Wednesday, June 5, 2013

ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்றுநீர் இரண்டும் போக்கு

முக்குழி வெப்பப்பாதையில் ஏற்படும் வாத ,பித்த சம நிலைப்படுத்த நீராகாரம் அமிர்தத்தைவிட மிகவும் நல்லது.இத்துடன் சீரகம்(சீர் + அகம்),வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்து சாப்பிட மிக நன்று.

வெங்காயம், சீரகம், வெந்தயம் ஆகிய அந்தக் காலத்து அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களே(இந்தக் காலத்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்,ஆண்களுக்கும் அஞ்சறைப் பெட்டி தெரியுமா?
இதையே கவி காளமேகம் இரட்டை அர்த்தமான சிலேடையில் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன 
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை;- மங்காத
சீரகத்தை தந்தீரீல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டி யாரே.

வெம்மையான காயம் ( உடம்பு ),சுக்குப் போல இறுகிவிட்டால் ,வெந்த அயமான((வெந்த+அயம்)அயச் செந்தூரம் போன்ற ) மருந்துகளால் என்ன பயன்,இங்கே யார் சுமந்து இருப்பார் இந்த உடலை.மங்காத சீர் அகத்தை(சீரான மனத்தை) தந்தீரில் தேட மாட்டேன் இப் பெரும் காயம்(பெரிய உடம்பை),ஏரகத்துச் செட்டியாரே என்றால் திருவேரகம் என்னும் இடத்தில் அமர்ந்து இருக்கும் முருகனே! என்று பொருள்படும்.
  
தலையில் உள்ள மூளைக்கு குளிர்ச்சியாக வைக்க இதயத்தில் இருந்து அழுத்தி வெளியேற்றும் இரத்தத்தில் 80 முதல் 90 சதவிகித இரத்தம் தலைக்கு பாய்கிறது.ஒரு சிலிகான் சில்லில் வேலை செய்யும் போது எவ்வளவு சூடாகிறது.அதற்கு சூடாகாமல் இருக்கவும் ,அதற்கு எவ்வளவு குளிர்ச்சியூட்ட குளிர் சாதனங்கள்,காற்றாடி போன்றவற்றை வைத்திருக்கிறோம் .

அதைப்போல பல்லாயிரம் மடங்கு வேலை செய்யும் மூளை உள்ளே உள்ள தலைக்கு மிக்க குளிர்ச்சியாக இருக்க என்ன செய்து வந்துள்ளோம். யோசியுங்கள்! கரிசலாங்கண்ணி, பொன்னாங் கண்ணித்தைலம் இவற்றை தலைக்குத் தேய்ப்பதனாலும் , கீரையாக உள்ளுக்கு சாப்பிடுவதனாலும் தலையைக் குளிர்ச்சியாக வைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

சோழர்கள் காலத்தில் பொன்னாங்கண்ணி,கரிசலாங்கண்ணி, போன்றவற்றை உபயோகிக்க கண்ணிக்காணம் என்ற வரியை விதித்து உள்ளார்கள்.அந்த வரியையும் செலுத்தி இந்த பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணியை உபயோகித்து வந்துள்ளார்கள்,என்றால் பழந்தமிழர் எவ்வளவு புத்திசாலிகள். இன்று அதே  பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணியை எந்த வரியும் இல்லாமல் இலவசமாக கிடைக்கிறதே,அதை உபயோகிக்காமல் இருக்கிறோமே அது ஏன்?

நம் அறியாமையை என்னென்று சொல்வது.கண்ணி என்றாலே கண்ணுக்குகந்தது என்று பொருள்படும்.கண்ணோ பொன்னோ என்பார்கள்.கண் குளிர்ச்சியாக இருந்தாலே தலை குளிர்ச்சியாக இருக்கிறது என்று பொருள்.கண் எரிச்சல் என்பது பெரும்பாலான இன்றைய மக்களிடையே உள்ள பிரச்சினை.பல சிறு குழந்தைகள் நம் பழந்தமிழர் வாழ்க்கை முறையை பெற்றோரும் அறியாததால் பெரிய சோடா புட்டிக் கண்ணாடிகளுடன் வலம் வருகின்றன.

நான் தொழிற் பழகுனராக ஒரு ஆலையில் பணி ஆற்றும் போது வெல்டிங் வேலை செய்யும் போது கண் பழுதானதால்,இது போன்ற கண்ணாடியை   அணியும் கேவல நிலையில் இருந்து விடுபட்டு ,தற்போது 45 வயது முடிந்தாலும் வெள்ளெழுத்துக் (சாளேச்சுரம்) கண்ணாடி கூட அணியாமல் இன்று வரை இருக்கிறேனென்றால் எதை உங்களுக்குச் சொல்கிறேனோ அதை நான் செய்து வந்ததனால்தான்.

இனி மேலும் பல அனுபவ வாழ்வியல் கட்டுரைகள் வெளிவரும்.படித்து வாழ்வில் பயன் பெறுங்கள்.

கேட்க யாரும் இல்லை என்றால் என்னால்தான் சொல்ல முடியுமா?
கேட்பதற்கு வந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.சொல்ல வைப்பதுவும் விதியே! கேட்க வைப்பதுவும் விதியே!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது வேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

No comments:

Post a Comment