியமானது. அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் விட்டொழிப்பதும் முக்கியம். தொடக்க நிலையில் தியானத்தை கற்றுக் கொள்வது பற்றி பார்க்கலாம். பிறகு யோகாசனத்தின் சூரியநமஸ்காரம் முதல் நௌலி, ஒட்டியானா வரையிலான ஆசனங்களை கற்கலாம்.
தியானம்
எதிலும் ஒருங்கிணைப்பு உள்ளவர்களுக்கு எதுவுமே தியானம் ஆகி விடுகிறது என்பது தான் யதார்த்தம். இங்கு சுலபமாக தியானம் செய்யும் முறை குறித்து ராமகிருஷ்ண மடத்து துறவியான சுவாமி ஹர்ஷானந்தர் சொல்வது பற்றி பார்க்கலாம்.” மதவித்தியாசம் இல்லாமல் எந்த தெய்வத்தையும் தியானிப்பதன் மூலம் இறைக்காட்சியை பெற்று முடிவில் மோட்சத்தை பெற முடியும் என்று பக்தியோகத்தில் கூறப்படுகிறது. எந்த தெய்வத்தை நாம் தியானிக்க விரும்புகிறோமோ அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். தியானிக்க நினைக்கும் சாதகன் தனது மனதிற்கு இயைந்த இஷ்ட தெய்வத்தை எண்ணி தியானிக்கலாம். அந்த தெய்வம் என்பது அவனது குலதெய்வமாகவோ அல்லது வேறெந்த தெய்வமாகவோ இருக்கலாம்.
சிலர் தனக்கான குருவை மானசீகமாக எண்ணியிருப்பார்கள். அவர்கள் அந்த குருவிடம் தீட்சை பெற்று தியானத்தை தொடங்கலாம்.
தியானம் செய்யும் முறை
1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குல தெய்வமாகவோ உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.
3. வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜையறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜையறை இல்லையெனில் இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.
6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி பிரார்த்திக்கவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.
8. ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் “ராம, ராம” என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.
10. தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.
தியானத்தின் பலன்களை பற்றி அடுத்து பார்க்கலாம்.
தொடரும்

நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! – யோகாசனப் பயிற்சி – பகுதி 2

நான் பறவைகள் அருகில் செல்லும் போது…
மாணவர்: நாம் பறவைகள் அருகில் செல்லும் போது ஏன் பறக்கின்றன?
தத்துவ ஞானி ஜே.கிருஷ்ண மூர்த்தி: நீங்கள் பறவைகளின் அருகில் செல்லும் போது அவைகள் பறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நீங்கள் பறவைகளை தொட முடிந்தால் அவைகளுடன் நட்பாக இருக்க முடிந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! ஆனால் பாருங்கள் மனிதர்களாகிய நாம் கொடூரம் மிக்கவர்கள். நாம் பறவைகளை கொல்கிறோம், சித்திரவதை செய்கிறோம், அவைகளை வலையில் சிக்க வைக்கிறோம், கூண்டுக்குள் அடைக்கிறோம். அழகான கிளி, கூண்டில் அடைபட்டிருப்பதைப் பற்றி நினைத்துப் பாருங்கள்! ஒவ்வொரு மாலையும் அதன் ஜோடியை அழைக்கிறது. மற்ற பறவைகள் வானில் பறந்து செல்வதை பார்க்கிறது. இவை அனைத்தும் நாம் அப்பறவைகளுக்கு செய்யும் போது அவைகள் நாம் அருகில் செல்லும் போது அச்சமின்றி இருக்குமா?
ஆனால் தனிமையான ஒரு இடத்தில் நீங்கள் அமைதியாக, சலனமற்று உண்மையிலேயே மென்மையுடன் அமர்ந்திருக்கும் போது, பறவைகள் உங்கள் அருகில் வருவதைப் பார்ப்பீர்கள்; அவை உங்கள் அருகில் வட்டமிடும். நீங்கள் அவைகளுடைய கவனமான அசைவுகளை, மென்மையான அலகுகளை, அசாதாரமாண, மற்றும் அழகான இறகுகளையும் காண்பீர்கள். அன்புடனும், அச்சமற்றும் இருக்க வேண்டும். விலங்குகள் நம்முள் உள்ள பயத்தை உணரும் தன்மை உடையன. அவைகளும் பதிலுக்கு அச்சமுற்று பறந்து செல்கின்றன.
ஓரிரண்டு நிமிடங்கள் மட்டும் நீங்கள் ஓர் மரத்தடியில் அமைதியாக அமர்ந்து இருந்தால் இது ஏற்படாது. ஏனெனில் பறவைகள் குறுகிய காலத்தில் நம்முடன் பழகிவிடாது. ஒரே மரத்தடியில் தினமும் சென்றமர்ந்தால், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் உயிரோட்டமிக்கவை என்பதை உணர்வீர்கள்.
- மாணவர்களுடன் உரையாடல். ( வாட் டஸ் பியர் டு யூ? என்ற புத்தகத்திலிருந்து)
அமைதியான மனநிலையில் நடந்து செல்வது கூட தியானமாகி விடுகிறது என்று குறிப்பிட்டிருந்தோம். இயக்கச்செயல்களை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் ஒழுங்குபட்ட நிலையில் செய்யும் போது அது யோகாசனமாகிவிடுகிறது. யோகா என்பது ஒரு மதம் அல்ல. அது பெரிய தத்துவம், ஒரு கலை, விஞ்ஞானம் ஆகியவற்றுடன் கூடிய வாழ்வாங்கு வாழ ஒர் அமைப்பு. யோகாவின் நோக்கம் சரீரத்திற்கும் மனதிற்கும் இடையிலான, தனிப்பட்ட சக்திக்கும், பிரபஞ்ச சக்திக்கும் இடையிலான, பரிபூரண வியாபகத்தை விருத்தி செய்வதாகிறது. உலகில் தோன்றிய மிகச்சிறந்த ஞானிகளால் யோகா மக்களுக்கு தரப்பட்டது. சரீரத்தையும், மனத்தையும் முழுமையான ஆய்வு செய்வதற்கான முயற்சிக்கான விதையே யோகா.
யோகத்தில் இரண்டு அங்கங்கள் இருப்பதாக சொல்லலாம். அமைதியான மனநிலையுடன் கூடிய தியானம் இதை ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சுப்பயிற்சி அல்லது பிராணயாமம் என்று சொல்லலாம். மற்றொன்று உடலின் உறுப்புகளுக்கு வலிவு தரும் யோகப்பயிற்சிகள். யோகாசனம் உள் உறுப்புகளுக்கு நல்ல ஆக்கம் கொடுத்து, நல்ல பரிணாம விளைவுகளுக்கு உந்துதலை அளிக்கிறது. அது எழும்புகளை பலப்படுத்துவதுடன், உள்ளுறுப்புகளையும் பரிபூரண நலத்துடன் வாழ உருவாக்குகிறது. யோகாப்பயிற்சி, இருதயத்தை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக்குகிறது. சர்வாங்காசனம் என்னும் பயிற்சியால் உடல் தலைகீழான நிலையில் இரத்தம் பாய்ந்து, இருதயம் வலுவாகிது. மலச்சிக்கல் குணப்படுத்தப்படுகிறது. வெளித்தள்ளும் பானை வயிறு, சரிசமமாக பலப்படுகிறது. தைராய்டு கோளம் தூண்டப்பட்டு உடலின் செயல்கள் சரியாக அமைய செய்கிறது. உடலை சீர் செய்யும் யோகாசன பயிற்சிகள் உடலை ஆரோக்கிய நிலையில் வைக்கின்றன. மனமும், சிந்தனையும் சிறக்க தியானிப்பது அவசியமாகிறது.
நாம் பிறந்தது முதல் சுவாசிக்கின்றோம். யோகப்பயிற்சியில் இந்த சுவாசம் மிக முக்கிய அங்கமாக செயல்படுகிறது. தற்போது அறுவை சிகிச்சையில் மூச்சு முறை என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். அகம் என்னும் அறிவு, மூச்சை பின்பற்றி வந்தே தெளிவு நிலையடைகிறது. பின்னர் அண்டவெளியுடன் கலக்கிறது என்கிறார் யோகா£ குரு யோகிதஸம். மூச்சை கட்டுப்படுத்தி சுவாசத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சில நோய்களை எளிதாக தீர்க்க முடியும் என்கிறார் அவர். நோயாளரை நேர்க்கோட்டில் படுக்க வைத்து படுத்திருப்பவரின் நாசி துவாரத்தின் மேல் புற எலும்பில் விரல் வைத்து அளவான, மென்மையான, அதிகம் பிரிவுடையதாக மாற்றி மாற்றி படிப்படியே நேரம் அதிகமுள்ளதாக மற்றவர் லேசாக அழுத்தினால் நோய்கள் தீருவதை கண்கூடாக காணலாம். மனித உடலில் சக்தி மைய உருவத்தில் மூக்கு தான் அமைந்திருக்கிறது என்று அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சை யோக மூச்சு என்கிறார் அவர்.
ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சால் உடல் நோய் அணுகாவண்ணம் காக்கப்படுகிறது. அதாவது இன்றைக்கு அறிவியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 100 சதவீதம் நோய்த்தொற்று இல்லாத உணவு என்று சான்றிதழ் தரப்பட்ட உணவை கூட அது சுத்தமானது என்று சொல்ல முடியாது.  ஏனென்றால் மனம் ஒன்றை ஏற்க இயலாத நிலையிலும், திருப்தியில்லாத நிலையிலும் உள்வாங்கப்படும் அந்த உணவு விஷமாகவே மாறும் என்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூட இதை உறுதியாக சொல்லியிருக்கிறார்.
தற்போது இந்தியாவில் ஊழலை எதிர்த்து ஜன்லோக்பால் மசோதவை நிறைவேற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கும் அன்னாஹசாரேவை பார்க்க முடியும். முப்பது வயதிற்குள்ளாகவே புலன்களின் வலிமை குறைந்து உடல் சோர்வடைந்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியிலே 74 வயதிலும் துள்ளல் ஓட்டத்துடனும், தொடர்ந்து உண்ணாநோன்பு இருந்தும் அவரது உடலில் சுறுசுறுப்புக்கு குறைவில்லை. இது போல் இந்த உலகின் சில பகுதிகளில் நூற்றி ஐம்பது வயதைக்கடந்தும் சிலர் புலன்களில் எந்த சோர்வும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை பார்க்கும் போதெல்லாம ஆச்சரியம் மேலிடுகிறது. உடலை இறுக்கும் காயகல்பம் தான் ஆயுளை நீட்டித்து வாழ செய்கிறது என்பதே இந்த ஆச்சரியத்திற்கான விடை. சித்தர்கள் காயகல்பத்தால் தான் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்கள்.
பறவைகளை போல் விண்ணில் மனிதர்களும் பறக்க முடியும் என்ற சாதனையை வெறும் இயந்திரத்தின் மூலம் நாம் சாதித்துக் கொண்டிருக்கும் போது, சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்கள் மனதை நிலைநிறுத்தி அந்தரத்தில் சில விநாடிகள் அப்படியே நிலைநிறுத்துவதை பார்க்க காணமுடிகிறது. மூச்சடக்கி பல மணி நேரங்கள் நீருக்குள் மூழ்கி இருப்பதை பார்க்க முடிகிறது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது?
இதற்கு மட்டுமல்ல, உயிரையே எடுக்க வரும் எமனை கூட உதைத்து விரட்ட முடியுமாம் சுவாசிப்பது குறித்த ரகசியம் தெரிந்தால்!
இதை சொன்னவர் திருமூலம்.
” ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கு
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளரில்லை.
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளருக்கு
கூற்றை உதைக்கும் குறியதுவாமே!”
என்கிறார் திருமூலர். பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் ஏற்படும் பலனுக்கு திருமூலரின் இந்த  பாடலை விட சான்று வேண்டுமா? திருமூலரின் மூச்சுபயிற்சி முறைகள், ஆயுளை நீட்டிக்கும் காயகல்ப முறைகள் தான் இன்றைக்கு பலன் நிறைந்த பயிற்சியாக உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு வாய்த்த திருமூலர் முதல் இந்தியாவின் மிகப்பெரிய தத்துவஞானியாக தோன்றிய ஜே.கிருஷ்ண மூர்த்தி வரையில் நமக்கு சில விடயங்களை போதித்திருப்பதன் ரகசியம் நம்மையும், நம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சத்தையும் உயிரோட்டமாக காண்பதற்கு மட்டுமே!
தியானத்திற்கும் மற்ற உயர்வான ஆன்மீக பயிற்சிகளுக்கும் ஒருவருடைய மனம் கவலைகளிலிருந்து விடுபட்டதாக , சலனமற்றதாக இருக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான, பிராகசிக்கின்ற மனம் மட்டும் தான், முடிவான ஆன்ம ஐக்கியத்தை பெற முடியும் என்பது உறுதி.
” நான் யார்” என்ற கேள்வியை பகவான் ரமணன் எழுப்பினார். அந்த உள்விசாரணை தான் ஒரு யோகியின் முடிவான லட்சியமாக இருக்க முடியும். இந்த நிலையை எய்துவதற்கு உடல் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உடல் என்ற கூட்டை வைத்து தான் இந்த உயர்வான ஆன்மீக நிலையை எட்ட முடியும். வயது முதிர்ந்தாலும் வளமுடன் வாழ, இளைஞனின் மிடுக்குடன் வாழ யோகாவில் திளைத்திட வேண்டும். யோகியாகி விட்டால், உடல் முதிர்ச்சியடையுமே தவிர, சரீரத்தின் வலிமையிலோ, மனோசக்தியையோ இழப்பதில்லை.
தியானத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சு அமைகிறது. நடக்கும் போது கூட சிலருக்கு பல ஆண்டுகள் தியானிக்கும் யோகிக்கு கூட கிடைக்காத சில உணர்வுகள் கிடைக்கிறது. இது பற்றி ஓஷோவின் வார்த்தைகளையும், சாதாரண நாசித்துவாரங்கள் மூலம் சுவாசிப்பதற்கும், உள் நாசியில் சுவாசிப்பது பற்றியும் அடுத்து பார்க்கலாம்.
தொடரும்

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் -இந்திய தத்துவ ஞானி ஓஷோ
கடந்த பகுதியில் தியானத்தில் இறங்க விரும்புபவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை பூரணமாக தொடர்ந்து நினைத்து அதை தியானமாக செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். இந்தியாவில் பிறப்பெடுத்த தத்துவஞானியான ஓஷோ அதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். மனதை தன்போக்கில் இலகுவாக விட்டுவிட்டு இயற்கையாகவே எண்ணங்களை கடந்து போவது தான் தியானம் என்கிறார். குறிப்பாக பல காலம் தவம் இருந்து ஒரு யோகி அடையும் உணர்வை சாதாரணமாக அன்றாடம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஒரு நபர் எதேச்சையாக அடையக்கூடும் என்கிறார். அவர் சொல்வதை சற்று விரிவாகவே இங்கு பார்க்கலாம்.
“மனம் அற்ற நிலையே யோகம் எனப்படும். எந்த விஷய ஞானமும் இல்லாமல், பூரண உணர்வுநிலையே யோகம் ஆகும். ஓர் கண்ணாடியில் படிந்து கிடக்கும் தூசு போல மனதில் விஷய ஞானங்கள் படிந்து கிடக்கின்றன. அவைகள் பகல் பூராவும், ஏன் இரவிலும் கூட, உங்களின் கனவு வாயிலாக உங்களை சுற்றி வருகின்றன. உங்கள் மனம் எதைப்பற்றியாவது நினைத்துக் கொண்டும், எதைப்பற்றியாவது கவலையும், துக்கமும் அடைந்து கொண்டே தான் இருக்கிறது. அடுத்த நாளைப்பற்றி இன்றைக்கே அது தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. இது தன் இயல்பாக, சுயநினைவின்றி, சதா அடிமனத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இது தான் யோகம் அற்ற நிலையின் இயக்கமாகும்.
இதன் எதிர்ச்செயல்பாடே யோகநிலையாகும். அதாவது, எப்போது எண்ணக்குறுக்கீடுகள் நின்று விடுகின்றனவோ, இறந்த கால எண்ணங்கள் செயலற்றுப் போகின்றனவோ, எவ்வித ஆசையின் தூண்டுதல் இல்லாமல், மனம் சஞ்சலமின்றி நிசப்தமாக ஒடுங்கி நிற்கின்றதோ, அந்த நிலையே யோகமாகும். அந்த அமைதி நிலையில் தான் ” உண்மை” வெளிப்படும். வேறு எந்த நிலையிலும் அது தன்னைக்காட்டிக் கொள்ளாது. ஆகவே, யோகம் என்பது மனம் அற்ற நிலையே.
நீங்கள் மனதுடன் யோகத்தை அடையவே முடியாது. ஏனெனில் மனம் ஒரு போதும் தானாக நின்று விடாது. அதன் செயல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் மனதுடன் போராடாமல், அதே சமயம் அதை சிறிது ஒதுக்கி வைத்து அது கொடுக்கும் விஷயத்துடன் உங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக நின்று பார்த்து ” நான், மனம் இல்லை” என்ற உணர்வுடன் செயல்படுங்கள்.
” நான், மனம் இல்லை” என்ற விழிப்புணர்வு நிலையே யோகமாகும். இந்த விழிப்புணர்வு உங்களிடத்தில் ஆழமாக, ஆழமாக பதிய பதிய அமைதியான எண்ணமற்ற நிலை, வெறும் வெட்டவெளியாக படிகம் போன்ற சுத்தமாக சில கணங்கள் தோன்றலாம். அந்த இயக்கமற்ற நிலையில் நீங்கள் உண்மையிலேயே “யார்” என்று அறிந்து கொள்வீர்கள். அப்பொழுது உங்களுக்கு இந்த உலக இயக்க ரகசியங்கள் அனைத்தும் புரியும். இப்படி ஒரு காலததில் நீங்கள் பூர்ண யோகத்தில் எப்போதும் இருந்து விடுவீர்கள். அந்த காலமே இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட காலமாகும்.
ஒன்றையே நினைப்பது என்பது தியானமோ அல்லது யோகமோ அல்ல. ஒன்றையே நினைப்பதில் நீங்களே வலிய ஒரு முயற்சியை மேற்கொள்கிறீர்கள். ஏதோ ஒரு பொருளைச்சுற்றி மனத்தை நிலைப்படுத்த விரும்புகிறீர்கள். இந்த முயற்சியில் இரு வேறு நிலைகள் ஏற்படுகின்றன. உண்மையான தியானத்தில் உங்கள் உள்ளேயும், வெளியேயும் உள்ளவைகள் எந்த வித தடங்கல் இன்றி, வெளியே செல்ல முடியும். அதே போல வெளியே உள்ளவைகள் அனைத்தும் உங்கள் உள்ளே செல்ல முடியும். இரண்டுக்கும் எந்த வரம்போ, எந்த வேலியோ கிடையாது. உள்ளே உள்ளது இயங்குகிறது. இரண்டு மாறுபட்ட விழிப்புணர்வு கிடையாது. இது தான் உண்மையான தியானத்தின் நிலையாகும்.
ஆனால் ஒன்றையே நினைத்தல் என்பது இரு வேறான விழிப்புணர்வு ஆகும். அதனால் தான் ஒன்றையே நினைத்தால் களைப்பையே உண்டு பண்ணுகிறது. நீங்கள் எளிதில் களைப்படைவதற்கு, ஒன்றையே நினைத்துக் கொண்டிருத்தலே காரணமாகிறது. உங்களால் இருபத்து நான்குமணி நேரமும் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தல் என்பது முடியாத காரியம். ஒன்றையே நினைத்தல் என்பது இயற்கையான செயல் அல்ல. உண்மையான தியானம் என்பது உங்களுக்கு களைப்பையே உண்டாக்காது. நாள் பூராவும், ஏன் ஆண்டு முழுவதும் தியானம் தொடர்ந்து செயல்படுவதாகும். அது பேரின்பமாக மாற முடியும். அது ஒரு குறிக்கோள் இல்லாத பரிபூரண ஓய்வாகும்.
ஒன்றையே நினைப்பதன் மூலம் உங்கள் மனம் ஒரு முடிவுக்கு, ஒரு குறிக்கோளுக்கு முன்பே வந்து அதற்காக செயல்படுகிறது. ஆகவே நீங்கள் அதற்காக ஏதோ செயல்படுகிறீர்கள். உண்மையான தியான முறையில் எந்த குறிக்கோளும் தொக்கி நிற்கவில்லை. நீங்கள் குறிப்பாக எதுவும் அதற்காக செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் “நீங்களாகவே” இருக்கிறீர்கள். மனதாலும், உடலாலும் எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து, தங்கள் உள்மனம் சுரக்கும் ஊற்றையும், தானே முளைக்கும் அந்த அரிய பூக்களையும் உணர்ந்தார்கள். நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் “தானாகவே செயல்படுதல்” என்பதை. அந்த ஊற்று தானாகவே சுரக்கிறது. அந்த பூச்செடிகள் தானாகவே மேல் நோக்கி வளர்கின்றன.
இந்த நிலை, அதாவது எப்பொழுது நீங்கள் வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதன் போக்கிலேயே விட்டு விடுகிறீர்களோ, எப்பொழுது உங்கள் விருப்பப்படி அமைய அதற்கு கட்டளை எதும் பிறப்பிக்கமால் இருக்கிறீர்களோ, அதே போல் அதை உங்கள் நோக்கப்படி நடத்த ஆசைப்படாமல் இருக்கிறீர்களோ, உங்கள் மூளைத்திறனைக்கொண்டு அதை மாற்றி போதனைகளை அதன் மேல் திணிக்கமால் இருக்கிறீர்களோ, அந்த இயற்கையான கோட்பாடுகளற்ற, அந்த நேர வாழ்க்கைத்தன்மையை தியானம் என்று அழைக்கலாம்.
யோகம் என்பது “இப்பொழுது, இங்கே, இதோ நிகழ்வது தான். ” அது ஒரு முழுமையான நிகழ்கால நிகழ்ச்சி. நீ தியானம் என்று ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் தியானத்தில் எப்பொழுதும் இருக்கலாம். ஆனால் ஒன்றையே நினைத்துக் கொண்டு உன்னால் எப்பொழுதும் இருக்க முடியாது. ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பது மனித இயல்பு தான். ஆனால் யோகம் என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது. புனிதத்தன்மை உடையது. அதற்கும், ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பதற்கும் அவ்வளவாக தொடர்பு கிடையாது. தியானம் என்பது எதையும் வலுக்கட்டாயமாக உங்கள் மேல் திணித்துக் கொள்வதல்ல”.
தியானம் அல்லது யோகம் என்பது விளையாட்டான விடயம் அல்ல. சில சமயம் அவை உங்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும். ஏனெனில், தியானத்தால் நீங்கள் உங்கள் மனதின் ஆழமான இடத்தில் விளையாட ஆரம்பிக்கிறீர்கள். உங்களை அறியாமலே செய்யும் தவறு ஒரு பெரிய ஆபத்தை உண்டு பண்ணிவிடும். ஆகவே, இதில் எதையும் புதிதாக கண்டு பிடிக்க முயலாதீர்கள். உங்களால் முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க முடிகிற இரண்டு வகை தியான முறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு தியான முறை மகிழ்ச்சியை கொடுத்தால், அதில் ஆழ்ந்து முழு ஈடுபாட்டுடன் செல்லுங்கள். ஆனால் அதை ஒரு பழக்கமாக்கி, மனதை அடிமையாக்கி விடாதீர்கள். ஏனெனில் ஒரு நாள் அந்த முறையை விட்டு விடும்படி நேரிடும். நீங்கள் உங்கள் மனதை அதனுடன் நெருங்கி சம்பந்தப்படுத்தி விட்டால் அது போதை மருந்து போல் வேலை செய்து, உங்கள் மனதை அடிமைப்படுத்தி விடும். பிறகு அந்த முறையை உங்கள் இஷ்டப்படி விடுவது கஷ்டம். எனவே இரண்டு முறைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் முழுமையாக செல்லுங்கள். பிறகு அதை கைவிடுங்கள். மற்றொரு முறையை பின்பற்றுங்கள். இப்படி மாறி மாறி தொடருங்கள். ஆத்மீகப்பயணத்தில் ஒரே தியான முறையை மட்டும் கடைப்பிடித்து கடைசி எல்லையை அடைவது என்பது மிக மிக அரிது.
மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது தியானம் அல்ல. முழுமையான விழிப்புணர்வு தான் தியானம். உங்கள் உடல் அசைந்து கொண்டு இருக்கும் போது, அதாவது ஓடும் பொழுது, குதிக்கும் பொழுது, உங்களுடைய எச்சரிக்கை உணர்வு இயல்பாகவும், அதிகமாகவும் இருக்கும். ஆனால் ஓய்வாக இருக்கும் பொழுது எச்சரிக்கை உணர்வு மிகவும் குறைந்து உங்களை தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் படுக்கையில் இருக்கும் பொழுது எச்சரிக்கை உணர்வு மிகமிக குறைவாக இருக்கும். ஆனால் உடல், மனம், உயிர் மூன்றும் ஒன்றாக எந்த நிலையிலும் ஒன்றாக செயல்படும்படி கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் ஒரு வழியை கண்டுபிடியுங்கள். ஓடும் பயிற்சி செய்பவர்கள், இந்த மூன்றும் ஒன்றாக இயங்குவதை உணர்ந்திருக்கிறார்கள். ஓடுவது ஒரு யோகம் என்று நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் பல பேர் யோகத்தின் அனுபவத்தை, ஓடும் போது அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது அவர்களை அறியாமலே கிடைக்கிறது. கடவுள் தன்மையை அடைய ஓடுதல் கூட ஒரு யோகம் தான்.
அதிகாலை வேளையில் காற்று மென்மையாகவும், தெளிவாகவும் இருக்கும் பொழுது, இந்த உலகம் தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வரும் பொழுது, நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது உங்கள் உடல் மிக அழகாக அசைந்து கொண்டு செல்கிறது. அந்த புதுமை நிறைந்த இளங்காற்றும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு இந்த உலகம் வரும் நேரமும், பறவைகள் பாட்டிசைக்கும் அற்புதமான வேளையும், உங்களை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கும். அப்பொழுது, ஒரு கட்டத்தில் ஓடுபவர் முற்றிலும் மறைந்து “ஓடுதல்” மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும். அங்கே மனம், உடல், உயிர் என்ற மூன்றும் ஒன்றாகி இயங்கிக் கொண்டிருக்கும். திடீரென்று உங்கள் உள்ளே ஒரும் பேரின்பம், அதிர்ச்சி அல்லது உச்சம் ஏற்படும். இந்த துரிய நிலைக்கு ஓடுபவர்கள் தற்செயலாக அவர்களே அறியாமல் வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அனுபவம் தாங்கள் ஓடுவதால் வந்ததாக எண்ணி யோகநிலை உணர்வின் அனுபவத்தை தவறவிட்டிருக்கிறார்கள். ஆனால், அதை உணர்வுபூர்வமாக எதிர்கொண்டால், அந்த வேளை மிக அற்புதமாகவும், உங்கள் உடல் மிக ஆரோக்கியமாகவும், ஏன் இந்த உலகம் மிகமிக அழகானதாகவும் தோன்றும்.
நான் அறிந்தவரை மற்றவர்களை விட ஓடும்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்ற எவரைக்காட்டிலும் மிக எளிதாக யோக உச்சத்திற்கு வர முடியும்”.
- ஓஷோவின் தியானமுறைகள்
அடுத்த தொடரில் சாதாரண மூச்சு மற்றும் உள்நாசி மூலம் சுவாசிக்கும் முறை பற்றியும், தியானத்திற்கு தயார் ஆவதற்கான தயாரிப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்.
முன்னைய பகுதிகள்

உடலின் ஆரோக்கியம், உயிர்சக்தி, பலப்படுத்தும் தியானம்: யோகாசனப் பயிற்சி – 4

தியானத்தை பற்றிய கடந்த தொடரில், நடைப்பயிற்சியின் போது கூட சிலருக்கு தியானத்தின் உச்ச உணர்வு அவர்கள் எதிர்பாராமலே எழக்கூடும் என்பது பற்றி ஓஷோ சொல்லியிருந்தது குறித்து பார்த்தோம். ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியே தியானம் என்று இந்தியாவில் தோன்றிய ஆன்மீக ஞானிகள் பலரும் கூறினார்கள் ஆனால் முதன் முதலாக ஓஷோ அதிலிருந்து மாறுபட்டு ஆடல், பாடல் ஏன்….சிகரெட் பிடிப்பதை கூட தியானமாக செய்ய முடியும் என்று வித்தியாசமான அணுகுமுறையை அவரது பாதையை தொடரும் சீடர்களுக்கு சொல்லியிருந்தார். ஆனால் பொதுவாக, இந்தியாவை போன்ற ஆன்மீக தேசத்தில் மக்கள் தியானம், யோகம் போன்ற ஆழமான நிலைகளுக்கு செல்ல விரும்பும் போது அதை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு செயலாகவே தொடர எண்ணுகிறார்கள்.
உடல் ஓய்வான நிலையில் சுவாசம் சீராக சென்று வருகிறது. இதனால் உடலின் உயிர்சக்தி பலப்படுகிறது. உடலை நோய்கள் அண்டுவதில்லை. தியானத்தின் பலனை எளிதாக இப்படி சொல்லாம். உடலின் உயிர்சக்தி என்ற பிராணசக்தி தவறான வாழ்வியல் முறை இயல்புகளால் பாதிக்கப்படுவது இயற்கை. அதிக உணவு, நரம்புகளை தூண்டிவிடும் உணர்வுகள், பழக்கங்கள், அதிக காமஉணர்வு, கடுமையான உழைப்பு, உழைப்பே இன்றி இருத்தல் போன்றவை எல்லாம் நோய்கள் தொற்ற மூலகாரணமாக அமைகிறது.
மனிதனுக்கு உணவு, நீர், காற்று ஆகிய ஊட்டப்பொருள்களில் இருந்து சக்தி கிடைக்கின்றது. இந்த இவை அனைத்தும் கெட்ட நிலையில் இருக்கும் போது உடலின் நிணநீர் கெடுகின்றது. உடலுக்கு வேண்டாத அன்னிய நச்சுக்கள் உடலில் தேக்கமடைகின்றன. இந்த கழிவுகள் யாவும் மலம், மூத்திரம், சுவாசம் மற்றும் வியர்வை என்ற கழிவுப் பொருளாக வெளியேற வேண்டும். ஆனால் அவை சரியாக வெளியேறாத நிலையில் உடலுக்குள் தேங்கி உறுப்புகளை கெடுத்து நோய் உற்பத்தியாக காரணமாகின்றன. இதையே “சர்வரோகாமலா வாசாகா” என்றார்கள். உடலில் சேரும் மலம் என்னும் அன்னியப்பொருளே அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பது தான் இதன் பொருள். அறியாமை, புலனடக்கம் இல்லாமை, அசட்டை, இச்சை, உணவில் நாவடக்கம் இல்லாமை, இயற்கை விதிகளை மீறல் ஆகியவற்றால் உடலில் அழுக்குகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மனிதன் தனக்கு தானே உற்பத்தி செய்து கொள்கிறான்.
இதையெல்லாம் தவிர்த்து மனதை கட்டுப்படுத்தியும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் தியானமும், யோகாசனக்கலைகளும் மிகவும் உதவுகின்றன என்றால் மிகையாகாது. மிகப்பெரிய யோகிகள் தியானத்தில் திளைத்து ஒருகட்டத்தில் காற்றையே உணவாக உண்டு வாழ்ந்ததாக ஆதாரங்கள் உள்ளன. ஒரு கட்டத்தில் இந்த மூச்சு போக்குவரத்து கூட இன்றி சாகா நிலையை அவர்கள் எட்டியிருக்கிறார்கள். ரஜனியின் மானசீக குருவான பாபாஜி இந்த நிலையை எட்டியவர். அவருக்குள் சரீரத்திற்குள் சதைகளோ, எலும்புகளோ இரத்த ஓட்டமோ கிடையாது. பார்வைக்கு தோற்றம் தான் இருக்கும். இதுவும் கூட வரைபட தோற்றம் தான் என்கிறார்கள். ஆனால் தற்கால உலகத்தில் நோய் இன்றியும், நல்ல மனஉணர்வுகளுடன் வாழ தியான மற்றும் எளிதாக கற்றுக் கொள்ளக்கூடிய யோகாசன பயிற்சிகள் உதவுகின்றன எனலாம்.
இந்த தொடரின் முதல் பகுதியில் எளிதான தியான முறை பற்றி விளக்கினோம். அதையே இங்கே சற்று விரிவாக பார்க்கலாம். ராமகிருஷ்ணா மிஷன் போன்ற ஆன்மீக இயக்கங்களின் பங்களிப்பு தியானம், யோகம் மற்றும் பொது வாழ்வியல் தொடர்பாக அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளது. அவர்களது இயக்கத்தின் வழிவந்த சுவாமி யதீஸ்வரானந்தர் அளித்த தியான வாழ்விற்குரிய குறிப்புகள் தியானத்தை சிறப்பாக விவரிக்கின்றன.
தியானம் செய்வதற்குரிய நேரம்
ஒரு நாளில் நான்கு முறை தியானம் செய்ய முயலுக. பிரம்ம முகூர்த்தம், நண்பகல், மாலை சந்தியா வேளை மற்றும் நடுஇரவு ஆகிய நான்கு நேரங்களில் தியானம் செய்ய வேண்டம் என்று சுவாமி பிரம்மானந்தர் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த நேரங்களில் இயற்கை அமைதியாய் இருக்கிறது. நமக்கு உள்ளும் புறமும் ஆன்மீக அலைகளில் ஓட்டத்தில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இந்த நான்கு நேரங்களிலும் தியானம் செய்ய இயலாதவர்கள் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலாவது தியானம் செய்ய வேண்டும்.
காலை வேளை தியானத்திற்கு சிறந்த நேரம். இரவு முழுவதும் உறங்கிய உறக்கம் நம் மனத்தின் நினைவுகள் பலவற்றை அழித்திருக்கும் அல்லது அமைதி பெறச்செய்திருக்கும். எனவே, அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது எளிது. தூங்கி எழுந்தவுடனே உணர்வறு மனது எண்ணங்களை ஏற்க தயாரான நிலையில் இருக்கும். எனவே அந்த நேரத்தில் மனதிற்கு கொடுக்கப்படும் உணர்வுகளே ஆழ்மனதில் நன்கு பதியும். சூரியோதத்திற்கு சில மணிகள் முன்னுள்ள வைகைறைப்பொழுது தியானம் செய்யும் சாதகர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும்.
தியானம் முடிந்த பிறகு சிறிது நேரம் ஆசனத்திலேயே அமர்ந்திருப்பது நல்லது. தியானித்த விஷயத்தை அமைதியாக சிந்தித்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது மனம் ஆன்மீகச் சிந்தனைகளால் நிரப்பப்படும். அப்போது மனம் ஆனந்தமாக இருக்கும். இந்த ஆனந்தம் மனத்தின் அடித்தளத்திலிருந்து வருகிறது. இதற்கு பெயர் தான் பஜானானந்தம். இந்த அக ஆனந்தத்தையும், அமைதியையும் ஆழப்படுத்தவும்; உறுதிப்படுத்தவும்.
தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். தேவைக்கு அதிகமான உணவை ஒரு போதும் வயிற்றில் திணிக்க கூடாது. உடல் தேவைக்கேற்ற உணவு வகைகளையும், அளவுகளையும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உண்ணாநோன்பு இருப்பது நல்லது. ஆனால் எப்போதும் மிதமாக உண்பது அதைவிட நல்லது. சிலருடைய உடல் உண்ணாவிரதம் இருக்க ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற ஆசையை விடவேண்டும்.
விரதம் இருக்க முயன்று தோற்றுப்போனவர்கள் ஏராளம். அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கடவுளை நினைத்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இது போன்ற தேவையில்லாத போராட்டங்களை நடத்தக்கூடாது. ஆனால் தினமும் மதியம் அரை மணிநேரமாவது சிறிய ஓய்வு மனதிற்கு புதிய புத்துணர்வை தரும்.
உறக்கம்
தியானம் பயில தொடங்கி விட்ட ஆத்ம சாதகர்களுக்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேர உறக்கம் போதுமானது. ஓய்வுக்காக எவ்வளவு நேரம் உறங்குகிறோம் என்பது முக்கியமல்ல. நாள் முழுவதும் விழிப்புணர்வுடனும், அமைதியுடனும் இருந்து நரம்பு தளர்ச்சியையும் பதட்டத்தையும் குறைப்பதில் எவ்வளவு தூரம் வெற்றி அடைகிறோம் என்பது தான் முக்கியமானது. தியானம் சாத்தியமாவதற்கு முதல்படியாக நமக்கு மன, உடல் இறுக்கங்களை தளர்த்த தெரிய வேண்டும். நரம்புகளில் படிந்திருக்கும் அழுத்தங்களை குறைக்க தெரிய வேண்டும். எப்போதும் படபடப்பாக இருப்பவர்கள் தியானம் செய்ய முடியாது.
அடுத்ததாக நமது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அவை நல்லவையாகவும் உயர்ந்தவையாகவும் இருக்கும் போது கூட, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். பரம்பொருளிடத்து சரணாகதி செய்ய வேண்டும். அப்போது தான் மனத்தையும், நரம்புகளையும் பலவீனப்படுத்தும் கவலைகளையும், இறுக்கங்களையும் பெரிதும் குறைத்து மனத்தை அமைதிப்படுத்த இயலும். உறங்கச் செல்லும் முன்பு உணர்வுகளை தூண்டும் நிகழ்ச்சிகளை சிந்திப்பதோ, படிப்பதோ, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்றவற்றில் செலவழிப்பதோ கூடாது. மாலையிலிருந்தே மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். தியானத்திற்கு முன் கடந்த காலங்களில் அடி ஆழத்தின் மனதில் புதைந்திருக்கும் கேடு விளைவிக்கும் எண்ணங்களை சிறிது சிறிதாக மாற்றி தூய்மைப்படுத்த வேண்டும். இரவில் படுத்து உறங்கும் நிலையில் திடீரென்று விழிப்பு வந்து விட்டாலும் அப்போது ஜெபம் செய்ய தொடங்கலாம். அநாவசியாக அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக படுத்தவாறே மனதில் அமைதியான ஜெபம் செய்யலாம். இரவில் படுக்க செல்லும் முன் தியானத்திற்கு எடுத்துக் கொண்ட மந்திரத்தை நூறு முறை ஆயிரம் முறை என்று முடிந்த வரை மனதில் தியானித்து விட்டு படுக்கலாம்.
குறிப்பிட்ட ஆதாரத்தில்
தியானத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட ஆதாரம் அல்லது உணர்வு மையத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு உகந்த ஆதாரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று திகைக்க வேண்டாம். நமது அகங்காரம் எங்கிருந்து தொடங்குகிறது? அதன் ஆரம்பம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அல்லது உடலின் எந்த பகுதியில் மனதை ஒருமுகப்படுத்தினால் இறைவனோடு இணக்கம் கொள்ள முடிகிறது என்று பார்க்க வேண்டும். அது தான் தியானத்திற்கேற்ற ஆதாரம். இதயத்திற்கு கீழுள்ள எந்த உடல் ஆதாரங்களிலும் தியானம் செய்ய வேண்டாம். சில தந்திர சாஸ்திரங்கள் கீழ் ஆதாரங்களில் தியானம் செய்யும்படி சொல்லுகின்றன. ஆனால் ஒரு போதும் அப்படி தியானம் செய்ய வேண்டாம். தியானத்தில் புதிதாக ஈடுபடுபவர்களுக்கு மனத்தை கீழ் ஆதாரங்களில் நிலை நிறுத்துவது காமம் முதலான உணர்ச்சிகளை கிளப்பி விடுவதாக அமையும். இதயத்திலும் அதற்கு மேலுள்ள ஆதாரங்களிலும் மனத்தை வைத்திருப்பது (உ.ம்: புருவமத்தி) எப்போதும் நல்லது.
உணவுக்கட்டுப்பாடு
ஆசனத்தை விட்டு எழுந்தவுடன் பிறருடன் சிறிது நேரம் பேசக்கூடாது. மனதின் அமைதியையும் அடக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். தியானத்திற்கு பிறகு இப்படி அமர்வது என்பது சுருக்கமாக இருக்க வேண்டும். பதிணைந்து நிமிடம் தியானம் செய்து விட்டு நாற்பத்தைந்து நிமிடம் உட்கார்ந்திருக்க கூடாது. ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தியானம் செய்தால், அந்த தியான மனநிலையை உலக விவகாரங்களிலிருந்து பாதுகாக்க ஒரு பதினைந்து நிமிடம் உட்காரலாம்.
ஆசனம்
தியானத்திற்கு வசதியான இரண்டு ஆசனங்களை அல்லது அமரும் நிலைகளை பழகி வைத்திருக்க வேண்டும். நெடுநேரம் அமர்ந்திருப்பது சிரமமாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். தற்போது இந்தியாவில் பல்வேறு யோகாசன பயிற்சி மையங்கள் வந்து கொண்டிருக்கின்றன. யோகாசனங்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. ஆனால் தியானம் மட்டுமே முக்கிய நோக்கமாக இருக்க விரும்புபவர்கள் யோகாசனத்தின் இரண்டு இருக்கை ஆசனங்களை கற்றுக் கொண்டால் நலம். நெடுநேரம் தியானத்தில் அமர்ந்திருந்தாலும் சிரமம் தெரியாமலும், இறுக்கமின்றி வசதியாக; அதே சமயம் சொகுசாக இல்லாமல் உடலும் தலையும் நேரே இருக்கும்படி அமர்ந்திருப்பது தான் யோக ஆசனத்தின் நோக்கம். நெடுநாள் பயிற்சிக்கு பின்னர் இப்படி அமர்வது இயல்பாக வரும்.
சீரான சுவாசம்
ஒழுங்கும் கட்டுப்பாடும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாதவர்களும், தகுந்த குரு ஒருவரின் வழிகாட்டுதல் இல்லாதவர்களும் மூச்சை அடக்கி வைத்து பயிலும் பிராணயாமம் பயிலக்கூடாது. அத்தகையோருக்கு பிராணயாம பயிற்சிகள் ஆபத்தை விளைவிக்கும். ஆனால் மூச்சை அடக்காமல் சீராக சுவாசிக்க பழகிக் கொள்வதில் எந்த அபாயமும் கிடையாது. முதலில் தியானத்திற்கு அமரும் குறிப்பிட்ட நேரங்களில் சீரான சுவாசத்தையும் பழகி வரவேண்டும். பிறகு மற்ற நேரங்களில் சுவாசத்தை சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ளலாம். எல்லா நேரங்களிலும் சுவாசம் சீராகவும், ஆழ்ந்ததாகவும் இருக்கும் வரையில் சீரான சுவாசபயிற்சியை செய்து வர வேண்டும். சீராக சுவாசிப்பது இயல்பான பழக்கம் ஆகி விடவேண்டும். தாறுமாறான சுவாசம் உடலின் சக்தியை வீணாக்குவதுடன் மனதையும் அமைதியற்றதாக்கும்.
சீரான சுவாசத்தால் மனம் சீராக இயங்க வேண்டும். பிராணன் சீராக இயங்க வேண்டும். சரீரமென்னும் இயந்திரத்தின் சக்கரங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும். அப்போது மனதும், உடலும் ஆனந்த உணர்வுகளால் நிரப்பப்படும்.
எப்போதும் விழிப்புணர்வுடன்
வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் மனதை ஒருங்கிணைத்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லா சமயங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். நமது பிறவியில் இருக்கும் குற்றங்களை அறிந்து கொள்ளும் முயற்சி இருக்க வேண்டும். அதாவது தன்னை ஆராய்தல் என்று இதை சொல்லலாம். இது தியானம் செய்பவர் மேலும் மேலும் தன்னை தூய்மைப்படுத்தி முன்னேற உதவும். ஆனால் “நான் ஒரு பாவி ” என்ற எதிர்மறை எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தக்கூடாது. அது தியானிப்பவரை மேலுல் பாவியாக்கி விடும். தியானத்தை சீர்குலைக்கும். எண்ணங்களை அலசி தவறுகளை திருத்துவதன் மேலும் மேலும் உடலும், மனதும் சுத்தப்படுத்தப்பட்டு தூயநிலைக்கு முன்னேற முடியும். உறுதியான பயிற்சிகள் மூலம் நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் எத்தகைய மோசமான பழக்கங்களையும் மாற்றி விடலாம் ” என்கிறார் சுவாமி யதீஸ்வரானந்தர். தியானத்தில் பலனில் இது ஒரு சிறிய நிலை மட்டுமே.
பிராணயாமப்பயிற்சிகள் மூலம் உடல் மற்றும் மனதை உறுதிப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கு பிராணயாமம் என்ற பெயரில் மூச்சை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் கற்றுத்தரப்படுகின்றன. மனதை குழப்பம் அற்றதாகவும், உடலை ஆரோக்கியமானதாகவும் யோகாசனங்கள் மூலம் சீர்படுத்திக் கொண்டு ஒரு குருவின் வழிகாட்டுதலுடன் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. கட்டுப்பாடற்ற மூச்சடக்கல் பயிற்சிகள் உடலையும், மனதையும் கெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதே யோகிகளின் கருத்து.
இவ்வாறான பிராணயாம பயிற்சிகளுக்கு பதிலாக தொடக்கத்தில் நாடிசுத்தி என்ற பயிற்சி மூலம் உடலில் தேங்கி கிடக்கும் நச்சுகளை வெளியேற்ற முடியும். நாடிசுத்தியால் முகம் பொலிவு பெறும். உடலில் பிராணவாயு தேக்கமில்லாமல் சென்று வரும். செல்களால் ஆக்கப்பட்டிருக்கும் உடலின் அத்தனை செல்களுக்கும் நிறைவான பிராணவாயு இதன் மூலம் கிடைக்கும்.
நாம் கடந்த தொடரில் சொன்னஉள்நாசி மூலம் சுவாசிக்கும் முறை பற்றி பார்க்கலாம். சாதாரணமாக மூக்கினால் காற்றை இழுக்கிறோம். ஆனால் அதை விடுத்து தொண்டையிலிருந்து புருவ மத்திக்கு செல்லும் புரையோடும் துவாரம் மூலமாக சுவாசிப்பது ஒரு முறை. இந்த பயிற்சியில் நாம் சுவாசிக்கும் உள் நோக்கி மூக்கின் வழியாக செல்வது போல் தோன்றினாலும், அது உணரப்படாது. பயிற்சி முறை: நின்று கொண்டு சுவாசக்காற்றினை வாயின் உதடுகளை ஓ வடிவில் குவித்து சப்தமில்லாமல் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து, அந்தக்காற்று உள்ளங்கால் முதல் உச்சிவரை உடம்பின் ஒவ்வொரு பாகமும், பிராணவாயுவால் நிரம்பிய உணர்ச்சி வர வேண்டும். மூச்சை இழுக்கும் போது ஓம் என்ற மந்திரத்தை உரிய அதிர்வுடன் உணர வேண்டும். ஓ என்று ஓங்காரத்தை மூச்சை உள்ளிழுக்கும் போது உணர்ந்து, ம் என்ற மெதுவான அழுத்தத்துடன் இந்த மூச்சை மெதுவாக வெளியேற்றவும்.
இந்த சுவாசத்தால் மூளைப்பகுதிக்குள் கீழேயிருந்து உயிர்க்காற்று மேலே ஏறி கண், காது முதலிய நுண்ணிய நரம்புகள் செல்லும் பகுதிகள் புத்துணர்வு பெறும். நரம்புவலி, தசைவலி நீங்கும். கல்லீரல், மண்ணீரல், நீரழிவு, செரியாமை, வாயுக் கோளாறுகள், மலச்சிக்கல் நீங்கும். உடலை இயக்குவிக்கும் கோளச்சுரப்பிகள் அதிகப்படியான பிராணவாயுவை பெற்று புத்துயிர் பெறும் என்று ஞானிகளால் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையும் விட எளிமையானது நாடிசுத்தி. தினமும் எளிதாக இதனை செய்து ரத்தம் மற்றும் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற முடியும். இந்த சுவாசப்பயிற்சியை எவரும் செய்யலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை. இதுபற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்.

மனிதரை ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் நாடி சுத்தி : யோகாசனப் பயிற்சி – 5


DETAILS
 CREATED ON THURSDAY, 29 SEPTEMBER 2011 11:40
பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்பதாகவும்,
அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச்சரியான முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்டகாலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணிலடங்கா சித்திகளை கூட பெற முடியும் என்கிறார்கள் ரிஷிகள்.
மனித ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்று வாசி எனப்படுகிறது. இந்த வாசியே பாற்கடல் புராணத்தில் வாசுகி என்னும் நாகமாக சித்தரிக்கப்படுகின்றது. பிராணன் எனப்படுவதும் வாசியையே குறிக்கிறது. இந்த பிராணன் எனப்படும் வாசியை இடம், வலமாக இழுத்து பல தொழில் செய்து கட்டுப்படுத்தும் முறைக்கு பிராணயாமம் என்று யோக ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.
அதாவது, இந்த வாசியை கட்டுப்படுத்தி உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியை வெளிக் கொண்டு வரும் முறையே பிராணயாமம். குண்டலினி சக்தியை எட்டும் போது ஒரு மனிதனுக்கு சகல வித சித்திகளும் கிட்டும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் இது மிகப்பெரிய விஞ்ஞானம் என்பது இதனை உணர்ந்தால் புரியும்.
அதாவது ரத்தம் உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவை எடுத்து செல்கிறது. காற்றோடு கலக்கப்பட்ட அந்த ரத்தத்தில் மிகமிக நுண்ணிய சத்துக்கள் அடங்கியுள்ளன. ரத்தத்துடன் கலந்து செல்லும் காற்றானது தூய்மையாகவும், சரியான ஓட்டத்திலும் செல்லும் போது மனித உடலின் நுண்ணிய உயிர்க்கோளங்கள் அனைத்தும் சரியாகவும், ஆரோக்கியத்துடனும் இயங்குகின்றன.
மூச்சு பயிற்சியின் மூலம் ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் களையப்பட்டு விடுவதால் தூயரத்தம் மிகத்தூய்மையான உயிர்காற்றான பிராணவாயுவை சுமந்து சென்று உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவாக தருகிறது. மனிதனின் மூளை அதன் சக்தியில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
இது போன்ற பயிற்சிகளால் மனிதன் சித்தியை எட்டக்கூடும் என்று ரிஷிகள் சொல்வதை பார்த்தால், மூச்சு பயிற்சியின் மூலம் மூளை மட்டுமல்லாமல் உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்திறனையும் வியக்கத்தக்க அளவுக்கு உயர்த்த முடியும் என்கிறார்கள் தற்போதைய வாசியோக அப்பியாசிகள்.
பத்து வாயுக்கள்
மனித தேகத்தை பொருத்தமட்டில் பிராணன், அபானன், வியானன்,உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்று தசவாயுக்களாகிய பத்துவாயுக்கள் உள்ளன. இவற்றை விளக்கப்படுத்தி பார்த்தால், பிராணன் எனப்படுவது உடலுக்கு ஆதாரமான உயிர்காற்று, இது ரத்த ஓட்டத்தையும், சுவாசத்தையும் பலப்படுத்துகின்றது. அபானன் எனப்படுவது மலத்தில் தங்கும் மலக்காற்று, இது கீழ்நோக்கி பாய்வது. வியானன் எனப்படுவது மண்ணீரலில் இருந்து நரம்புகளையும், மூளையையும் பலப்படுத்துவது. இதனை தொழிற்காற்று என்றும் கூறுவர். உதானன் எனப்படுவது குரல், பேச்சை உருவாக்குகிறது. இதனை ஒளிக்காற்று என்பர்.
சமானன் எனப்படுவது உண்ட உணவை ஜீரணமாக்கி உடலை சமானப்படுத்துகின்றது. இதனை நிரவு காற்று என்பர். நாகன் எனப்படுவது தும்மல் காற்றாக நாசியிலிருந்து வெளிப்படுகின்றது. இதன் வேகம் எல்லா காற்றுகளையும் விட மிகவும் அதிகமானதாகும். கூர்மன் எனப்படுவது விழி காற்றாகும். விழியின் பார்வைக்கும், கண்ணீர் வரவைக்கும் குணமும் இதற்கு உண்டு. கிருகரன் எனப்படுவது கொட்டாவி விடும் காற்றாகும், தூக்கம் வருவதற்கான அறிகுறியையும், பிராணசக்தி குறைதலையும் சுட்டிக்காட்டும் காற்றாகும்.
தேவதத்தன், இதை இமைக்காற்று என்பர். கண்விழியை பாதுகாக்கும் பொருட்டு இமைத்துக் கொண்டேயிருக்கும். புராணங்களிலில் இதை நிமி என்றும் கூறுவர். தனஞ்செயன்,உடலை விட்டு ஒன்பது வாயுக்களும் வெளியேறிய பிறகு உடலினுள் நுண்கிருமிகளை தூண்டி உடலை வீங்க வைத்து கடைசியில் வெளியேறும் காற்றாகும். இதை வீங்கல் காற்று என்பர். இப்படி மனித தேகத்தில் பத்துவிதமான காற்றுகள் உயிர் வாழும் பொருட்டு தேகத்தை இயக்குகின்றன.
உயிராதார காற்று
பத்துக்காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும். தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய, பிராணனாகிய உயிர்காற்றை சரியாக பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டு செயல்படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாபபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்படிப்பட்ட ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய தாண்டவராயன் நடராசர் எப்போதும் ஆனந்த திருநடனம் புரிவார் என்கிறார்கள் ரிஷிகள்.
பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள் என்கிறார்கள்.
பிராணயமம் என்ற காற்றடக்கும் கலையானது, ப்ராக்ருதம், வைகிருதம் என்ற இரு வகைப்படும். இந்த இரண்டு மட்டுமல்லாமல் மத்திமமான கேவலகும்பகம் என்ற ஒரு வகையும் உண்டு. எல்லா உயிர்களும் இயற்கையாகவே மூச்சுவிடுதலுக்கு ப்ராக்ருதம் என்று பெயர். சாஸ்திரங்களில் கூறியபடி காற்றை கட்டுப்படுத்தி பயனடையும் முயற்சிக்கு வைகிருதம் என்று பெயர். எந்தவித முயற்சியும் இல்லாமல் காற்றடக்கலால் கிடைக்கும் பலன் ஒரு ஜீவனுக்கு கிடைத்தால் அதற்கு கேவல கும்பகம் என்று பெயர். ஆக மொத்தம் இயற்கை, செயற்கை, கேவலம் என்ற யதார்த்தம் ஆகிய மூன்று நிலைகளில் காற்றடக்கும் பிராணயாமதத்துவம் அமைகின்றது.
காற்று எண்ணிக்கை
காற்றை உடலுள்ளிழுத்து வெளியே விடுவதை சுவாசம் என்கிறோம். இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21,600 முறை நடக்கின்றது. இச்சுவாசத்தில் இயல்பாக உடலுக்குள் செயல்பாட்டிற்கு செல்லும் சுவாசம் அதிகபட்சம் 14,400 தான். மீதமுள்ள சுவாசங்கள் யாவும் வீணாகவே கழிகின்றன. சுவாசங்கள் வீணாவதால் ஆயுள்நிலையும் வீணாக கழிகின்றது. நோய்களும் உண்டாகிறது.
இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி மேம்படுத்தினால் சுவாசம் தங்குதடையின்றி எல்லா பகுதிகளுக்கும் சென்று பிராணசக்தியினால் தேகத்தை வலுப்படுத்துகின்றது. ஆயுளும் நீடிக்கிறது. நோய் அகலுகின்றது. பாபம் விலகுகின்றது. மூச்சை சரியாக இழுத்து விடுதலும் ஒரு வகையான பாப சம்ஹாரமே, புண்ணியத்தை எய்துகின்ற முயற்சியே என்கிறார்கள் சாதுக்கள்.
சுவாசத்தை இழுத்து விடும் கால அளவை மாத்திரை என்பார்கள். மாத்திரை என்பது விரல் சொடுக்கும் நேரமும், கண்ணை சிமிட்டும் நேரமும் ஆகும். சுவாசம் இழுக்கப்படும் போது 16 மாத்திரை காலம் இழுக்க வேண்டும். சுவாசம் இழுக்கப்படும் தத்துவத்திற்கு பூரகம் என்று பெயர். சுவாசத்தை உடல் பூரிப்பதால் அச்செயலுக்கு பூரகம் என்று பெயர் வந்தது. பயிற்சியின் துவக்க காலத்தில் 16 மாத்திரை காலம் சுவாசத்தை இழுப்பது கடினம். தகுந்த குருவின் பயிற்சியால் சுவாசத்தை இது போல் இழுக்கலாம்.
காற்றை இழுத்தல், அடக்கல், விடுதல்
தொடக்க காலத்தில் காற்றை இழுத்து அடக்கி செய்யும் பயிற்சிகளை குருவின் துணையில்லாமல் செய்தல் கூடாது. காற்றை உடலுக்குள் அடக்கி பயில்வது பிரச்சினைகளை உண்டாக்கும். போதிய பயிற்சிக்கு பின் இத்தகைய அடக்கல் பயிற்சியை செய்யலாம். பொதுவாக, இப்படி மூச்சை அடக்கி பயிலும் போது சேமிக்கப்படும் பிராணனால், உடலின் மூலை முடுக்கெல்லாம் பிராணன் ரத்த ஓட்டங்களில் கலந்து ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றும்.
இயல்பாக சாதாரண மானுட நிலையில் 64 மாத்திரை காலம் பிராணனை உடலில் தக்க வைக்க முடியாது. பயிற்சியால் மட்டுமே முடியும். பிராணனை சேமிக்கும் செயலுக்கு கும்பகம் என்று பெயர். கும்பகம் என்பதற்கு அமிர்தத்தால் நிரப்பப்பட்ட கலசம் என்று பொருள். உண்மையில் பிராணன் அமிர்தமே. அந்த அமிர்தமாகிய பிராணசக்தி இல்லாவிட்டால் உடல் நிலைக்காது.
16 மாத்திரை காலம் பிராணனை இழுத்து 64 மாத்திரை காலம் அதை உடலினுள் வைத்து 32 மாத்திரைகாலம் தக்க வைத்த பிராணனை வெளியிட வேண்டும் என்பது பொதுவிதி. இதுவும் சற்று கடுமையே. தொடக்கத்தில் பயிற்சியின் போது மூச்சு திணறலும், பயமும் வரலாம். நாளடைவில் பயிற்சியினால் சரியாகிவிடும். உடலில் பிராணனை தக்க வைத்து பின்பு வெளியிடும் செயலுக்கு இரேசகம் என்று பெயர். இரேசகம் என்றால் வெற்றிடமாக்குதல் என்று பொருள்.
பிராணன் என்ற அமிர்தம்
அமிர்தமான பிராணன் ரத்த ஓட்டத்தில் கலந்து தன்னுடைய பணிகளை செய்து மாசுக்களோடு வெளியாகிறது. அதாவது நாம் வெளிவிடும் மூச்சில் கரியமில வாயு இருக்கிறது என்பார்கள். இது தான் அந்த நச்சு. அதாவது உடலில் இருக்கும் கழிவுகள் எல்லாம் இந்த மூச்சுக்காற்றின் வழியாக கரியமில வாயுவாக வெளியேறுகிறது. மிகச்சரியான பிராணயாம பயிற்சி முறைகளால் உடலில் துளியளவு கூட நச்சுக்கள் இன்றி ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ள முடியும். உடல் முழுவதும் அமிர்தமாகிய தூய காற்றை நிரப்பி உடலை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி
ஆராய்ச்சி ரீதியாக ஒரு நிமிடத்திற்கு 18 முறையென ஒரு நாளைக்கு 25,920 சுவாசங்களை சுவாசிக்கின்றோம். அது இயற்கையிலான சுவாசம் என்றாலும், சுவாசத்தை பலப்படுத்த வைகிருதம் என்ற சுவாசப்பயிற்சியை சிறுக,சிறுக மேம்படுத்த வேண்டும். வைகிருதம் என்ற சுவாசப்பயிற்சியை சுகப்பிராணயாமம், சமவிருத்த பிராணயாமம், விவாகபிராணயாமம், மத்யமபிராணயாமம், ஆத்யபிராணயாமம், மகத்யோக பிராணயாமம் என்று பலவகையாக பிரிக்கலாம்.
ஆனால் இந்த பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும். அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது. நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும்.
இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன. இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன என்கிறார்கள்.
சுவாச முறைகளில் பலவிதங்கள் உண்டு. எளிய சுவாச முறைகளும், அவற்றால் விளையும் பலன்களை பற்றியும் அடுத்து வரும் தொடர்களில் காண்போம்.

உடலும் உள்ளத்தையும் சாந்தப்படுத்தும் சவாசனம் : யோகாசனப் பயிற்சி – 6

பிராணயாமம் குறித்து மற்றவர்களை விட சுவாமி சிதானந்தா சொல்லியிருக்கிற எளிய செய்முறை விளக்கங்கள் பயன் தரக்கூடியவை. இந்த முறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரது சொற்களிலேயே இதனை பார்க்கலாம்.
பிராணன், உயிர் ஆற்றல் எனப்படும். இதை ஒழுங்குபடுத்துவதே பிராணயாமம். பிராணயாமம் என்பது வெறும் சுவாசம் அல்ல. சுவாச முறை (மூச்சை உள்ளிழுத்தல், வெளிவிடுதல், நிறுத்திக் கொள்ளுதல்) உயிராற்றலை தன்னிடத்து கொண்டிருக்கவில்லை. பிராணன் வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் மேற்சொன்ன மூன்று செயல்களும்.
பிராணன் ஒரு உடல் உறுப்பு அன்று. ஆகையால் நாம் அதனை காணமுடியாது. சுவாசிப்பதைக் கொண்டு அது இருப்பதை யூகிக்கலாம். காற்று சுவாசமாக உள்ளே இழுக்கப்படுகிறது. பிராணனின் ஒரு குறிப்பிட்ட வேலையினால், அது வெளியே தள்ளப்படுகிறது. இவ்வாறு பிராணன் (உடலில் தங்கி) வேலை செய்து கொண்டிருக்கிறது.
சிலர் அநேக பிராணன்கள் இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் ஒன்று தான் என்கிறார்கள். உண்மையில் பிராணன் என்பது ஒரு ஆற்றல் தான். ஆனால் நாம் செய்யும் பல்வேறு வேலைகளை வைத்து பார்க்கும் போது பலவாறாக தோன்றுகின்றன.
பிராணயாமம் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. அத்துடன் புலன்களையும், மனத்தையும் செம்மைப்படுத்துகிறது. பிராணயாமத்தினால் நாம் உடலை ஆரோக்கியமானதாகவும், வலுவுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். பிராணயாமத்தினால் உடலில் தேங்கிக்கிடக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்படுகிறது. பிராணயாமத்தில் ஈடுபடுபவர்கள் சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து விடுபடுவார்கள். பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகத்தில் நல்ல தேஜஸ் தோன்றும்.
பிராணயாமப் பயிற்சினால், நுரையீரல் முழுவதும் போதிய பிராணவாயுவை பெறுகிறது. அதற்கு கிடைக்கும் ரத்த்தின் அளவும், தரமும் அதிகமாகிறது. உடலின் எல்லாத்திசுக்களுக்கும், செல்களுக்கும் ஏராளமான சுத்தரத்தமும், நிணநீரும் கிடைக்கின்றன. உயிர்களின் வளர்ச்சியை பிராணயாமம் துரிதப்படுத்துகிறது.
பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் கவனிக்க வேண்டியது
பிராணயாமப் பயிற்சிகளை செய்வதற்கு குறிப்பிட்ட யோக ஆசன நிலைகள் சிறந்தவை. எல்லா பிராணயாமப் பயிற்சிகளையும் ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் தான் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது முதுகு, கழுத்து, தலை ஆகியவை நேராக இருக்க வேண்டும்.
பிராணயாமம் செய்யும் முன் உடலையும், உள்ளத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவும் சவாசனத்தை செய்து பிறகே பிராணயாமத்தை தொடங்க வேண்டும். யோகசானங்கள் செய்வதற்கு பலவித கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் சவாசனம் என்ற சாந்தி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளுகளும் இல்லை. குறிப்பாக நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சவாசனத்தை செய்வதன் மூலம் நோயின் வலியையும், மனக்குழப்பத்தையும் தணித்துக் கொள்ளலாம். மிகச்சிறந்த ஆசனம் இது.
சவாசனம் என்ற சாந்தி ஆசனம் செய்யும் முறை
முதல்நிலை:- விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்ந்தாற் போல் நீட்டிக் கொள்ளவும். கைகளை பக்கத்தில் உடலில் சேர்த்தாற் போல் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கையும், விரல்களும் தன்னிச்சையாய் பாதி மூடியும், பாதி மூடாமலும் இருக்கலாம். கழுத்து நேராய் வளையாமல் இருக்க வேண்டும். முகம் பக்கங்களில் திரும்பாமல் மேற்கூரையை நோக்கி இருக்க வேண்டும். கண்களை முழுவதும் மூடிக் கொள்ளலாம். அல்லது லேசாக பாதியும் மூடியும் இருக்கலாம். ஆனால் சிமிட்டல் கூடாது. உடல் முழுவதும் விறைப்பு இருக்க கூடாது. தளர்வான நிலையில் இருக்க வேண்டும். உடலின் எந்த பகுதியையும் இழுத்து பிடித்த இறுக்கமான நிலையில் வைத்திருக்க கூடாது. மிகமிக தளர்வாக நெகிழ விட வேண்டும்.
இரண்டாவது நிலை:- மனத்தை வேறு எந்த நினைவிலும் பதிய விடாமல், எந்த எண்ணத்தையும் மனதில் நுழைய விடாமல் தடுத்து கீழ்வருமாறு நினைக்கவும். நல்ல வெயில் காலத்தில் ஜில்லென்ற குளிர்ச்சியான தென்றல் காற்று உடலில் படுவது போல் கற்பனை செய்து கொள்ளவும். இது போன்ற காற்று நீங்கள் ஆசனம் செய்யும் இடத்தில் வீசுவதாகவும், அது உடல் முழுவதும் ஊர்ந்து பரவி சுகமளிப்பதாகவும், அதனால் உடல் புளகாங்கிதமடைந்து இன்பம் அனுபவிப்பதாகவும் நினைவில் அனுபவிக்க வேண்டும்.
இதற்கடுத்து நமது உடலில் இருக்கும் உபாதைகள் முழுவதும் சிறிது சிறிதாக நம்மை விட்டு நீங்குவதாக எண்ணவும். சோர்வு, மனஅழுத்தம், காயங்கள், வேதனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக கழன்று வசந்த கால ஓடையின் அருகில் இருக்கும் மண் பெயர்ந்து விழுவதை போல் கழன்று ஓடையில் விழுந்து போவதாக உணரவும். உடல் களைப்பு நீங்கி மிகவும் ஆரோக்கியமடைந்து கொண்டு வருவதாக எண்ணிக் கொள்ளவும்.
மூன்றாவது நிலை:- இதே போன்ற உணர்வு நிலையில் உடலின் ஒவ்வொரு அவயங்களையும், அதாவது கால் விரல்கள் முதல் உச்சந்தலை வரை ஒவ்வொரு அவயங்களாக நினைத்துக் கொண்டு கீழ் வரும் சாந்தி ஜெபத்தை மனதில் மெதுவாக உச்சரிக்க வேண்டும். உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் நோய் உள்ளவர்கள் இப்படி ஜெபத்தை உச்சரிக்கும் போது, நோய் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதி வரும் போது அந்த பாகத்தில் சிறிது நினைவை நிறுத்தி, அங்கிருக்கும் நோய் விலகுவதாகவும், அங்கு சுத்த ரத்தம் பாய்ந்து சுகமடைவதாகவும் நினைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு மேற்கொண்டு நினைக்க வேண்டிய அவயங்களில் மனதை செலுத்தலாம்.
சாந்தி ஜெபம்:-
” கால் விரல்களே! உங்களுக்கு தளர்ச்சியை அளிக்கிறேன். ஓம் சாந்தி. பாதங்களே தளர்வீர்களாக ஓம் சாந்தி. கெண்டைக்கால்களே! பலம் அடைவீர்களாக; தளர்ச்சி உண்டாகட்டும் ஓம் சாந்தி. முழங்கால்களே! விழிப்பாய் இருங்கள். துர்நீரை சேரவிடாதீர்கள்; ஓம் சாந்தி. தொடைகளே தளர்வீர்களாக இதோ உங்களுக்கு சுகமளிக்கிறேன்; ஓம் சாந்தி. ஓ மர்மஸ்தானமே! நீ ஆரோக்கியமாக இருக்கிறாய்.; பூரணமாய் இருக்கிறாய்; அடக்கமாய் இரு. என் இஷ்டப்படி நடப்பாயாக ஓம் சாந்தி. மலக்குடலே! உன்னிடம் சேரும் கழிவுகளை எல்லாம் அவ்வப்போது ஒழுங்காக வெளியேற்றும் ஆற்றலை பெறுவாய்; ஓம் சாந்தி. சிறுகுடலே நீ ஆகாரத்தை நன்கு கிரகித்து உடலுக்கு வலிவை தருவாயாக. ஓம் சாந்தி. பித்தப்பையே! நீ அளவான பித்தத்தை அளி; ஓம் சாந்தி. மண்ணீரலே! உன் பணி அபரிமிதமானது; நீ சீரஞ்சீவி! நீ சுகமடைவாயாக. ஓ பாங்கிரியாஸ் என்ற உத்தம உறுப்பே! ஆகாரத்தின் சர்க்கரையை நன்றாய் மாற்றுவாயாக; உன் துணை முக்கியம். ஓம் சாந்தி. அட்ரீனல் கோளமே! நீயே இருதயத்தை ஆட்டி வைக்கிறாய்; நீ சிறப்பாயாக. ஓம் சாந்தி. முதுகெலும்பு எனும் மேரு தண்டமே! நீயே இந்த சரீரத்தை தாங்குகிறாய்; நீ என்றும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பாயாக உன்னை வாழ்த்துகிறேன். ஓம் சாந்தி.
மனத்தை உள்முகமாகவே நுரை ஈரல்களை நினைத்து அதன் ஒவ்வொரு சிறிய சந்துகளிலும் ஆரோக்கியம் ஊடுருவி பாய்வதாக பாவனை செய்து கொண்டே, “உன்னால் தான் உடல் வாழ்கிறது. நீயே பிராணனுக்கு ஆதாரம். கரியமில வாயுவை வெளியில் துரத்தி அகற்றவும். பிராணவாயுவினால் ரத்தத்தை சுத்தி செய்யுவம். எந்த நோய்க்கும் இடம் கொடுக்காதே. என்றும் ஆரோக்கியமாக இரு. ஓம் சாந்தி. ஏ இருதயமே உனக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள். என்று ஒவ்வொரு உறுப்புகளையும் மனதில் தியானிக்கவும்.
நான்காவது நிலை:- இந்த ஜெபத்தின் மூலம் உடல் உறுப்புகளை மனக்கண்ணால் தியானித்த பின், மனத்தை புருவ மத்தியில் நிறுத்தி மனத்தை எங்கும் செல்லவிடாமல் ஐந்து நிமிடம் தியானத்தில் இருக்கவும்.
பலன்கள்:-உடலின் சக்தி அதிகரிக்கும். களைப்பு நீங்கும். உற்சாகம் மேலிடும். நரம்புகள் அனைத்தும் பலம் பெறும். மனம் தீர்க்கமான அமைதி அடையும். வசப்படும். புத்தி தெளிவடையும். எதிலும் ஆழ்ந்த கவனமும், விழிப்புணர்வும் ஏற்படும்.
அடுத்த தொடரில் பிராணயாம பயிற்சிகளின் வெவ்வேறு வடிவங்களையும், அத்துடன் பிராணயாமம் செய்ய உகந்த சுகாசனம் பற்றியும் பார்க்கலாம்.

மூச்சுப்பயிற்சியினால் என்ன பயன்? : யோகாசன பயிற்சி 

கடந்த தொடரில் மூச்சு பயிற்சியின் பல்வேறு வடிவங்களை வரும் தொடரில் பார்க்கலாம் என்று
கூறி முடித்திருந்தோம். ஆனால் அதற்குள் போவதற்கு முன், நாம் உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சு உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை நிகழ்த்துகிறது என்று இந்த பகுதியில் விளக்கம் தெரிந்து கொள்ளலாம்.
யோகாசனப் பயிற்சிகளாலும், மூச்சு பயிற்சிகளாலும் உடலுக்கு என்ன பயன் விளையக்கூடும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருப்பது இயல்பு. பொதுவாக அதுவொரு ஆரோக்கிய பயிற்சி என்பது மட்டும் தான் வெளிப்படையாக தெரிந்த செய்தி. ஆனால் யோகாசனப்பயிற்சிகளும், மூச்சு பயிற்சிகளும் உடலில் அரிதான பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதே உண்மை. இன்றைக்கு இயங்கும் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாத மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
நமது மூளையும் ஏறக்குறைய இதே அடிப்படையில் செயல்பட்டு தான் மனிதனை உலகத்தின் உயர்ந்த பரிணாம அதிசயமாக மாற்றியிருக்கிறது. இன்று வரை மனித மூளையின் முழு ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்திருக்க முடியவில்லை. ஆனால் வியத்தகு செயல்பாட்டை கொண்ட சில விஞ்ஞானிகளால் மட்டும் உலகின் அரிதான கண்டுபிடிப்புகளை வெளியிட முடிந்திருக்கிறது. இதற்கு காரணம், அவர்களின் உடல் அதிகமான மின்காந்த செயற்பாடுகளை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
இதை வேறுவகையில் பார்க்கலாம். இந்த பூமி ஒரு மிகப்பெரிய இயற்கை காந்தம் என்பது உண்மை. இதன் காந்த அலைகள் அதைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 66 ஆயிரம் மைல்கள் விட்டத்திற்கு ஒரு அடர்த்தியான பரப்பளவில் அலைகளாக விரிந்து கிடக்கிறது. அதன் வட துருவம் வடஅமெரிக்கா வரையிலும், தென்துருவம் தென்விக்டோரியா வரையிலும் படர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியானால் இந்த காந்த எல்லைக்குள் வசிக்கிற அனைத்து உயிரினங்களும் மின்காந்த துணுக்குகள் தான் என்பதில் மாற்றமில்லை. மின்காந்த சக்தி விதிகளுக்கு உள்பட்டு தான் இந்த உலகமும், அதனுள் இருக்கும் நமது உடலும், உறுப்புகளும் இயங்குகின்றன.
மின்காந்த விதிகளின்படி நமது உடலும் வடதுருவம், தென்துருவமாக பிரிக்கப்பட்டுள்ளது.
காந்த சக்தியின் அடிப்படையில் உடலை ஆராயும் பொழுது மேலிருந்து கீழாக தலை, கைகள்,இடுப்பு வரை மேல்பகுதி வடதுருவமாகவும், இடுப்பிற்கு கீழ்புறம், கால்கள் முதலியவை தென்துருவமாகவும் அமைகின்றன. பக்கவாட்டில் பார்க்கும் போது வலது கை, முன் கை, வலது பாதி வடதுருவமாகவும், இடது கை, முன் கை என்று உடலின் இடப்புறம் முழுமையும் தென்துருவமாகவும் அமைகின்றன. உடலின் முன்புறம் அதாவது, நெற்றி, முகம், மார்பு, வயிறு இவைகள் வடதுருவமாகவும், உடலின் பின்புறமான பிடரி, கழுத்தின் பின்புறம், முதுகுத்தண்டு இவைகள் தென்துருவமாகவும் அமைகின்றன.
இந்த உடல் அமைப்பின் நடுநேர் கோட்டில் தான் மனித உடலை இயக்கும் 7 ஆதார சக்கரங்கள் (சுரப்பிகள்) அமைந்துள்ளன. இந்த சுரப்பிகள் முழுமையாக காந்த ஆற்றலின் விதிகளின் அடிப்படையில் சிறப்பாக இயங்கி மனித உடலையும், மூளையின் ஆற்றலையும் செம்மைப்படுத்துகின்றன. விஞ்ஞானிகளும், மருத்துவஉலகமும் மனித உடற்கூறு இயலையும், பிரபஞ்சத்தின் சக்தி ஆற்றல் அந்த உடலில் செயல்படும் விதத்தையும் கணிக்கும் முன்பே, யோக சக்தியில் வளர்ந்த யோகிகள் மனித உடலின் இந்த சக்கரங்களையும், அவற்றில் மின்காந்த ஆற்றல் செயல்படும் விதத்தையும் துல்லியமாக கணித்து அந்த ஆற்றலை செழுமைப்படுத்தும் விதத்தையும் உலகிற்கு அளித்தனர். அது தான் யோகாசனங்களும், மூச்சுப்பயிற்சியும்.
யோகிகளின் கூற்றுப்படி, மனித உடல் 7 சக்கரங்களில் இருந்து இருகூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சக்கரம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது முனைப்பு. இந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள நரம்புகள் மூளையில் உள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பிகளோடு தொடர்புடையவை. இந்த குறிப்பிட்ட சக்கரங்கள் அல்லது முனைப்புகள் தூண்டப்படும் போது அந்த குறிப்பிட்ட நாளமில்லா சுரப்பிகள் செவ்வனே இயங்கி உடல் உறுப்புகளை சரியாக இயங்க செய்கின்றன. இந்த சக்கரங்களின் மூலமாகவே உடலின் ஜீவசக்தி பல பாகங்களுக்கும் அனுப்பபடுகிறது என்கிறார்கள். ஆக, இந்த சக்கரங்கள் இயங்க தேவையான சரியான மின்காந்த ஆற்றலை அவற்றுக்கு நாம் தொடர்ந்து அளித்திட வேண்டும். அதற்கு உதவுவது தான் யோகசனங்களும், மூச்சுப்பயிற்சியும்.
இப்போது இந்த சக்கரங்கள் என்று சொல்லப்படக்கூடிய 7 ஆதாரங்களையும் மருத்துவரீதியாக பார்க்கலாம்.

1. மூலாதார சக்கரம்
இந்த சக்கரம் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இருக்கிறது. இதுவே குண்டலி சக்தியின் இருப்பிடம் என்பார்கள். இது பாலுணர்வு தொடர்பான உணர்வுகளுக்கு இருப்பிடம். இதன் மையம் மூளையிம் அடிப்புறமாகும். ஆண்களில் டெஸ்டிஸ் எனப்படும் உறுப்பும், பெண்களில் சினைப்பையும் இதன் பிரதிபலிப்பாகும்.
2. சுவாதிஷ்டான சக்கரம்
இந்த இடத்தில் சோலார் பிளக்ஸ் என்று சொல்லப்படும் நரம்பு மண்டலம் உள்ளது. இது அட்ரீனல் சுரப்பிகளுடனும், கழிவு மண்டலத்துடனும் தொடர்புள்ளது. சிறுநீரக மண்டலம் இருக்கும் இந்த இடம் ஆண்குறி அல்லது பெண்குறி. இது குதத்தையும், கால்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. கர்ப்பபையும், சினைப்பையும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
3. மணிபூரக சக்கரம்
இதன் இருப்பிடம் தொப்புள். இது அக்கினி சக்தியாக கருதப்படுகிறது. இது கணையத்துடன் தொடர்புடையது. வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்றவை இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.
4. அனாகத சக்கரம்
இது இருக்கும் இடம் இதயம். இது தைமஸ் சுரப்பியுடன் தொடர்புடையது. இது இதயத்தையும், நுரையீரலையும் கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பு மண்டலம் என்னும் அதி முக்கிய நரம்பு மண்டலம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
5. விசுத்த சக்கரம்
இதன் இருப்பிடம் கழுத்து மற்றும் பின்புற எலும்புகள் அமைந்துள்ள இடம். காதுகள், மூக்கு, தொண்டை, கண்கள், உணவுக்குழல், பாரா தைராய்டு ஆகியவை இதன்கட்டுப்பாட்டில் உள்ளன. இது தைராய்டு சுரப்பியை குறிக்கிறது.
6. அஜ்ந சக்கரம்
இது முளையின் நடுமையத்தில் வெளிப்புறமாக இரண்டு புருவ மத்தியில் அமைந்துள்ளது. இது பீனியல் கிளாண்ட் எனப்படும் சுரப்பியைக் குறிக்கிறது. இந்த பீனியல் கிளாண்டுக்கு மூன்றாவது கண் என்ற பெயர் உண்டு. இது மூளையின் கீழ்புறத்தையும்,காதுகளையும், மூக்கையும் கட்டுப்படுத்துகிறது.
7. சகஸ்ரார சக்கரம்
இது பிட்யூட்டரி சுரப்பியை குறிக்கிறது. தலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிட்யூட்டரி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்ற பெருமை கொண்டது. அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.
ஆக..இந்த 7 சக்கரங்களை தூண்டி நன்றாக செயல்படும் படி செய்யவும், உடலுக்கு வரும் நோய்களை தடுத்து நிறுத்தவும் வந்த நோய்களை குணப்படுத்தவும் உடலுக்கு இயங்கும் காந்தசக்தியை வலுப்படுத்தவும் மூச்சுப்பயிற்சியும், யோகப்பயிற்சியும் உதவுகின்றன. அதாவது நமது உடலுக்குள் வலுவான காந்தசக்தியை இந்த பயிற்சிகள் உருவாக்குகின்றன. ஒருவர் மிகவும் சராசரி அறிவுத்திறனுடன், எதிலும் பிடிப்பில்லாமல் இயங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த பயிற்சிகளை செய்து வருகையில் மேற்கண்ட சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு மிகுந்த சுறுசுறுப்புடனும், நல்ல நினைவாற்றலுடனும், மிகுந்த திறனுடனும் விளங்கும் நபராக மாற்றத்தை காண முடியும்.
இந்த மின்காந்த சக்திகள் எப்படி நோய்களை குணப்படுத்துகின்றன என்பதற்கு வேறு ஒரு உதாரணத்தையும் கூறலாம். நமது அன்றாட வாழ்வில் காற்றில் கலந்திருக்கும் எத்தனையோ நுண்கிருமிகள் நமது மூச்சின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு உடலுக்குள் புகுந்து விடுகின்றன. ஆனால் இந்த நுண்கிருமிகளை எல்லாம் நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் கொன்று போட்டு உடலை பாதுகாக்கின்றன. அதாவது குறிப்பிடத்தக்க வெப்பம் உடலில் உருவாக்கப்பட்டு இந்த நோய்க்கிருமிகள் கொல்லப்படுகின்றன என்பதே உண்மை. இது போல் அதீதமான திறனுடைய வெப்பத்தை யோகாபயிற்சியும், மூச்சு பயிற்சியும் நமக்கு தருகிறது.
இந்த பயிற்சிகளால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்குள் நுழையும் கிருமிகள் தடுக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கிறது.
இதுதவிர பயிற்சிகளின் உச்சத்தில் ஒருவரால் கண்களால் கூட பொருள்களை நகர்த்தும் ஆற்றலை (சைக்கோகீனசிஸ்) என்ற ஆற்றலை பெறும் அளவுக்கு கூட முன்னேற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சிவனின் மூன்றாவது கண் என்பது கூட ஒரு வித ஆற்றலின் வெளிப்பாட்டு வடிவம் தான்.
இனி வரும் தொடரில் மூச்சுபயிற்சியின் பல்வேறு வடிவங்களையும், இந்த பயிற்சிகளால் உடலில் என்ன மாறுதல் நடக்கும் என்பதையும் பற்றி பார்க்கலாம்.

பெண்களுக்கு வசீகர முகத்தை உருவாக்கும் பத்மாசனம்: யோகப் பயிற்சி 8

கடந்த தொடரில் மூச்சு பயிற்சிகளின் பல்வேறு வடிவங்களை பார்க்கலாம் என்று கூறியிருந்தோம். இது பற்றி இப்போது பார்க்கலாம்.
பொதுவாக, சுவாசிக்க காற்று இல்லாமல் நம்மால் சில நிமிடங்கள் கூட இயலாது. நமது காற்று மண்டலத்தில் லட்சக்கணக்கான வாயு அணுக்கள் கலந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து நமது உடல் பிராணவாயுவான ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்க எடுத்துக் கொள்கிறது. மூச்சுக்குழாய் வழியாக செல்லும் ஆக்சிஜன் நுரையீரலில் நன்கு வடிகட்டப்பட்டு உடலின் அனைத்து நுண்ணிய உறுப்புகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தூய ஆக்சிஜனை உடலின் இயங்கு மண்டலங்களுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஹீமோகுளோபின் என்ற அயப்புரதம் எடுத்து செய்து வருகிறது. இப்படி ஆக்சிஜனை முன்னோக்கி தொடர்ந்து எடுத்து செல்ல நாம் மூச்சை இழுத்து விடும் போது அது சீராக இயங்குகிறது.
ஒரு நிமிடத்திற்கு 15 முறையென்று ஒரு நாளுக்கு சுமார் 21, 600 தடவைகள் என்ற எண்ணிக்கையில் மூச்சை இழுத்து வெளிவிட்டு வருகிறோம். இந்த சுவாச எண்ணிக்கையை குறைக்கும் போது ஆயுள் அதிகரிக்கும் என்பது தான் யோகிகள் சொல்லிய சூட்சுமம். இதையே தற்கால அறிவியலும் சீரான மூச்சு பயிற்சிகளின் மூலம் சுவாச நோய்கள் வராமல் தடுப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவும் என்றும் கூறுகிறது. ஆகவே, உயிருக்கு ஆதாரமான மூச்சுக்காற்றான ஆக்சிஜனை மூச்சுப்பயிற்சியின் மூலம் நாம் முழுமையாக உடல் பெறும் படி செய்ய முடியும்.
மூச்சு பயிற்சியை பற்றி பல்வேறு நூல்கள் வந்துள்ளன. வெளிநாடுகளிலும் கூட இதனை தனியே கற்பிக்கும் பயிற்சி மையங்கள் வந்துவிட்டன. ஆனால் இங்கு தரப்படுகிற சில மூச்சு பயிற்சிகள் போதுமானவை. மிகவும் நன்மை தருபவை. இவற்றை முறைப்படி செய்யும் போது சுவாச மண்டலம் சீராக இயங்குவதுடன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது. இவற்றில் சில வகையான மூச்சு பயிற்சிகளை பார்க்கலாம்.
வயிற்று சுவாசம்
நாம் மூச்சை உள்ளிழுப்பதையும், வெளிவிடுவதையும் இயல்பாக கவனித்தால் குறிப்பாக வயிற்றின் மேல் இரண்டு உள்ளங்கைகளையும் வைத்து பார்த்தால் நமது மூச்சு இயங்குவதை உணர முடியும். சாதாரணமாக இப்படி இயங்கும் மூச்சை ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவில் செய்தால் அது வயிற்று சுவாசமாகும். அதாவது மூச்சை உள்ளிழுக்கும் போது வயிறானது வெளிப்புறமாக நன்கு வில் போல் விரிவடையும் படியாக ஆழமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்த நிலையில் அதிகமான பிராணவாயு நுரையீரலின் கீழ் பாகங்களில் உள்ள காற்றறைகளில் சென்று நிரம்புகின்றன.
மீண்டும் மூச்சை வெளிவிடும் போது வயிறானது உள்நோக்கி குழியும் படி நுரையீரலில் இருக்கும் காற்றானது முழுமையாக வெளியில் செல்லும்படி மூச்சை வெளிவிட வேண்டும். இப்போது நுரையீரலின் கீழ்ப்பாகங்களில் தேங்கியுள்ள காற்றானது முழுமையாக வெளியேற்றப்பட்டு புதிதாக உள் நுழையும் தூய காற்றை ஏற்றுக் கொள்ளும் வகையில் காத்திருக்கும். இப்படியாக திரும்ப திரும்ப செய்ய வேண்டும். இந்த பயிற்சியின் போது மிகுந்த பிரயாசைப்பட்டு மூச்சை உள்ளிழுக்கவோ, வெளிவிடுவதோ கூடாது. இயல்பாக இருக்க வேண்டும்.
இந்த மூச்சு பயிற்சியை நின்று கொண்டோ, யோக ஆசனங்களில் ( வரும் தொடர்களில் ஆசனங்களை பார்க்கலாம்). வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம் போன்ற அமர்ந்த நிலை ஆசனங்களில் இருந்தோ செய்யலாம். 3 அல்லது முறை இந்த பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சியின் போது மனம் வேறு திசையில் அலைபாயாத வண்ணம் இருக்க இரண்டு உள்ளங்கைகளையும் வயிற்றின் மேல் படும் படி வைத்து மூச்சு உள் நுழைவதையும், வெளியில் வருவதையும் கவனிக்க வேண்டும்.
இந்த சுவாச பயிற்சியின் மூலம் வயிற்றின் உள்உறுப்புகள் நன்றாக சுருங்கி விரிகின்றன. வயிற்று தசைகள் போதிய பலம் பெறுகின்றன. குடலின் கழிவுகள் நீங்கி குடல் சுத்தமடைகிறது. நுரையீரலின் அடிப்பகுதியில் உதரவிதானத்திற்கு மேலே அமர்ந்துள்ள நுரையீரலின் இடது மற்றும் வலது இதழ்களின் காற்று குமிழங்கள் மற்றும் நுண்ணிய இரத்த குழாய்கள் நன்கு விரிவடைகின்றன. பெண்கள் இந்த பயிற்சிகளை பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது கூடுதல் பலன்களை தருவதாக அமையும். இங்கு பத்மாசனம் செய்வது பற்றி பார்க்கலாம்.
பத்மாசனம்
‘பத்ம’ என்றால் தாமரை என்றொரு பெயர் உண்டு. அழகிய எப்பொழுதும் மலர்ந்த என்றும் சொல்லலாம். அதாவது தாமரை மலர் போன்று எப்பொழுதும் மலர்ந்த முகமாய் காட்சியளிக்க இந்த ஆசனம் உதவுகிறது. தண்ணீரின் அழுத்தத்தை தாண்டி தாமரை மலர் கம்பீரமாய் தனது இதழ்களை விரித்து காட்சியளிப்பது போல் முகமானது மிகவும் கம்பீரமாக காட்சியளிக்க பத்மாசனம் ஒரு கருவியாக இருக்கிறது. தாமரை மலர் தனது தண்டை நிமிர்த்தி தண்ணீரிலிருந்து நிற்பது போல், பத்து விரல்களையும் விரித்து முத்திரை பதித்து மலர்ந்த முகத்துடன் அமரும் முறையே பத்மாசனம்.
பத்மாசனம் செய்வதற்கு தளர்ந்த, மென்மையான, ஆடைகளை அணிய வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட தரைவிரிப்பு நல்லது. இந்த விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும். முதலில் வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இடது காலை மடித்து இடது பாதத்தைத வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மற்றும் நீட்டிய விரல்கள் வெளியில் தெரியுமாறு புறங்கையை வலது முழங்கால் மற்றும் இடது புறங்கையை இடது முழங்காலின் மீது கைகளின் பெருவிரல் நுனி மற்றும் ஆட்காட்டி விரல் நுனியை வட்டமாக தொட்டு, இரண்டு கைகளிலும் சின் முத்திரை பதிக்கவும். நெஞ்சு மற்றும் முதுகுத்தண்டை நிமிர்த்தி, கண் இமைகளை மூடி, சீரான சுவாசத்தில் மனதை அலைபாயவிடாமல் வேறு எந்த சிந்தனை குறுக்கீடும் இன்றி இருக்கவும். சின் முத்திரை பிடித்து கைகளை மடிக்காது நேராக வைக்கவும்.
ஒரு நிமிடம் வரை இந்தப் பயிற்சியை செய்து பின் கண் இமைகளை திறந்து மெதுவாக கைவிரல்களை விடுவித்து அதன்பின் இடது காலை முதலிலும், வலது காலை அடுத்தும் பிரித்து கால்களை நீட்டி பத்மாசனத்திலிருந்து விடுபட வேண்டும். இது போல் 15 முதல் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யுங்கள்.
பலன்கள்
பத்மாசனம் அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையான ஒரு ஆசனமாக இருக்கிறது. இந்த பயிற்சியால் பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் முழங்கால்கள் வலுவடைகிறது. மனம் அமைதி பெறுகிறது. தொடை, இடுப்பு மற்றும் உடலின் தேவையில்லாத கொழுப்பு கரைகிறது. கூன் முதுகு வராமல் தடுக்கிறது. பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் கூட எளிதாக செய்து அதிக பலன்களை பெறக்கூடிய ஆசனம் இது.
சின்முத்திரை
இதனை தியான முத்திரை என்றும் சொல்லலாம். இது யோக முத்திரை. ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் அழுத்தம் அதிகம் தராமல் சீராக அழுத்தினால் மூளையின் திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் வளரும். படபடப்பு, மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை, தூக்கமின்மை, சோர்வு போன்ற நிலைகள் நீங்கும். முத்திரைகள் குறித்து வரும் தொடர்களில் விரிவாக பார்க்கலாம். அடுத்த தொடர்களில் மார்பு சுவாச பயிற்சி மற்றும் வஜ்ராசனத்தையும், வேறு சில முத்திரைகளையும் அவற்றின் பலன்களையும் பார்க்கலாம்.
தொடரும்….

இடுப்பு கால்களை வலுவாக்கும் வஜ்ராசனம் : யோகப் பயிற்சி 

நுரையீரலின் நுண்ணிய ரத்தக்குழாய்களை நன்றாக திறக்க வைக்க உதவும் வயிற்று சுவாச பயிற்சியை பற்றி கடந்த தொடரில் பார்த்தோம். அது போல் நுரையீரலும்,
இதயமும் பலம் பெற மார்பு சுவாசப்பயிற்சி நன்றாக உதவுகிறது. நுரையீரல்களின் கண்ணறைக்குள் நன்றாக பிராணவாயு சென்று வரும் பட்சத்தில் உடலின் நுண்ணிய பாகங்களுக்கு வேண்டிய பிராணவாயு நன்றாக சென்று சேருகிறது.
தூய்மை பெறும் இரத்தத்தில் கலக்கும் பிராணவாயு இதயத்தால் நன்றாக அழுத்தி வெளித்தள்ளப்படும் போது அது உடல் முழுவதும் நன்றாக சுற்றி வந்து உறுப்புகளுக்கு போதிய உணவை தருகிறது. எனவே மார்பு சுவாசத்தின் மூலம் நுரையீரல் மற்றும் இதயம் ஆகிய இரண்டு முக்கிய உறுப்புகளும் சிறப்பாக பணியை செய்ய உதவுகின்றது.
செய்முறை
இரண்டு கைகளையும் மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் கடைசி விலா எலும்புகளை ஒட்டியபடி வைக்க வேண்டும். இப்போது கட்டை விரல் மார்பு நுனியை தொட்டவாறு இருக்க வேண்டும். அதாவது, மார்புக்கூட்டெழும்பு ஒன்று சேரும் இடத்தை தொட்டவாறு இருக்க வேண்டும். இப்போது மனதை மார்பு பகுதியில் செலுத்தியவாறு மூச்சை நன்றாக இழுக்கவும். அப்பொழுது மார்பு நன்றாக விரிவடையும். பின் மூச்சை நிறுத்தாமல் மூச்சை நிதானமாக வெளிவிடவும். நுரையீரலுக்குள் ஏற்கனவே இழுக்ப்பட்ட காற்று முழுவதும் நன்கு வெளியேறும் படி மூச்சை வெளிவிடும் போது மார்பு சுருங்கும். இந்த நிலையில் நமது கவனம் விரிந்து சுருங்கும் மார்பின் மீது மட்டும் பதியும் படி கண்களை இறுக்கமில்லாமல் மூடி மூச்சை கவனிக்கவும். உடல் களைப்படையாமல் ஒரு சுற்றுக்கு 10 என்ற அளவில் 10 சுற்றுக்கள் வரை செய்யலாம்.
இந்த பயிற்சியை சாதாரணமாக நின்று கொண்டோ அல்லது சாதாரணமான உட்காரும் நிலை ஆசனமான சுகாசனத்தில் இருந்தும் செய்யலாம். இந்த பயிற்சியால், இரத்தம் சுத்தமடைகிறது. நுரையீரல் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடாமல் செல்கிறது. சிலருக்கு எளிய வேலைகள் செய்தால் கூட மார்பு படபடப்பு காணப்படும். மார்பு சுவாசத்தை தொடர்ந்து செய்து வரும் போது இந்த படபடப்பு குறைந்து இதய தளர்ச்சி நீங்கிவிடும். நுரையீரலின் நடு மற்றும் கீழ் அறைகளின் காற்றறைகள் மற்றும் அங்கு இருக்கும் நுண்ணிய இரத்த குழாய்கள் நன்கு விரிவடைகின்றன. இதனால் பிராணவாயு முழுவதுமான உட்கிரகிப்பட்டு உடலுக்கு சக்தி ஏற்படுகிறது.
இந்த எளிய மூச்சு பயிற்சியானது, எந்த வித சிரமும் இல்லாமல் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு மூச்சுபயிற்சியாகும். இதே விதத்தில் அமைந்தது தான் மேல்மார்பு சுவாசப்பயிற்சியும். இதில் இரண்டு உள்ளங்கைகளையும் தோள்பட்டைகளுக்கும் கீழே மார்பின் மேற்பகுதியில் வைத்துக் கொண்டு, மணிக்கட்டு பகுதிகள் மார்பின் மேல் பகுதியை தொட்டவாறு இருக்க வேண்டும். இப்போது மனதை மார்பின் மேல் பகுதியில் நிலை நிறுத்த வேண்டும். பின் வயிற்றை லேசாக உள்ளிழுக்கவும். இதன் பின் மூச்சை மெதுவாக உள்ளிழுத்தவாறே, சுவாசத்தின் மூலம் மார்பை மேல் நோக்கி தூக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளிவிட்டு மார்பை கீழிறக்க வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது முழுக்கவனமும் ஏறி இறங்கும் மார்பிலும் சென்று வரும் மூச்சிலும் தான் லயித்திருக்க வேண்டும். இந்த பயிற்சியால் மார்பு நன்றாக சுருங்கி விரிகிறது. இந்த பயிற்சியை நின்று கொண்டோ, வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம் போன்ற நிலைகளில் செய்யலாம்.
இந்த பயிற்சியால், மூச்சுபாதை மற்றும் தொண்டையில் உள்ள கசடுகள் நீங்கும். பாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் சங்கீத பிரியர்களுக்கு இந்த பயிற்சியால் நல்ல குரல்வளம் பெற முடியும். இந்த பயிற்சியால் நுரையீரலின் மேற்பகுதியில் உள்ள இடது மற்றும் வலது இதழ்களின் காற்றறைகள் மற்றும் நுண்ணிய இரத்தக்குழாய்கள் பலம் பெறுகின்றன.
இது போன்ற மூச்சு பயிற்சிகளை சில ஆசனங்களில் அமர்ந்த நிலையில் செய்யலாம் என்று யோகாசிரியர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதில் வஜ்ராசனம் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகிறது. உடலை வஜ்ரம் போல் ஆக்கும் அந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பிறந்து நடக்க தொடங்கியது முதல் மனித உடலை தாங்கி நின்று எல்லா செயல்களுக்கும் மனிதனை அழைத்து செல்லும் அடித்தளமாக விளங்கும் கால்களுக்கும், மூட்டுக்களுக்கும் அபாரமான வலிமையை வஜ்ராசனம் தருகிறது. இந்திரனின் மிகப்பலமான ஆயுதமாக விளங்கிய வஜ்ர ஆயுதம் போன்ற உறுதியை இந்த ஆசனம் மனிதர்களுக்கு தருகிறது என்றே சொல்லலாம்.
கடினப்பட்டு பிரயாசையுடன் செய்யும் சில ஆசனங்களை விட எளிய முறையில் செய்ய முடிகின்ற வஜ்ரசானத்தால் கிடைக்கும் பலன்கள் அதிகம். பொதுவாக, யோகாசனங்கள் அனைத்திலும் முதுகெலும்பை ஏதாவது ஒரு கோணத்தில் வளைக்கும் படியாக யோகிகள் வகுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், மனித உடல் முழுவதையும் கட்டுப்படுத்தும் முக்கியமான நரம்புகள் அனைத்தும் முதுகுதண்டு வழியாகவே செல்கிறது. மூளையில் இருந்து கிளம்பி வரும் இந்த நரம்புகள் அனைத்தையும் பாதுகாத்து அவை எங்கு பிரிந்து செல்ல வேண்டுமோ அந்த இடங்களில் முதுகு தண்டவடத்தில் இருந்து தான் பிரிகின்றன. அதனால் தான் மனித உடலில் முதுகெலும்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த முதுகெலும்புகள் சிறுசிறு துண்டுகளால் ஆன 31 எலும்பு வளையங்கள் போன்ற ஒரு அமைப்பாக இயற்கை உருவாக்கி இருக்கிறது.
முதுகெலும்பின் வழி செல்லும் குறிப்பிட்ட நரம்புகளின் இயக்கத்தை வலுப்படுத்த அதற்கேற்ற ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட உறுப்புக்கு செல்லும் நரம்பு ஊக்குவிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் தக்கபடி இவ்வாறு நரம்புகளின் இயக்கம் மாறுபட்டு உடல் வலுப்படுத்தப்படுகிறது.
செய்முறை
விரிப்பின் மீது முழங்காலிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். கால்விரல்களை வெளிநோக்கி நீட்டி உள்ளங்கால் மற்றும் குதிகால்கள் மேல்நோக்கி இருக்கும்படி குதிகால் மற்றும் பாதங்களை தளர்த்தி குதிகால்களின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு முழங்கால்களின் மீது வைத்து முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் மூச்சை சாதாரணமாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள். எவ்வளவு நேரம் இந்த நிலையில் அமர முடிகிறதோ, அதற்கேற்ப பலனும் அதிகம். குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தில் அமரலாம்.
இந்த ஆசனத்தை ஆண்களும் பெண்களும் செய்து வந்தால் இடுப்பு, மூட்டுக்களில் ஏற்படும் இறுக்கம் தளர்ந்து இடுப்பு, கால்கள்,மூட்டுகள், பாதங்கள் ஆகியவை பலம் பெறும். குதிகால்களும் வலுவடையும். சிலருக்கு அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழும் போது குதிகால்வலி காணப்படும். அவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வலி நாளடைவில் மறைந்து விடும். சிலருக்கு தொடர்ந்து செரிமானக் கோளாறு இருந்து வரும். அவர்கள் சாப்பிட்டவுடன் இந்த ஆசனத்தில் 5 நிமிடங்கள் அமர்ந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமடைந்து விடும். இதை கண்கூடாக காணலாம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு திடமான மனநிலை உருவாகும். உடலில் தங்கும் துர்நீரை தேங்கவிடாமல் வெளியேற்றும் ஆசனம் இது. கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதங்கள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். அதற்கு பிறகு செய்வது கூடாது.
நலம் தரும் முத்திரைகள்
கடந்த தொடரில் முத்திரைகள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். பொதுவாக, இந்து கடவுள்கள், ரிஷிகள், முனிவர்கள் தவத்தின் நிலையில் விரல்களை ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வைத்திருப்பதை கவனிக்க முடியும். இந்த அமைப்பு என்பதை முத்திரை என்ற அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள் முன்னோர்கள். மனிதன் நோயின்றி வாழ கண்டுபிடிக்கப்பட்ட யோகாசனங்கள், பிராணயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றின் ஒரு அங்கம் தான் இந்த முத்திரைகளும். இதனை தந்திரக்கலையின் ஒரு பகுதி என்கிறார்கள்.
அக்குபிரஷர் என்று இன்றைய வைத்திய முறை இதனை வகுக்கிறது. அதாவது கைகளிலும், விரல்களிலும் பல சக்கரங்கள் உள்ளன. நமது கைவிரல்களை வெவ்வேறு வகையாக சேர்த்து வைப்பதன் மூலம் இந்த முத்திரைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த முத்திரைகள் உருவாக்கப்படும் போது கை, விரல்களில் இருக்கும் பல்வேறு சக்கரங்கள் இயங்கி சக்தியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உடலிலேயே அதிக நரம்புகள் உள்ள பகுதியாக இருக்கும் அதாவது இன்றைய விஞ்ஞான ரீதியில் பார்த்தால், குறிப்பிட்ட அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன எனலாம். இது பற்றி வரும் தொடர்களில் பார்க்கலாம்.
தொடரும்….

கிழவர்களை குமரன்களாக மாற்றும் சர்வாங்க ஆசனம் : யோகப் பயிற்சி 

கால்கள், இடுப்பு உள்பட உடலுக்கு வலுவூட்டும் வஜ்ராஜசனம் பற்றி கடந்த தொடரில் பார்த்தோம். இப்போது ஒட்டு மொத்த உடலின் பாகங்களுக்கும் பலம் தரும்
சர்வாங்க ஆசனம் பற்றி பார்க்கலாம். பொதுவாக ஆசனங்களை ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் தான் செய்ய வேண்டும். உதாரணமாக சர்வாங்க ஆசனத்தை போன்றே மற்றொரு ஆசனமான சிரசானத்தை செய்து முடித்த பின் கண்டிப்பாக ஏகபாத ஆசனம் என்ற மற்றொரு ஆசனத்தை தொடர்ந்து செய்து விட்டு தான் மற்ற ஆசனங்களை செய்ய வேண்டும்.
அதாவது சிரசானம் செய்யும் போது உடல் தலைகீழான நிலையில் இருக்கும். தலையை தரையில் ஊன்றிய நிலையில் இருப்பதால் இரத்தம் படுவேகமாக தலைப்பகுதியில் பாய்ந்தபடி இருக்கும். இப்படி நிலையில் சிரசில் தேங்கிய இரத்தத்தை உடனடியாக கீழே இறக்க உதவுவது ஏகபாத ஆசனம் மட்டுமே. எனவே, சிரசானத்தை செய்தால் அதற்கு மாற்று ஆசனமாக அடுத்து செய்ய வேண்டியது ஏகபாத ஆசனம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இது போன்று எந்த ஆசனத்திற்கு எது மாற்று ஆசனம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம். இப்போது சர்வாங்க ஆசனம் செய்யும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
மிகச்சிறந்த யோககுருவான யோகி.என்.ராஜன் தனது நூலில் சர்வாங்க ஆசனத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். “ஆசனங்களுள் சிறந்தன, கண்கள் போன்றன இரண்டு. ஒன்று சிரசானம், மற்றொன்று சர்வாங்க ஆசனம். இந்த ஆசனத்தின் பெயரிலிருந்தே எல்லா அங்கங்களும் இயங்குவது போல் தோன்றும். உண்மையில் இந்த ஆசனத்தில் தலை, கழுத்து, இரண்டு தோள்பட்டைகள், இரண்டு கைகளுக்கு தான் வேலை. மற்ற அங்கங்களுக்கு சிறிது கூட வேலையில்லை. அப்படி இருக்க, சர்வாங்க ஆசனம் என்ற பெயர் எப்படி வந்தது? சர்வ அங்கங்களையும் இயக்குவது தைராய்டு கோளம் தான். இது மிக முக்கிய வாய்ந்த ஒரு சுரப்பி. இந்த கோளம் கழுத்தில், அதாவது குரல்வளை என்று சொல்லக்கூடிய இடத்தில் சிறிய தாமரை இதழ் போன்று இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது. இந்த ஆசனத்தில் கழுத்துத் தான் இரத்தம் தேங்கும் இடம். இந்த இடத்தில் தான் தைராய்டு இருக்கிறது. இரத்தம் நன்கு தேங்குவதால் தைராய்டு என்னும் கோளத்திற்கு இரத்தம் பாய்ச்சப்பட்டு நன்கு பலமடைந்து மற்ற உறுப்புகளை அது நன்கு இயக்குவதால் இது சர்வாங்க ஆசனம் என்று பெயர் வந்தது. ”
கிழவன் குமரனாகும் வித்தை:
இந்த உலகில் இளமையை விரும்பாத எந்த கிழவனும் இருக்க முடியாது. அந்த இளமையை பெற எத்தனையோ முறைகள் உள்ளன. அமெரிக்காவில் டாக்டர் வாரனப் என்பவர் கிழவன் குமரனாகும் வித்தையை கண்டுபிடித்தார். அதாவது குரங்கின் தைராய்டை எடுத்து மனிதனுக்கு பொருத்தி விடுவது. இதன் மூலம் மனிதன் இளமையை பெற முடியும் என்று நம்பினார். அப்படி அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவும் முயற்சி செய்ததாக தெரிகிறது. இப்படி தைராய்டு பொருத்தப்பட்ட மனிதனுக்கு வயதாகும் நிலை தள்ளி போனாலும், குரங்கின் தைராய்டு பொறுத்தப்பட்ட மனிதனின் சுபாவமும் குரங்கு போலவே மாறிப்போனதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால் இப்படி எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் மனிதன் எப்போதும் இளமையாகவே இருக்க ஒரு வழி உள்ளதென்றால், அது சர்வாங்க ஆசனத்தின் மூலம் தைராய்டு சுரப்பியை நன்றாக இயங்க செய்து எப்போதும் இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்வது தான். இளமை நீடித்து நிற்க காரணம், தைராய்டு சுரப்பி தான். அந்த தைராய்டை மிகுந்த ஆரோக்கியமாக வைப்பது சர்வாங்க ஆசனம். இந்த சர்வாங்க ஆசனத்தை செய்யும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
சர்வாங்க ஆசனம்:
விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கைகளும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். மூச்சைப் பிடித்து இரண்டு கால்களையும் அப்படியே மேலே தூக்கவும். இத்துடன் இடுப்பையும் தூக்கி முழு உடலும் மேல் நோக்கிய நிலையில் இருக்கும் படி வரவும். (படத்தில் உள்ள படி)பிறகு இரண்டு கைகளையும் மடக்கி இடுப்புக்கு கீழே பிடித்து, உடலை நேராய் நிமிர்த்தவும். தலை முன்பக்கம் குனிந்து முகவாய்க்கட்டை மார்பில் அழுந்தும்படி பார்த்துக் கொள்ளவும். மூச்சை சாதாரணமாய் விடவும் வாங்கவும் செய்யவும்.
முதுகும் கால்களும் வளையாமல் நேராய் சேராய் இருக்க வேண்டும். கால்களை விறைப்பாய் வைத்துக் கொள்ளக் கூடாது. மிக தளர்த்தியாக தொய்யும் படி விட்டு விடவும். வாய் மூடியிருக்க வேண்டும். கைகளின் மேல் சரீர பாரம் முழுவதையும் போட்டு பிடிக்க கூடாது. கைகள் உடலை லேசாய் தாங்கியிருக்க வேண்டும். ஒவ்வொவருக்கும் பலம் இருக்கும் வரை இந்த ஆசனத்தில் இருந்து விட்டு பிறகு ஆசனததை கலைக்கலாம். இறங்கும் போது இடுப்பின் அடியில் தாங்கும் கைகளை தளர்த்தி கைகளின் மேலேயே உடலை மெதுவாக நழுவ விட்டு கொண்டே வந்து கால்களை தரையில் அமர்த்தவும். பிறகு கைகளை பக்கங்களில் நீட்டி வைத்து இளைப்பாறவும்.
மற்ற பயிற்சிகளை செய்து உடலை தன்வசத்தில் வைத்திருப்பவர்களுக்கு இந்த சர்வாங்கசனத்தை செய்வது சுலபமாக வரும். எந்த வித உடற்பயிற்சியும், யோகாசன பயிற்சியும் செய்யாதவர்களுக்கு இது சற்று கடினமாக இருக்கும். சிலருக்கு இரண்டு கால்களை மட்டும் தான் தூக்க வரும். இடுப்பை தூக்க முடியாத படி சிரமப்படுவார்கள். ஆனாலும் விடாமுயற்சியுடன் கைகளை நன்கு ஊன்றி, முடிந்த மட்டும் உடலைத் தூக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் தூக்க முடியவில்லையானால், இடுப்பை பாதி தூக்கிய நிலையில் கால்களை உயர்த்திய படி சற்று நேரம் இருக்க முயற்சி செய்யுவும். கால்களை தரையில் வைத்து விடக்கூடாது. கைகளை இடுப்புக்கு அடியில் கொடுத்து தாங்கிக் கொள்ளும் போது கால்கள் தரைக்கு வராது.
இது போல் 5 முதல் 6 தடவைகள் வரை பயிற்சி செய்தால் கூட நல்ல பலன் உண்டு. இந்த ஆசனம் பலருக்கும் தொடக்க கட்டத்தில் உடனடியாக செய்ய வராது. ஆனால் நாளாவட்டத்தில் சுலபமாக செய்ய கற்றுக் கொண்டு விடலாம். சிலர் உடல் முழுவதையும் தூக்கி முழு ஆசன நிலையையும் எட்டி விடுவார்கள். ஆனால் முகவாய்க்கட்டையானது மார்பில் இடிக்கும் அளவு செய்ய வராது. சிலர் வாயை ஆ வென்று திறந்து முகவாய்க்கட்டையை வைத்து மார்பை இடிக்க முயலுவார்கள். ஆனால் அப்படி செய்வது கூடாது. இந்த ஆசனம் செய்யும் போது வாய் மூடியே இருக்க வேண்டும்.
இப்படி முகவாய்க் கட்டை இடிக்க வராத நிலை இருப்பவர்கள், கைகளை இடுப்புக்கு அடியில் இன்னும் பலமாய் கொடுத்து முதுகை சரியாக நிமிர்த்தினால் முகவாய்க்கட்டை மார்பில் இடித்து ஜாலந்திர பந்தம் ஏற்படும்.
இந்த ஆசனத்தில் கால்கள் தலைக்கு நேராய் இருக்க வேண்டியது முறையானாலும், சிலருக்கு அப்படி நேராய் வைத்திருக்க வேண்டுமானால், சிரமமிருக்கும். அப்படி வைப்பதால், கைகள் அதிக பலத்துடன் இடுப்பை தாங்கிப் பிடிக்க வேண்டியதிருக்கும். இதனால் சிலருக்கு கைகள் மரத்து போக வாய்ப்புண்டு. எனவே கைகள் மீது உடல் எடை முழுவதையும் போட்டு விடாமல், லேசாய் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இந்த குறைகள் எல்லாம் ஏற்படாது.
சிலர் கால்களை விரைப்பாய் வைத்துக் கொள்வார்கள். அப்படி வைத்துக் கொண்டால், கால்களுக்கு அதிக ரத்தம் செல்லும். அதனால் நமது மனமும் அந்த இடத்துக்கே செல்லும். நமக்கு தைராய்டு கோளத்துக்கே அதிக இரத்தம் பாய வேண்டியதால், நமது மனத்தை தைராய்டு கோளத்தினிடமே செலுத்த முயற்சிக்க வேண்டும். முதலில் இந்த ஆசனம் செய்பவர்களுக்கு முதுகு, கழுத்து முதலியவை வலிக்கும். சில நாட்களில் வலி மறைந்து விடும்.
நீண்ட நேரம் செய்பவர்களுக்கு முழங்கை, கழுத்துப் பின்புறம் முதலிய இடங்களில் காய்ப்பு கட்டி விடும். எனவே, முடிந்த வரை இந்த பயிற்சியை நீண்ட கால அளவில் பயிற்சி எடுத்து கூட செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
பலன்கள்:
உயிர்க்கோளமாகிய தைராய்டு இந்த ஆசனத்தால் நன்றாக பலன் பெறுகிறது. இதனால் சகல நோய்களும் விலகுகிறது. நரம்பு பலகீனம், ரத்தமின்மை, சோம்பல், தலைவலி, அசீரணம், மலச்சிக்கல், மூலம், வயிற்றுவலி, குன்மம், மூத்திரக் கோளாறுகள், மார்பு வலி, இருதய பலவீனம், ரத்தக் கொதிப்பு, அப்பெண்டிசிடிஸ், சகலவாதங்கள், காலில் குத்தல், பெரும் வியாதி, காலின் கணுக்களில் நீர் தங்குதல், மலேரியா, மற்ற ஜுரங்கள், மலட்டு தனம், தைமஸ் கிளாண்ட், வீர்யமின்மை, மலட்டு தனம், கண்டமாலை, ஆல்புமின், சர்க்கரை வியாதி கோளாறுகள், வயிற்று போக்கு, மனநிலை கோளாறுகள், வலிப்பு நோய்கள் உள்பட பல வியாதிகள் தீரும்.
குறிப்பு:
இந்த ஆசனத்தை கர்ப்பிணி பெண்கள் மூன்று மாதங்கள் வரை செய்யலாம். இந்த ஆசனம் செய்யும் போது இருமல், தும்மல், கொட்டாவி முதலியன வந்தால் அல்லது வரும் போல் இருந்தால் உடனே சர்வாங்கசனத்திலிருந்து இறங்கி பின்பு தான் இருமவோ, தும்மவோ செய்ய வேண்டும். ஆசனத்தில் இருக்கும் போதே செய்தால் மார்பு பிடிப்பு, கழுத்து சுளுக்கு, காதுக் கோளாறுகள் போன்றவை உண்டாகும். ஆசனத்தில் இருக்கும் போது எச்சில் விழுங்குதல் கூடாது. ஆசனத்தை கலைத்த பின்பு தான் எச்சில் விழுங்க வேண்டும்.
யோக ஆசனங்களை செய்பவர்கள் சில முத்திரைகளை கற்றுக் கொள்வது சிறந்தது என்று சொல்லி வருகிறோம். ஆசனத்தில் இருந்து தியானிக்கும் போது முத்திரைகளையும் கையாளுவதால் குறிப்பிடத்தக்க பலன்கள் உண்டு. இதில் இங்கு தியான முத்திரை குறித்து பார்க்கலாம். இந்த தியான முத்திரை  என்பது ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் அதிக அழுத்தம் தராமல் சீராக அழுத்திய நிலையில் இருப்பது.
இந்த முத்திரையால் மூளையின் சக்தி அதிகரிக்கும். நினைவாற்றல், அறிவாற்றல் வளரும். படபடப்பு, மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் போதல், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும்.
தொடர்வோம்.

இடுப்பு வலியை இல்லாமல் ஆக்கும் திரிகோணாசனம்:யோகப்

பயிற்சி 

உடலில் வாதம் அதிகமானால் சோம்பல் தலைதூக்கும். எந்த வேலையிலும் மனம் ஈடுபடாது. உடலும் ஒத்துழைக்காது.
சிலருக்கு வாதம் அதிகம் ஆகும் நிலையில் பக்கவாதம் ஏற்பட்டு உடலின் ஒரு பக்க உறுப்புகள் செயல் இழந்து போகும் நிலை கூட ஏற்படும். எனவே, இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது திரிகோணாசனம்.
மிகவும் எளிமையான இந்த ஆசனத்தை எவரும் இலகுவாக செய்ய முடியும். இந்த ஆசனம் செய்வதால் நீண்ட கால இடுப்பு வலி மறைந்து போகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. முதுகில் வலி, தோள் பகுதிகளில் சிலருக்கு காணப்படும் வலி இந்த ஆசனத்தால் நீங்கும். உடலின் ஜீவநாடிகள் ஆசனத்தின் மூலம் பலம் பெறுவதால் வாத ரோகங்கள் அண்டாது.
திரிகோணாசனத்தால் முதுகெலும்பு நன்றாக பக்கங்களில் திரும்பி வளைவதால், இளமையான தோற்றம் ஏற்படுகிறது. இனி இந்த ஆசனத்தை செய்வது பற்றி பார்க்கலாம்.
திரிகோணாசனம் செய்யும் முறை:
கால்களை அகலமாக விரித்து நிற்கவும். இரண்டு கால்களுக்கும் இடையில் அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி இரண்டு அடி முதல் மூன்று அடிகள் ஒவ்வொரு குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இருக்கலாம்.
முதுகுதண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் தோளுக்கு நேராய் பக்கவாட்டில் உயர்த்தி நிறுத்தவும். உள்ளங்களை தரையை பார்த்தவாறு இருக்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மூச்சை நன்றாக இழுக்கவும்.
பிறகு மூச்சை மெதுவாக விட்டவாறே இடது கைப்பக்கம் இடுப்பை வளைத்து குனிந்து இடது காலின் கணுக்காலை ஒட்டினாற் போல் தரையைத் தொடவும். வலது கை நேராய் வளையாமல் இருக்க வேண்டும். இப்போது தலையைத் திருப்பி வலது கை விரல்களின் நுனியைப் பார்க்கவும்.
இந்த நிலையில் ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நேராய் நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் விரித்தபடியான நிலைக்கு வரவும். இப்போது கைகளை கீழே தொங்கப்போட்டு விடாமல் அப்படியே ஐந்து முதல் பத்து எண்ணும் வரை நின்று கொண்டே மூச்சை இழுக்கவும்.
பிறகு மூச்சை விட்டுக் கொண்டே வலது கைப்பக்கம் இடுப்பை வளைத்துக் குனிந்து, வலது கைவிரல் நுனிகள் வலது காலின் கணுக்காலுக்கு ஒட்டினாற் போல் தரையில் படும்படியான நிலையில் நிறுத்தவும். இந்த நிலையில் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து கைகளை விரித்து நின்ற நிலைக்கு வரவும். இப்படி இரண்டு பக்கங்களிலும் குனிந்து நிமிர்ந்து செய்தால் அது ஒரு திரிகோண ஆசனம் என்று கணக்கிடலாம்.
இது போல் ஒரு முறைக்கு ஆறு தடவைகள் வரை செய்யலாம். இது அர்த்த திரிகோணாசனம் என்று அழைக்கப்படுகிறது.
பூரண திரிகோணாசனம்:
இதுவும் ஒரு வகையான திரிகோணாசன முறை.  பூரண திரிகோணாசன முறையைச் செய்யச் சிலருக்கு முதலில்   கடினமாக இருக்கும். ஆனால் நாளடைவில் எளிதாக செய்ய முடியும். இந்த ஆசனத்தை செய்வது பற்றி பார்க்கலாம்.
முதலில் முதுகெழும்பு வளையாமல் கால்களை மேலே சொன்ன நிலையில் இரண்டு குதிகால்களுக்கும் இடையில் இரண்டு அடி முதல் மூன்றடி அகல இடைவெளி இருக்கும் படி வைத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கவும். இப்போது கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நேராக நீட்டிய படி வைத்திருக்கவும். இப்போது மூச்சை நன்றாக இழுத்து, இடுப்பை மட்டும் இடதுபக்கம் நன்றாக திருப்பி, மூச்சை விட்டுக் கொண்டே குனிந்து வலது கைவிரல்கள் இடது கால் கணுக்காலை ஒட்டி தரையில் படும்படி தொடவும்.
இடது கை மேல் நோக்கி தூக்கியிருக்க, தலையைத் திருப்பி இடது கைநுனி விரல்களை பார்க்கவும். இந்த நிலையில் ஏழு முதல் 10 எண்ணும் வரை இருக்கலாம். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து முதலில் சொன்னபடி முதுகுஎழும்பு வளையாமல் பக்கவாட்டில் கைகளை விரித்தவாறு உள்ள நிலைக்கு வரவும். இப்போது மீண்டும் மூச்சை இழுத்து இடுப்பை வலது பக்கம் திருப்பி, இடது கைவிரல்கள் வலது கணுக்காலை ஒட்டிய தரையை தொடும்படி முயற்சி செய்யவும்.
இந்த நிலையில் வலது கையை மேல் தூக்கி நிமிர்த்தி தலையை திருப்பி வலது கை நுனி விரல்களை பார்க்க முயற்சிக்கவும். இப்படியே ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். இது மாதிரி இரண்டு பக்கங்களிலும் செய்தால் ஒரு திரிகோணாசனம் செய்ததாகும். இது போல் ஒரு முறைக்கு 4 முதல் ஏழு தடவைகள் வரை செய்யலாம்.
குறிப்புகள்:
ஆசனம் செய்ய விரும்புபவர்கள் இரண்டு திரிகோணாசனங்களையும் செய்யலாம். சிலருக்கு உடல் மிகவும் குண்டாக இருக்கும். அவர்கள் பக்கவாட்டில் குனிவது மிகவும் சிரமமாக இருக்கும். அவர்கள் தங்களால் இயன்ற அளவு பக்கவாட்டில் குனிந்தாலும் கூட ஆசனத்தின் பலன்கள் உண்டு. ஒரு பக்கம் குனிந்து திரிகோணாசனம் செய்து விட்டு மறுபக்கம் அரைகுறையாக சாய்ந்து திரிகோணாசனம் செய்வர். இது தவறு. ஒரு பக்கம் எந்த அளவுக்கு குனிந்து நிமிர்கிறோமோ, அதே அளவு மறுபுறத்திலும் குனிந்து நிமிரவேண்டும். குறிப்பாக, ஒரு பக்கம் குனிந்து எழும் போது, முழுவதுமாக முதுகெலும்பு வளையாமல் நேராக நிமிர்ந்து நின்ற நிலைக்கு வந்த பிறகு தான் அடுத்த பக்கத்திற்கு குனிய வேண்டும். இது மிகவும் முக்கியம்.
பெண்களை பொறுத்த மட்டில் அவர்கள் கர்ப்பமானது தெரிய வந்தால், கர்ப்பமான இரண்டு தொடக்க மாதங்கள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். பிறகு இந்த ஆசனத்தை தொடரக்கூடாது. அதே போல் மாதவிலக்கானவர்கள், அந்த காலகட்டத்திலும் இந்த ஆசனங்களை செய்வது கூடாது.

தொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா : யோகப் பயிற்சி 11

ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு
யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன.  நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது.
குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.

செய்முறை:
பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.
இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.
அல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும். கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.
சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.
இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும். அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.
யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.
குறிப்பு;
யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.

1 comment: