Tuesday, June 4, 2013

பாட்டி வைத்தியம்

இங்கே நான் கொடுக்கும் குறிப்புகள் அனைத்தும் நான் பயன்படுத்தும் குறிப்புகள்.இதுவரை உபயோகப்படுத்திய அனைவருக்கும் நல்ல பலன்களை தந்துள்ளது.இவை எல்லாம் வெளிநாட்டில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.நான் இந்தியா செல்லும் போது மொத்தமாக எடுத்து வந்து விடுவேன்.அப்படி கிடைக்காதவர்கள் கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரித்து கொள்ளலாம்.
1)எப்போதும் போல் சோப் போட்டு குளித்த பிறகு இந்த பொடியை முகம்,உடம்பில் தேய்த்து குளித்தால் பரு,கரும்புள்ளி,ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவும் வராது.இதற்கு தேவையானது
பன்னீர் ரோஜா - 200 (காய வைத்தது)- நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அல்லது
பூக்கடையிலிருந்து வாங்கி வந்து காய வைத்து கொள்ளவும்.Light Rose not Dark Rose.
வசம்பு - 100 கிராம்- தழும்பு,கரும்புள்ளிக்கு உகந்த மருந்து
கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம்
புனுகுப்பட்டை - 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
கடலைப்பருப்பு -100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
இவை அனைத்தையும் வெயிலில் 2-3 நாட்கள் காய வைத்து மாவு அரைத்துக் கொடுக்கும் இடத்தில் கொடுத்து சீயக்காய் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொடுக்க சொல்லி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பேபி சோப் போட்டு குளிக்க வைத்த பிறகு இந்த பொடியை உடம்பு முழுதும் தேய்த்து குளிப்பாட்டுவோம்.சிறு வயதிலிருந்து குளித்தால் உடம்பில் முடி இருக்காது.ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் முடியை போக்கும் தன்மையுள்ளது.
மேலும் முகத்திற்கு போடும் மஞ்சள் போல் கலர் பிடிக்காது.போட்டதே தெரியாது.
2) இதே பொடியை உபயோகப்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு பேக்(Face Pack)
போடலாம்.
தயிர் - 1 ஸ்பூன்
பொடி - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 10 துளி
எல்லாவற்றையும் கலந்து முகம்,கழுத்து முழுவதும் தடவி காயும் வரை ஊறவைத்து கழுவவும்.
3) முகத்தில் பரு இருப்பவர்கள் மேலே சொன்ன பேக்குடன் 1 ஸ்பூன் முல்தானி மட்டி பொடி சேர்த்து பேக் போடவும்.முல்தானி மட்டி(ஒரு வகை களிமண்) முகத்தில் எண்ணெய் பசையை சுத்தமாக எடுத்து விடும்.பரு வரவே வராது.எண்ணெய் பசை சருமம்,பரு அதிகம் உள்ளவர்கள் வாரம் 1-2 முறையும்,சாதாரண சருமம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும்,உலர்ந்த சருமம் உள்ளவர்கள் தயிர் அதிகம் கலந்து மாதம் ஒரு முறையும் உபயோகப்படுத்தவும்.ஆண்களுக்கும் இந்த பேக் போடலாம்.
4)முக்கியமாக இரவு தூங்கப்போகும் போது முகம் கழுவி விட்டுதான் படுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.முகத்தில் எதுவும் வராது.பேபி லோஷன் மட்டும் போட்டுக் கொள்ளலாம்.
5) கண்கள் அருகே உள்ள சருமம் மிகவும் மென்மையானது.நேரம் கிடைக்கும் போது இரு பஞ்சுத் துண்டில் பன்னீரை(Rose Water) ஊற்றி இரண்டு கண்ணிலும் வைத்துக் கொள்ளுங்கள்.
6)முகத்தை மாதம் ஒரு முறை ஸ்க்ரப்பிங் செய்யவும்.அப்போதுதான் இறந்த செல்கள் நீங்கும்.மேலே குறிப்பிட்ட பொடியையே தண்ணீரில் குழைத்து உபயோகப்படுத்தலாம்.அல்லது
ஆப்பிரிகாட் ஸ்க்ரெப்பர் போல கடையில் கிடைக்கும் தரமான பொருட்களை உபயோகப்படுத்தவும்.
7)கைகள் மிருதுவாக இருக்க தூங்கும் முன்பு சமையல் உப்பை(Table Salt) ஐ- 2 ஸ்பூன் ஈரமான கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்.பிறகு கையை கழுவி துடைத்து ஆலிவ் ஆயில் தடவி விடவும்.
8)என்னதான் என் கணவர் டாக்டராக இருந்தாலும் அவருக்கு உடம்பு சரியில்லையென்றால் வீட்டு வைத்தியம்தான்.சளி,ஜுரம் என்றால் அவருக்கு இந்த கஷாயம் தான் கொடுப்பேன்.என் பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்டது.
மிளகு-2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வெற்றிலை - 2
காய்ந்த திராட்சை - 10
பனங்கற்கண்டு(Or Palm Sugar)-2 ஸ்பூன்
சுக்குப் பொடி - 2 ஸ்பூன் (காய்ந்த இஞ்சி அல்லது பச்சை இஞ்சி)
வாணலியை அடுப்பில் வைத்து மிளகு,சீரகம் போட்டு நன்றாக கருகும் வரை(பட் பட்டென்று வெடிக்கும்) வைத்து,2கப் தண்ணீர் ஊற்றவும்.வெற்றிலை,காய்ந்த திராட்சையை பிய்த்து போடவும்.சுக்குப்பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.1/2 கப் அளவிற்கு வற்றியவுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.
9) தினமும் பல வித பேஷண்டுகளைப் பார்ப்பதால் அவர்களிடமிருந்து எளிதாக நோய்க்கிருமிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.அதனால் எங்கள் வீட்டு டீயில் தினமும் இந்த பொடியை சேர்ப்போம்.அனைவருக்கும் நல்லது.முக்கியமாக எதிர்ப்பு சக்தி வரும்.ஆனால் நான் டீ,காபி குடிக்கவே மாட்டேன்.இந்த பொடியை மட்டும் பாலில் போட்டு கொதிக்க வைத்து வெல்லம் கலந்து குடிப்பேன்.
சுக்கு - 100 கிராம்
மல்லி -100 கிராம்
ஏலக்காய் - 25
மிளகு - 50 கிராம்
அனைத்தையும் பொடி செய்து தினமும் டீ போடும் போது 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

No comments:

Post a Comment