Thursday, December 24, 2015

SRI Yantra unlocked


திருநீறு (விபூதி) பற்றி மிகப் பெருமை


சித்தர்தாசன் சுந்தர்ஜி
“மந்திரமாவது நீறு’
வானவர் அணிவது நீறு’
என்று திருநீறு (விபூதி) பற்றி மிகப் பெருமையாகக் கூறியுள்ளனர்.
ஆன்மிக ஈடுபாடுள்ளவர்கள் திருநீறு அணிந்துகொள்கின் றனர். இது சைவர் களின் சின்னம் என்று கோவில்களில் பிரசாதமாகத் தருகிறார்கள். இதுபோன்று இறைவழிபாடு சம்பந்தப்பட்ட செயல்களில் திருநீறு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த திருநீறு சமயச் சின்னம் மட்டும்தானா? உடலில் திருநீறு பூசிக்கொள்வதால் நன்மையுண்டா? நாம் பூசிக்கொள்வது உண்மையான திருநீறுதானா? என ஏராளமான கேள்விகள் உண்டு. திருநீறு பற்றி சித்தர்கள் கூறியுள்ள சில உண்மைகளை சுருக்கமாக அறிவோம்.
திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப் பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்களால் உருவாக்கப்பட்டது திருநீறு. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.
திருநீறு தயாரிக்கும் முறைதிருநீற்றுப் பச்சிலைகள். (இதனை சில இடங்களில் மக்கள் திணுத்திப் பச்சை இலை என்றும் கூறுவர்), வில்வப்பழ ஓடுகள், பசுமாட்டுச் சாணம்.
மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.
நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.
இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.
நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும். நமது நெற்றியில் இந்த சாம்பலை முதலில் பூசியவுடன், வெண்மையான சாம்பல் தலையிலுள்ள நீரை உறிஞ்சி கறுப்பாக மாறும். பின் அதைத் துடைத்துவிட்டு மறுபடியும் பூசிக்கொண்டால் வெண்மை நிறமாகவே இருக்கும்.
இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள். பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.
மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப்பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை “புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்’, “மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு’ என்று குரு அகத்தியர் கூறுகிறார்.
இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்திவந்த மூலிகை மருத்துவப் பொருளாகும். எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“விந்துநிலை யறிந்து விந்தை கண்டால்
விதமான நாதமது குருவாய்போகும்
அந்தமுள்ள நாதமது குருவாயானால்
ஆதி அந்த மானகுரு நீயே யாவாய்’
என்ற குரு அகத்தியர் வாக்கினை ஏற்று, சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த உண்மைகளைக் கடைப்
பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வை நல்வாழ்வாக அமைத்துக்கொள்ள முடியும்!
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

Monday, December 7, 2015

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

ந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம். 

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.
7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.
13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.
14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.
15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.

-இ.கார்த்திகேயன்

Thursday, September 18, 2014

வழிப்படுத்தல் – Mentoring by Dr.M.K.Muruganandan

Respond to this post by replying above this line

New post on முருகானந்தன் கிளினிக்

வழிப்படுத்தல் – Mentoring

by Dr.M.K.Muruganandan
இன்றைய வாழ்க்கையில் கல்வியானது நூல்களிலிருந்தும் இணையத்திலிருந்தும் கற்பதாக இருக்கிறது. தேடுதல் உள்ள ஒருவன் இதன் மூலம் நிறையவே கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கல்வியின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர ஒருவனது ஆளுமையையும் செயற்திறனையும் வளர்த்துக் கொள்ள முடியாது.

உதாரணத்திற்கு ஆசிரிய சேவையை எடுத்துக் கொள்வோம். அப் பணிக்கு வருபவர் பட்டப் படிப்பு பெற்றிருப்பார். இதனால் அவருக்குத் தேவையான கல்வி அறிவு கிட்டியிருக்கும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அல்லது கல்வியற் கல்லூரியில் பெற்ற பயிற்சியால் ஆசிரியப் பணிக்கான பிரத்தியேக அறிவும் அவரிடம் வளர்த்திருக்கும். ஆனால் அவ்வாறு கற்ற யாவரும் சிறந்த ஆசிரியராக வருவதில்லையே! இது ஏன்?
ஆனால் அந்த நபரானவர் தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியர் ஒருவரது குண இயல்புகளையும், கற்பிக்கும் முறைமைகளையும், மாணவர்களுடன் உரையாடும் பாணியையும்; முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் போலத் தன்னையும் வளர்த்தெடுக்க முயற்சி எடுப்பாராயின் அவர் சிறந்த ஆசிரியராகப் பரிணமிக்க முடியும். அதற்கு மேலாக அவரிடம் தனது சந்தேகங்களை நிவர்த்திக்க முடியுமாயின் மேலும் உதவியிருக்கும்.
அர்ச்சுனன் துராணாச்சாரியிடமிருந்து வில்வித்தையைக் கற்றான். ஆனால் வில்வித்தையை மாத்திரமின்றி தனது ஆளுமையையும் அவனால் வளர்த்துக் கொள்ள முடிந்தது. துரியோதனனும் அவரிடமே கற்றான். ஆனால் அவனால் அவனது குண இயல்புகளும் பண்புகளும் சொல்லும்படியாக அமையவில்லை. அது குருகுலக் கல்வி முறை.
சரியான முறையில் அதைப் பயன்படுத்தினால் அது ஒரு அற்புதமான முறை.
drona_ekalyva
ஆனால் ஏகலைவன், துரோணாசாரியரிடம் நேரடியாகக் கற்று கொள்ளாமலே அர்சுணனை ஒத்த சிறந்த வில் வீரனாக மாறினான். இங்கு சிஸ்யர்கள் தங்கள் குருவின் வழிகாட்டலை வௌ;வேறு விதங்களில் பெற்றிருக்கிறார்கள்.
வழிப்படுத்தல் Mentoring
இன்று புதிதாக Mentoring பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான சரியான தமிழ்ப்பதம் எதுவென்று தெரியவில்லை. வழிப்படுத்தல் எனக் கொள்வோம். அதிக அனுபவமும் knowledge உள்ள ஒருவர் தன்னிலும் அனுபவமும் அறிவும் குறைந்த ஒருவரை சரியான வழியில் நெறிப்படுத்துவது எனச் சொல்லலாம். மாறாக அவரைப் பார்த்து, அவரிடம் கேட்டு, அவரிடமிருந்து தன்னைத்தானே நெறிப்படுத்துவதாகவும் இது அமையும். இது இன்றைய வகுப்பறைக் கல்வி போலவோ ரியூசன் போன்றதோ அல்ல.
mentor
இதில் அறிவும் ஆற்றலும் அனுபவமும் மற்றொருவருக்கு ஊட்டப்படுவதில்லை. மாறாக அவர் அதைத் தானாகப் பெற்றுக் கொள்ளுமாறு வழிப்படுத்தப்படுகிறார். சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. கற்றல் உரையாடலுக்கு அப்பால், சவால்களை எதிர்கொள்வதையும் உள்ளடக்குகிறது.
வழிப்படுத்தல் என்பது பொதுவாக வழிநடத்துனர் Mentor மற்றும் mentee வழிப்படுபவர் ஆகிய இருவருக்கிடையேயான ஒருவகை உறவு எனலாம். ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட நாள் வரைக்கான உறவு அல்ல. தொடரும் உறவு, தங்கள் எதிர்பார்ப்பு நிறைவுறும் வரை தொடரும். ஆனால் இந்த இருவரில் எவராவது ஒருவருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் எந்தவித மனக்கிலேசமும் இன்றி இடை நடுவில் கைவிடுவதும் சாத்தியமே.
வழிப்படுத்தலில் உள்ளடங்கும் இருவரும் பொதுவாக ஒரே துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவம் சார்ந்தவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், வாணிபம் செய்பவர்கள் என எத்துறை சாரந்தவர்களுக்கும் இது பயன்படலாம்.
இது வழமையான ஒரு கல்வி முறையல்ல என்பதைக் கண்டோம். முறைசாரது அறிவைக் கடத்துவது இதுவாகும். பொதுவாக அறிவை மாத்திரமின்றி அவரது தொழிற் திறனை விருத்தி செய்வதாகவும் அமைகிறது.
cogs
தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும். தங்கள் துறையில் தமது விருப்பிற்கு உரிய ஒருவரைப் போல தங்களைத் தானே வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவும் காணலாம்.
வழிப்படுத்தலில் அவதானிக்க வேண்டியவை
வழிநடத்துனரும், வழிப்படுபவரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஒரே இடத்தில் வேலை வேலை செய்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில் அவை தொழில் முறைப் போட்டி பொறாமைகள், சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தல் போன்றவற்றிக்கு இட்டுச் செல்லக் கூடுமாதலால் வௌ;வேறு இடத்தைச் சேர்ந்தவர்களே விரும்பத்தக்கது.
இரகசியம் பேணுதலும் நம்பிக்கையாக நடத்தலும் மிக முக்கியமாகும். வழிநடத்துனரும், வழிப்படுபவரும் சந்தர்பத்தை பயன்படுத்தி மற்றவரது வாய்ப்பு, வசதி, உழைப்பு போன்றவற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையக் கூடாது.
வழிநடத்துனரும், வழிப்படுபவரும் பொதுவாக சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். நேரம் அவர்களுக்கு பொன்னானது. எனவே மற்றவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காது வழிப்படுபவர் முன்முயற்சி எடுத்து பயன்பெற முனைய வேண்டும்.
அத்துடன் எழுதுவதிலும் ஏடுகளை பேணுவதிலும், நேரடியாகச் சந்திப்பதிலும் நேரத்தை செலவழிக்காது, டெலிபோன் உரையாடல், ஈ மெயில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமே.
தொழிற்துறைகளில் வழிநடத்தல்
வழிநடத்துதல் என்ற பெயர் இல்லாவிட்டால் கூட பெரும்பாலான தொழில்களில் இது ஏற்கனவே செயற்படுகின்றது. தங்கள் தொழில் சார்ந்த கல்வித் தேர்ச்சி அல்லது பட்டப் படிப்புற்குப் பின்னர் தங்கள் தொழிலில் அனுபவமும் கல்வித் தேர்ச்சியும் பெற்றவரிடம் பயிலுனராக இருக்க வேண்டிய கட்டாயம் சில தொழில்களில் உள்ளது. சட்டத்தரணிகள், கணக்கியலாளர்கள் போன்றவர்கள் உதாரணங்களாகும். இவர்கள் அவ்வாறு பயிற்சி பெறாது தொழில் செய்ய முடியாது.
இத்தகைய பெரும் தொழில்களில் மட்டுமின்றி சாதாரண மேசன், தச்சுத் தொழில் போன்றவற்றில் கூட தகுதியானவரின் கீழ் தொழில் பயிலுனராக பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் அல்லாது போனாலும் அவசியமாகவே உள்ளது.
மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் உள்ளக பயிற்சி (Internship) பெற்ற பின்னரே வைத்தியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
அதற்கு அப்பால் சத்திரசிகிச்சை, பொது மருத்துவம், சருமநோய், மகப்பேற்று மருத்துவம், புற்றுநோய், போன்ற எந்த விசேட மருத்துவத் துறையையாவது தேர்ந்தெடுக்கும்போது அதற்கான விசேட பட்ட மேற்படிப்பு (Post graduate course) கற்கை நெறிகளுடன், அத்துறை சார்ந்த நிபுணரின் கீழ் பயிற்சி பெற வேண்டியதும் கட்டாயமாகும். ஆனால் முற்று முழுதாக வழிநடத்தல் என்று கொள்ள முடியாது. பாட நெறியோடு இணைந்தது.
குடும்ப மருத்துவத் துறையில் வழிநடத்தல்
பெரும்பாலான மக்கள் நோயுறும்போது முதலில் அணுகுவது தங்கள் குடும்ப மருத்துவரைத்தான். தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் நீண்ட காலமாக நெருக்கமாக அறிந்திருப்பதால் அவர் தங்களை அக்கறையோடு பார்ப்பார் என்ற நம்பிக்கையோடு நோயாளர்கள் அவர்களை நம்பிக்கையோடு அணுகுகிறார்கள்.
ஆனால் குடும்ப மருத்துவர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் அத்தகைய பயிற்சிகள் கிடைக்pன்றனவா?
கசப்பான உண்மை இல்லை என்பதேயாகும். பட்டப் படிப்பை முடித்து மருத்துவராக வெளியேறிய மறுநாளே குடும்ப மருத்துவம் என்ற துறையை எந்த மருத்துவரும் இலங்கையில் தேர்ந்தெடுக்க முடிகிறது. விரும்பிய இடத்தில் தனியாக கிளினிக் ஆரம்பிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இது முடியாது. குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பயிற்சி பெற்ற பின்னரே குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.
இலங்கையிலும் குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பட்ட மேற்படிப்புகளும், டிப்ளோமாக்களும் உண்டு. MD(Family medicine), DFM (Diploma in family medicine), MCGP (Member of college of general practioners)போன்றவை இங்கு உண்டு. இவற்றில் முதல் இரண்டும் மருத்துவ பட்ட மேற்படிப்பு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. மூன்றாவதான MCGP குடும்ப மருத்துவ கழகத்தினால் நடாத்தப்படுகின்றன. இவை யாவும் அங்கீகாரம் பெற்ற கற்கை நெறிகளாகும். இவை குடும்ப மருத்துவர்களுக்கான பாட நெறிகளாகும். ஆனால் இவை இல்லாமலும் குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.
image002
இப்பொழுது இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் தாங்கள் நடத்தும் MCCP பயிற்சியின் அங்கமாக வழிநடத்தலை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இலங்கையில் மருத்துவ கற்கை நெறிகளில் Mentoring எனப்படும் வழிநடத்தல் முதல்முதலாக இங்குதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வழிநடாத்தலில் உருவாகும் புதிய குடும்ப மருத்துவர்கள் தாங்கள் தொழிலை ஆரம்பிக்கும் நாள் முதலே நோயாளிகளை அன்புடனும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் நடத்துவர்கள், அவர்களது எதிர்பார்புகளை பூர்த்தி செய்வார்கள் என  எதிர்பார்க்கலாம்.
மருத்துவத்தின் ஏனைய துறைகளிலும் வழிநாடாத்தல் முக்கிய அங்கமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை
குழந்தைகளில் வழிநடத்தல்
இது தொழிற்துறை வழிகாட்டல் போன்றதல்ல.
குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோர்களினதும் குடும்ப மூத்தோர்களின் ஆசிரியர்களினதும் பணியாக காலாகாலமாக இருந்து வருகிறது. வழிநடத்தல் என்ற பெயரை உபயோகிக்காமலே நாம் இதைச் செய்து வருக்கினறோம்.
ஆனால் சில குழந்தைகளுக்கு விசேட வழிநடத்தல் தேவைப்படுகிறது. சண்டை சச்சரவு குழப்பம் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகள், பாடசாலையில் பின்தங்கிய பிள்ளைகள், சமூக ஊடாடலில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் போன்றோருக்கு இவை அவசியம். உணர்வு பண்பாட்டியல் ரீதியான வழிநடத்தல் அக் குழந்தைகளுக்கு தேவைப்படும். சில மேலை நாடுகளில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
அப்பழுக்கற்ற மனதுடைய அக் குழந்தைகள், வழிநடத்துனரை தங்களது இலட்சிய புருஷனாகக் கருதி மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். அவர் பாதையில் தாங்களும் தொடர முனைவர். எனவே வழிநடத்தினராக இருப்பவர் நற்பண்பு நற்குணம் உடையவராக, தன்னலம் கருதாதவராக, சமூக உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். இதைத் தொழிலாகக் கருதாது தொண்டாகக் கருதி குழந்தைகளை வழி நடத்த வேண்டும்.
போதகர் மாணவன் என்ற நிலை போலன்றி நட்புணர்வுடன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் மனம் திறந்து பேசுவதுடன் .தங்களிடம் மறைந்துள்ள ஆற்றலை வெளிக் கொணரவும் முடியும்.
நீங்கள் ஒவ்வொருவருமே உங்கள் தேவைக்கு ஏற்ப வழிநடத்துனர் ஆநவெழச அல்லது அநவெநந வழிப்படுபவர் ஆக உங்களை அறியாது ஏற்கனவே செயற்பட்டிருக்கக் கூடும். வழிப்படுத்தல் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதால் அதை மேலும் கச்சிதமாகச் செய்ய முடியும் என நம்புகிறேன்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Tuesday, May 20, 2014

உலகம் தோன்றியது எப்படி -ஆவணப்படம் video HD

முன்னுரை 
அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
einstein.jpg
ஐன்ஸ்டீன்
மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும்.
மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை தடை செய்கின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி என்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.
உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் ஆதாயத்தை அடையும்  முதலாளித்துவம், தன் பிடியிலிருக்கும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயல்வதில்லை. இதைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனுக்கு நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை புரிய வைப்பதும், மனித சமூகமும் அது வாழும் பூமியும் முதலாளிகளுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு சொந்தமானது என்று தெளிய வைப்பதும் வேறு வேறு அல்ல.
இந்த ஆவணப்படம் நமது பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, எந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து இந்த மாற்றங்கள் நடக்கின்றன, இவற்றின் முரண்பாடுகள் என்ன, இவற்றுக்கு தோற்றம்-அழிவு உண்டா, அற்பமான துகள்களும், தூசுகளும், வாயுக்களும் ஒரு வரலாற்றுக் காலத்தை படைக்கும் மேன்மையை எப்படி பெற்றன, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை என்பது உண்மையா, இந்த பிரபஞ்சத்தை படைத்த மூலப்பொருட்கள் என்ன, நமது பூமி, சூரியக் குடும்பத்தின் தோற்றம், பெருவெடிப்பு குறித்து ஆதாரங்களுடன் அறிய முடியுமா என் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.
எனினும் மார்க்சியத்தின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மற்றவர்களை விட நன்கு பயன்படும். இயற்கையின் இயக்கவியல் இந்த உலகத்தின் தோற்றத்தில் எப்படி இயங்கியிருக்கிறது என்பதை காட்சி ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.
இயக்கம்தான், இயற்கையை சுருள் வட்டப் பாதை முன்னேற்றத்தில் இயங்க வைக்கிறது என்பதும் போராட்டமே, மனித குல நாகரீகத்தை மேம்படுத்தும் அச்சாணியாக இருக்கிறது என்பதும் தொடர்பற்றவை அல்ல. இதைத்தான் இந்தப் படத்திலிருந்து அறிவியலோடு சேர்ந்து நாம் அறிய வேண்டிய சமூகப் பார்வை.
இந்தப் படத்தை இத்தகைய தத்துவப் பார்வை விளக்கங்களுடன்தான் எழுத வேண்டும் என்று திட்டமிட்டாலும் நேரப் பிரச்சினை காரணமாக நடக்கவில்லை. என்றாலும் படத்தினை பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உரையாடலின் சாரத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும், தமிழோ, ஆங்கிலமோ தெரிந்தாலும் அறிவியல் தெரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும். கட்டுரையைப் படித்து விட்டு படத்தை பாருங்கள்!
பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியை அடையுங்கள்!
-    வினவு


நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.
ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.
இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி நட்சத்திரம்) அடைகிறது.
journey-through-universe-01.jpg
பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது

தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.
பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும்  வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்‌தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.
மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.
அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்றது இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.
இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது.
journey-through-universe-02.jpg
செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?
அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.
அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை பார்க்கிறோம். டைட்டனில் நமது புவிக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.
அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம்.
journey-through-universe-03.jpg
எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம்
பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?
இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.
அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.
நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.
இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.
நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது.
journey-through-universe-05.jpg
வால் நட்சத்திர மோதல்
மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், அங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.
நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான  விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.
1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன.
journey-through-universe-06.jpg
ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம்.
இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.
இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.
நட்சத்திரத்தின் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும்.
journey-through-universe-071.jpg
கருந்துளை
நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம்  எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் இந்நிலையை வந்தடையும்.
சூரியனை விட அதிக நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.
இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.
வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது.
journey-through-universe-08.jpg
லட்சக் கணக்கான விண்மீன்கள்
விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் அதையும் விட அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.
இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.
நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும்.
journey-through-universe-09.jpg
இந்த அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த குவாசார் -  100 கோடி சூரியன்களின் நிறையுடையது
இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.
நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள  நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும்.
journey-through-universe-10.jpg
அண்டத்தின் எல்லை – 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ட பெருவெடிப்பு
இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.
பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்.
-    மார்ட்டின்

(நன்றி: நேஷனல் ஜியாகிரபிக்)

நன்றி  vinavu.com

Wednesday, January 8, 2014

பிரம்மனிடம் சில கேள்விகள்!




ள்ளிரவில், ஓர் நடுக்காட்டில்
நான்முகன் என்னிடம்
நன்றாய்ச் சிக்கினான்.
நானோ பொடியன்.நாயகன் அடியன்.
நழுவ விடாமல் அவனை நலம் விசாரிக்கத் துவங்கி விட்டேன்.


கேள்விகள் சிவப்பிலும், 
பதில்கள் கறுப்பிலும்.

பிறப்பால் விளைவது
பூமியில் என்ன?
பிரம்மனை நான்கேட்டேன்-கெஞ்சும்
குரலால் தான்கேட்டேன்!

இறப்பால் விளைவது
என்னஇவ் வுலகில்?
எனையே அவன்கேட்டான்- கேள்வியை
மாற்றிப் புடம்போட்டான்!

ம்குர லுக்கும்
நாயகன் செவியை
நன்றாய்ச் சாய்க்கின்றான்-உலகில்
எனையும் பார்க்கின்றான்!


எம்குர லுயர்த்தி
இன்னும் இரண்டொரு
கேள்விகள் கேட்போமே-என்னதான்
செய்வான் பார்ப்போமே!

காட்டிலும் மேட்டிலும்
கடவுளைத் தேடியோர்
கூட்டமும் அலைகிறதே?-இதனால்
குடும்பமும் தொலைகிறதே?

வீட்டினில் வைத்தெமை
வணங்கிடு போதும்
காடும் மேடெதற்கு-நீயேன்
கானகம் போவதற்கு?

சரி!இப்படி மாற்றிக்கேட்டுப் பார்ப்போம்!
ல்லறம் உள்ளவர்
துறவறம் நாடிட
உலகே வீண்தானோ?-இப்படி
உழல்வதும் சரிதானோ?


இல்லறம் துறவறம்
இரண்டும் நல்லறம்
ஆற்றினில் ஓடியபின்-நீரும்
ஆழ்கடல் அடைந்திடுமே!

(எல்லா ஆறுகளும் கடலுக்குத்தானாம்)
அப்படியா..? அடுத்ததை வீசினேன்!
பிறந்திடும் உயிர்கள்
ஓர்நாள் இறக்கும்
இறந்தபின் என்னாகும்?-சொல்லென்
வாழ்நாள் பொன்னாகும்!

சிறந்திடும் ஆழ்கடல்
சிறுதுளி தந்திடும்
மேகமென் றேயாகும்-அதுவே
மீண்டும் ஆறாகும்!

பிரம்மன் மிகப் பொறுமையுடன் பதிலளித்தான்.
ழு பிறப்பே
எவர்க்கும் என்றால்
இறைவா நீஎதற்கு?-இங்கே
நாங்கள் வணங்குதற்கு!


பாழும் மனிதா
கேள்விக ளாலே
படுத்தி யெடுப்பதுமேன் -என்னைப்
பாவியென் றாக்குவதேன்!

காத்திருந்த நேரம் வந்துவிட்டது.
த்தனை கடினம்
எங்களின் வாழ்வில்
ஏற்படுத் தும்இறைவா!-பிறந்தே
உலகில் இன்புறவா!


எத்தனை கேள்விகள்
இன்னமும் உளதோ?
என்னைப் போகவிடு!-இலையேல்
இங்கே சாகவிடு!

பிரம்மன் நோகத்தொடங்கினான்.இதைத்தானே எதிர்பார்த்தேன்.

பிரம்மன் இறந்தால்
பிறப்பது எங்கனம்?
பூமியில் பிறப்பதற்கே-பிரம்மா
இத்தனை பயமெதற்கு?

பரமன் உடுக்கையை
புரட்டுதல் போலே
புவியினை அசைப்பானே-கண்டும்
பிறந்திட நினைப்பேனோ!

தெரியாதது போல் விளித்தேன்.

னக்கும் மேலே
ஒருவன் உண்டோ
ஒருநொடி காண்பேனோ?-சிற்சில
கேள்விகள் கேட்பேனோ?


மனதை மயக்கும்
மதியுனக் கெனினும்
மயங்கிட மாட்டேனே - சாபம்
மறுமுறை கூட்டேனே!

ஏற்கனவே பெற்ற சாபத்தில் பிரம்மன் நிறைய பட்டுவிட்டான் போலும்.
போட்டேன் ஒரு கட்டளை.


போதும் பிரம்மா
பொய்களை நிறுத்து
புண்ணியம் கொடுத்துவிடு!-பூமியில்
பிறப்பினை நிறுத்திவிடு!

சற்றே புன்னகையுடன், பிரம்மன் தீர்க்கமாக என்னைப்பார்த்து சொன்னான்.

ன்மேல் என்றும்
எள்முனை தவறிலை
என்தொழில் நின்றாலும்-மனிதா
உன்தொழில் நிற்காதே!

மனிதா
உன்தொழில் நிற்காதே!

அவனே தொழிலை நிறுத்தினாலும், நாம் நிறுத்த மாட்டோமா..?
விளங்கத் தொடங்கியது..

பிரம்மன் சொன்னதில்
பிரமை பிடித்தே
பேதைமை ஆகியதே-கேள்விகள்
மறதியென் றேகியதே!


பரமனில் பிரமனில்
பாரினில் தவறிலை
பாழும் மனதினுள்ளே - பாராய்
பலவிதத் தவறுகளும்!

பாராய்
பலவிதத் தவறுகளும்!

ன்னை நானே நொந்த பொழுதில் 

இடத்தை விட்டே அகன்று விட்டான்
அய்யன் நான்முகன் அறிவிற் சிறந்தவன்,
அருளன் வாணியின் அழகிய வேந்தன்!

நன்றிகள்!

தொடுப்பு:
*இது ஒருவகை இசைப்பா.
*அந்த ஓவியம் மிக அழகு!
*இனியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளிடம் கேள்விகள் கேட்கலாம்.