Showing posts with label ஆயுர்வேதம். Show all posts
Showing posts with label ஆயுர்வேதம். Show all posts

Wednesday, March 6, 2013

எள்ளும் கொள்ளும்


'இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு" என்பது பழமொழி. முதலில் எள்ளு பற்றிய விபரங்களை காண்போம். எள்ளு ஒரு சிறிய செடி. இந்தியாவில் பெருமளவில் பயிரடப்படுகிறது. 1-2 அடி உயரமே வளரும் எள்ளுச் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு வரைதான்.
மூவகை வர்ணங்களைக் கொண்ட எள் வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தைக் கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ்வெள்ளை விட மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவாக அதன் எண்ணெய்யும் பயன்படுகிறது.
சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடிய இனிப்புடன், ஜீர்ண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலுக்கு நெய்ப்பும் சூடும் தரக் கூடியது. உடலை கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும் கேசங்களுக்கும் உறுதி தரக்கூடியது. உறுப்புகளுக்குப் பலமும் சுறுசுறுப்பும் தரும். வேக்காளத்தைக் குறைத்து அசதியைப்போக்கித் தசைகளுக்குப் புத்துயிர் ஊட்ட வல்லது. மூளைக்குத் தெளிவைத் தரும். நல்ல பசியைத் தூண்டுவதால் உணவின் அளவு அதிகரித்து இளைத்தவன் புஷ்டியாகிறான். மலக்கட்டை ஏற்படுத்தும். வாயுவால் ஏற்படும் திமிர்ப்பு, விறைப்பு, வலி முதலியவைகளைக் குறைக்கும். பெண்களின் கர்ப்பப்பையைச் சார்ந்த வறட்சியைப் போக்கி வலியை கண்டிக்கக் கூடியது.
எள்ளை தூளாக்கி சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணை கலந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, குடல் வலி இவைகளைப் போக்கும். உடலுக்கு நல்ல தெம்பை தரக்கூடியது. வெல்லப்பாகுடன் இதைக்கூட்டி எள்ளுருண்டை, கொழுக்கட்டை முதலிய தின்பண்டங்களை சாப்பிடுவதால் தன்னலம் பாராமல் பிறர்க்காக உழைக்கும் மனப்பான்மை வளரும். மனவெறியை அடக்க வல்லது.
வாய்ப்புண்ணை ஆற்றுவதற்கு எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வேண்டும். ரத்த மூலத்திலிருந்து ரத்தம் சொட்டுவதை நிறுத்த எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும்.
பற்கள் எகிறுகள் தாடை இவைகளில் பலக்குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும் நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பித் துப்புவதாலும் நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது.
சிறுநீரை சுண்டச் செய்வதால் அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோயில் எள் கலந்த உணவு நன்மை தரும். பலத்தையும் தருகிறது. சிறுநீரில் சீழ் அதிக அளவில் வெயியாகும் நபர்களும் எள்ளை உணவில் அதிகமாகச் சேர்க்கலாம்.
வயது வந்தும் பூப்படையாத பெண்களும், மாத விடாய் சரியாக ஆகாமல் கடும் வயிற்று வலியால் அவதியுறும் பெண்களுக்கும், தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களுக்கும் எள்ளுடன் கூடிய உணவால் நன்மை பெறுவர். உதிரச் சிக்கலை போக்க எள் ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். பனை வெல்லம் எள்ளு கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திய வலி கடுப்பு உதிரச் சிக்கலை நீக்க பெறும் உதவி செய்கின்றன.
எள்ளின் எண்ணெய்யும் எள்ளைப் போல சிறந்தது. நல்லெண்ணெயை தேய்த்துக் குளிக்க சீக்கிரம் தோலின் வழியே ஊடுருவி கொழுப்பு வியர்வை பித்த கோளங்களின் அழற்சி அயர்வை போக்கி வியர்வையை சரியாக வெளியாக்கி, தசைகளில் தேவையற்ற மலப் பொருள்கள் தங்காமல் அகற்றி தசைகளுக்கு பலமும் தோலுக்கு மென்மையும் நிறத்தையும் மயிர்கால்களுக்குத் திடமும் கேசங்களுக்கு கருமையும் தருவதால் எண்ணெய் குளிக்கு மிகவும் சிறப்பானது. வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்ற பழமொழிக்கேற்ப எண்ணெய்க் குளி தவறாதவர்களை விட எண்ணெய் குளியைத் தவிர்த்தவர்களே அதிகம் டாக்டர்கள் வீட்டில் காணப்படுகின்றனர்.
கொள்ளு துவர்ப்புச் சுவை, இனிப்புச் சுவை, வறட்சி, உஷ்ண வீர்யம் இவைகளையுடையது. கொள்ளுக் கஞ்சியை அருந்துவதால் நாட்பட்ட ஜலதோஷம், மூச்சுத்திணறல், இருமல், மூலம், விக்கல், வயிற்று உப்புசம், கபவாயு, கல்லடைப்பு, போன்ற நோய்களும் வீக்கம் பெருவயிறு போன்ற உபாதைகளும் நீங்கி விடுகின்றன.
எளிதில் ஜீர்ணமாகும். மலத்தை கட்டும். உடலில் ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. ஜீர்ண நிலையில் புளிப்புச் சுவையையும், எரிச்சலையும் தருவது.
கொள்ளு தான்யத்தை நன்கு பொடித்து புளித்த மோரை சூடாக்கி அதில் குழைத்து கொழுப்பினால் உடல் பருத்த பகுதிகளில் மேலிருந்து கீழாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணிமுதல் ஒரு மணிநேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்க சதை உருகி உடல் இளைத்துவிடும். உணவில் அதிகமாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையையும், புலால் உணவையும் தவிர்க்க வேண்டும். பகல் உறக்கத்தைத் தவிர்த்து உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.
உடலுக்கு சூட்டை அதிகப்படுத்துவதால் கொள்ளின் உபயோகத்தை அதிக அளவில் உள்ளுக்கு சாப்பிடுவதை விட வெளிப்புற உபயோகம் சிறந்த பலனைத்தரும்.

துளசி

துளசியின் பெருமை
துளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல. அதில் தெய்வீகத் தன்மையும் நிறைந்திருப்பதால் வீட்டின் முன் மாடத்தில் துளசியை நட்டு பூஜிப்பது வழக்கம். துளசியின் வேர் மண்ணை தண்ணீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்வதால் சகல சம்பத்துகளும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்தது துளசி. சன்யாஸிகள் துளசியால் பூஜை செய்த பிறகு அதை சிறிய அளவில் பிரசாதமாக உட்கொள்வதும், முகர்வதும், காதில் வைத்துக் கொள்வதற்கும் உபயோகிக்கின்றனர்.
பல வகை துளசிகளில் வெண்துளசியும் கருந்துளசியையும் சாதாரணமாக காணப்படுகின்றன. காட்டு துளசி என்னும் ருத்திரசடை (திருநீற்றுப்பச்சை) ராம துளசி (எலுமிச்சம் துளசி) என்றும் வகைகளுன்டு. வெண்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை வெண்மை கலந்த பச்சை நிறமாகவும், கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறமாகவும் காணப்படும். இவ்விரண்டு வகை துளசியும் குணங்களில் அதிக வேறுபாடு இல்லாதவை.
மலேரியா, இன்புளயன்ஸா போன்ற ஜ்வர நிலைகளில் துளசியின் உபயோகத்தால் அவ்வகை நோய்கள் மற்றவருக்கு பரவாமல் தடுக்கும் சக்தியை உடையது.
சுவையில் காரம் கலந்த கசப்புடன் கூடியது. உஷ்ணப் பாங்கான பூமியில் அதிகம் விளையக் கூடியது. உடல் சூட்டை சமச்சீராக வைக்கும் திறன் அதற்கு உண்டு. இறுகியுள்ள மார்ச்சளியை நீர்க்கச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தினாலும் உமிழ்நீராலும் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கிவிடும். வாயில் ஏற்பட்டுள்ள குழகுழப்பு, அழுக்கு ஆகியவற்றை துளசி அறவே நீக்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் விரைவில் ஏற்படுத்துகிறது. துளசியை மென்று தின்பதால் பசித்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
குளிர் ஜ்வரம், கபத்தினால் ஏற்படும் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டுள்ள கபக்கட்டினால் உண்டாகும் விலாவலி, ஜலதோஷம், குழந்தைகளுக்கு இதன் மூலமாக ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாத அழுகை, உடலை முறுக்கி அழுதல், உடல் வலி போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உடன் துளசி உண்டாக்கி, ஆரோக்யத்தை மேம்படச் செய்கிறது.
இன்புளயன்ஸா, மலேரியா போன்றவற்றில் துளசியை போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தச் செய்ய வேண்டும். துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று இடுவதால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும். துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது. உடல் பகுதிகள் அழுகல், கிருமிகள் ஆகியவற்றை துளசியின் உபயோகத்தின் மூலம் நீக்கலாம்.
உண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் பதமழிந்து அதன் மூலம் ஏற்படும் குடல் கீரைப்பூச்சிகள் அனைத்தையும் துளசி அழிக்க வல்லது. உடலில் ஏற்படும்
தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி போன்றவற்றில் துளசியை அரைத்து பற்று இடுதல், சாறு அல்லது கஷாயமாக்கி குடிப்பதாலும் அவ்வகை நோய்கள் நீங்கிவிடும். துளசி சாறு அரை முதல் 2 ஸ்பூன் வரை குழந்தைகளுக்கும் கால் முதல் அரை அவுன்ஸ் பெரியவர்களும், சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும், அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
துளசியுடன் மிளகும் சேர்த்து சாப்பிட்டால் குளிர் ஜ்வரம், கடுப்பு, வலி, தலைகனம், மார்ச்சளி, முறை ஜ்வரம், யானைக்கால் ஜ்வரம் ஆகியவை நீங்கி விடும். ஜ்வரத்தின் ஆரம்பத்திலேயே துளசியும் மிளகும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஜ்வரம் மேலும் வளராமல் நின்று விடும். 10 துளசி இலைகளும் 5 மிளகுமே போதுமானது. ஜ்வரம் வந்துவிட்டால் துளசி மிளகும் சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் சர்க்கரை கலந்து பருகுவதால் ஜ்வரம் தணிந்து விடும்.
துளசி, மிளகு, பழைய வெல்லம் ஆகியவற்றின் கூட்டு உபயோகம் மலேரியா, யானைக்கால் ஜ்வரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன. மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர்ஜ்வரம், காணாக்கடி, முறை ஜ்வரம் ஆகியவை வராது.
துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர்ஜ்வரம், வாயுவினால் ஏற்படும் குடைச்சல் நீங்கும். விஷஜ்வரமும் வராது. அஜீர்ணம், வாயுப்பொறுமல், வயறு உப்புசம், வலி, அஜீர்ணபேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமக்கஷாயம், ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து சாப்பிடலாம். துளசி, ஓமம் ஆகியவற்றை தண்ணீரில் அரைத்து, வடிகட்டி, தேன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்ச்சளியில் துளசி, ஓமம், பழைய வெல்லத்தின் நித்திய உபயோகமும் அதுபோல வெற்றிலைச் சாறுடன் துளசி சாறும் கலந்து உபயோகபடுத்தினால் மெச்சத்தக்க பலனை தருகின்றன. சொத்தைப்பல், ஈறுகொழுத்து ஏற்படும் வேதனையில் துளசிச்சாறு, கிராம்புத்தூள், கற்பூரம் ஆகியவற்றை கலந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. துளசியை அரைத்து தோலில் பற்றிட காணாக்கடி மறைந்து விடும்.
பேன், அரிப்பு, படை, தேமல், வரட்டுசொரி போன்ற நோய்களில் துளசி சாறு, எலுமிச்சம் சாறு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து தலைக்குத் தேய்த்து வர விரைவில் குணமாகி விடும்.
கடுமையான தலைவலியில் கிராம்பு, சுக்கு, துளசி சாறு ஆகியவற்றை அரைத்து நெற்றியில் பற்றுப் போட உடன் தலைவலி நீங்கி விடும். மூக்கடைப்பு, மண்டையில் நீர் கோர்த்து ஏற்படும் நீர்க்கோர்வை, தலை குடைச்சல் ஆகியவற்றில் துளசியை தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும்.
இப்படிப் பலவகைகளில் உபயோகமாகும் துளசியை அனைவரும் பயிறிட்டு அதன் பலனை முழுவதும் நாம் பெற முயற்சி செய்ய வேண்டும்

சுவையும் - தோஷங்களும்


சுவையும் - தோஷங்களும்
சுவைகள் ஆறு என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் சுவைகள் நமது உடலை இயக்கும் மூன்று தோஷங்களாகிய வாத பித்த கபங்களை எவ்வாறு சமநிலையில் நிறுத்தி ஆரோக்யத்தைத் தருகின்றன என்பதை நாம் அறியாதிருக்கிறோம். ஆயுர்வேதம் சுவைகளின் செயல்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. பஞ்ச மஹா பூதங்களாகிய நிலம் - நீர் - நெருப்பு - காற்று - ஆகாசம் ஆகியவற்றில் இரண்டு பூதங்களின் ஆதிக்கம் சுவைகளை பொருட்களில் தீர்மானம் செய்கின்றன.
இனிப்புச் சுவையில் - நிலம் நீர்
புளிப்புச் சுவையில் - நெருப்பு நிலம்
உப்புச் சுவையில் - நீர் நெருப்பு
கசப்புச் சுவையில் - ஆகாயம் வாயு
காரச் சுவையில் - நெருப்பு வாயு
துவர்ப்புச் சுவையில் - நிலம் வாயு
ஆகியவை மற்ற மஹா பூதங்கள்விட அதிக அளவில் சேர்ந்திருப்பதால் அவைகளின் சேர்க்கை சுவையை நீர்ணயம் செய்கின்றன. மூன்று தோஷங்களாகிய வாத பித்த கபங்களிலும் மஹாபூதங்களின் ஆதிக்கம் கூறப்படுகிறது.
கபதோஷத்தில் - நீர் நிலம்
பித்ததோஷத்தில் - நெருப்பு
வாத தோஷத்தில் - வாயு ஆகாசம்
மேற்கூரிய கருத்துப்படி கபதோஷத்தை அதிகரிப்பதில் இனிப்புச் சுவை முக்கிய பங்கும், புளிப்பும், உப்புச் சுவையும் குறைந்த அளவிலும் பங்கு வகிக்கின்றன. கபம் அதிகரித்து விட்டால் அது உடன் கெட்டு அதன் குணங்களாகிய நெய்ப்பு - குளிர்ச்சி - கனம் - மந்தத்தன்மை - வழுவழுப்பு - கொழகொழுப்பு - ஈஷிக்கொள்ளும் தன்மை ஆகியவை அதிகரித்து தலை பாரம், தலைவலி, ஜலதோஷம், ருசியின்மை, கண் காது அரிப்பு, பசியின்மை, உடல்பளு, போன்றவை ஏற்படும். கபத்தின் சீர்கேட்டில் இம்மூன்று சுவைகளையும் விலக்கி மற்ற மூன்று சுவைகளை அதாவது கசப்பு, காரம், துவர்ப்பு அதிக அளவில் உணவில் சேர்ப்பதன் ரகசியம், பூதங்களாகிய நிலம் நீரின் அளவை குறைத்து சமநிலைக்கு கொண்ட வருவதற்குத்தான். கபத்திற்கு அனுகூலமல்லாதிருப்பதால் இச்சுவைகளை உண்பதால் கபத்தை நீர்க்கச் செய்து வெளியே கொண்டு வருவதால் தலைபாரம், தலைவலி, ஜலதோஷம் போன்றவை குறைந்து குணமாக்கிவிடும். கபத்தைக் குறைப்பதில் சுவையைத் தவிர வேறு சில வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில -
இரவில் கண்விழித்தல்
பலவிதமான தேகப்பயிற்சி
வாந்தி செய்வித்தல்
பயத்தம்பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்
கடலை காய்ச்சிய கஞ்சி சூடு ஆறியதும்
தேன் கலந்து சாப்பிடுதல்
கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள்
பட்டினியிருத்தல்
மூலிகைகள் காய்ச்சிய தண்ணீரால்
வாய் கொப்பளித்தல்.
மஹாபூதங்களில் நெருப்பை அதிகஅளவில் கொண்ட புளிப்பு, காரம், உப்புச் சுவைகளை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பவர்களுக்கு பித்ததோஷம் அதிகரித்து வாய்ப்புண், எப்போதும் வயிற்றில் எரிச்சல், ஆஸன வாய்க்கடுப்பு, சிறுநீர் மஞ்சளாகவும் எரிச்சலுடன் செல்லுதல், ரத்தக்கசிவு, புலன்களாகிய கண், தோல், நாக்கு, மூக்கு போன்ற பகுதிகளில் அதிக உஷ்ணம், தூக்கமின்மை, அதிகப்பசி, துர்நாற்றத்துடன் கூடிய வியர்வை, அதிக கோபம் போன்றவை ஏற்படும்.
இதுபோன்ற நிலையில் பித்தத்தின் சீற்றத்தை இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை அவைகளின் பூதங்களின் சேர்க்கை விசேஷத்தினால் சரி செய்து விடுகின்றன. வேறு சில சிகித்ஸை முறைகளும் கூறப்பட்டுள்ளன.
கசப்பானநெய் பருகுதல் - மூலிகை போட்டு காய்ச்சிய நெய்.
இனிப்பும் குளிர்ச்சியும் சேர்ந்த மருந்துகளால் பேதி செய்தல்.
மணமும், குளிர்ச்சியும், மனதிற்கு பிடித்ததுமான சந்தனம் போன்ற வாசனைப் பொருட்களை உபயோகித்தல்
முத்து மாலை அணிதல்
மனதிற்கு சுகம் தரும் அந்திப்பொழுது, சந்திரன், கீதம், குளிர்ந்த காற்று, தாமரைத் தடாகத்தை பார்த்துக் கொண்டிருத்தல்.
பால், நெய் அதிக அளவில் உணவில் சேர்த்தல்
வாயுதோஷத்தின் சீற்றம் வாயு ஆகாசங்களைக் கொண்ட உணவு மற்ற நடவடிக்கைகளால் உடல்வலி, மூட்டுவலி, குடலின் வாயுவின் ஒட்டம், வயிறு உப்புசம்,, பசி சீர்கெட்டு சில சமயங்களில் அதிகமாகவும், சில சமயங்களில் குறைவாகவும் இருத்தல், மலச்சிக்கல், கடுமையான தலைவலி, உடல் வறட்சி, குளிர்ச்சி அதிகரித்தல் உறக்கமின்மை போன்றவை ஏற்படுத்தும். அம்மாதிரியான நிலைகளில் வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளை தவிர்த்து இனிப்பு புளிப்பு உப்புச் சுவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மேலும் -
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
பஸ்தி எனும் எனிமா சிகித்ஸை
எண்ணெய் தேய்த்து வியர்வை உண்டாக்குதல்
காம சோக பயங்களை தவிர்த்தல்
சூடான வெந்நீரில் குளித்தல்
நெய்ப்புத்தன்மையை அதிகரிக்கும் உணவை உட்கொள்ளுதல்
இப்படியாக வாத பித்த கபங்களின் சீற்றத்தை உணர்ந்து சுவைகளின் குணங்களை மஹாபூதங்களின் வழியாக உணர்ந்து, உணவாகக் கொண்டு சமநிலைப்படுத்தி ஆரோக்யத்தை நிலைநாட்டுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
சுவைகளை பொருத்தவரை 'நித்யம் ஷட்ரஸோ அப்யாச;' என்று அறுசுவைகளையும் தினமும் உணவில் சேர்க்குமாறு ஆயுர்வேதம் உபதேசிக்கிறது. அவைகளின் சீரான சேர்க்கை தோஷங்கள் - தாதுக்கள் - மலங்கள் போன்றவற்றை சரியான நிலையில் வைத்திருக்க உதவுவதால் 'எனக்கு கசப்புப் பிடிக்காது, புளிப்பு பிடிக்காது' என்றெல்லாம் இனிமேல் கூறாமல் அறுசுவைகளையும் உணவில் சேர்த்து பயன்பெறுவோமாக.

ஆயுர்வேதம் - 5 - சுக்கு


சுக்கின் மகிமை
சுக்கை ஆயுர்வேதம் 'மஹொஷதம்' என்று குறிப்பிடுகிறது. மருந்துகளில் உத்தமமானது சுக்கு என்று அதன் பொருள். இன்றைய காலகட்டததில் மனிதருக்கு அளவறிந்து உண்ணவும், வயதுகேற்ப உண்ணவும் தெரியவில்லை. அதனால் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளுக்கு சுக்கு பெரிய இரட்சையாகும். இஞ்சியை நன்கு காயும்படி செய்தால் அது சுக்கு ஆகும்.
சுக்கு குழந்தைகளுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் இவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.
பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டல் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
சுக்கின் பொது குணங்களும் செய்கையும் ஆராய்ந்து பார்த்தால் அது வாத பித்த கபங்களாகிய மூன்று தோஷங்களையும் குறைக்கும். பித்தம் அடங்கும், ருசிதரும், இதயம் பலம் தரும் குரல் தெளிவாக்கும், உடல் வளர்க்கும், உற்சாகம் தரும், பசியைக் கூட்டும். உமிழ்நீர் சுரப்பிக்கும், வயிற்றுப் புளிப்பை நீக்கும்.
'சுக்குக்கு புறமே நஞ்சு, கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு' என்பது பழமொழி. அதனால் சுக்கை மேல் தோல் நீக்கியே மருந்து தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.
உபயோக முறைகள்
1. பற்று - சுக்கைத் தூள் செய்து, சிறிது அரிசிமாவில் சேர்த்து களி செய்து நெற்றியில் பற்றிட தலைவலி தீரும். சுக்கை தனியாக அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்றிட வீக்கம் கரையும். கால் குடைச்சல், மூச்சுப்பிடிப்பு, வலி உள்ள இடத்தில் சுக்கை அரைத்துப் பூசி குணம் பெறலாம்.
2. கெடாமல் இருக்க - கட்டுச் சோற்றில் சுக்கைப் சேர்க்க சில தினங்கள் உணவு கெடாது. மோரில் உப்புடன் சுக்கு சேர்க்க, மோர் கெடாது.
3. பல் வலிக்கு - சுக்கு துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்று வர பல்வலி எகிர்வலி குறையும்.
4. குடிக்க - 2 ஸ்பூன் சுக்கு பொடியை "அரை" லிட்டர் தண்ணீரில் போட்டு "கால்" லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, 6 ஸ்பூன் மூன்று வேளை குடித்தால் வயிற்றறுவலி, பொருமல், பேதி, குல்மம், குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும். மேலும் சுக்கு, ஜீரகம், கொத்தமல்லி மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து, 2 ஸ்பூன் "அரை" லிட்டர் தண்ணீரிலிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து தாகம் எடுக்கும் போதெல்லாம் அருந்தலாம். எந்த குடிநீரையும் வீட்டில் தூய்மை செய்யும் முறை இது.
5. வயிற்றும் போக்கை நீக்க 10 கிராம் சுக்கை அரைத்து, புளித்த மோரில் களியாகக் கிளரி மூன்று வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொள்ள வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.
6. குளிக்க - சுக்கைத் தட்டிப் போட்டு வெந்நீர் தயார் செய்து குளிக்க தலையில்
நீர்க்கோர்வை தலைவலி, முகநரம்பு வேக்காளம் தீரும்.
சுக்கு எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் அதனை 'சர்வரோக நிவாரணி' என்றே அழைக்கலாம்.

Tuesday, March 5, 2013

ஆயுர்வேதம் 1

http://www.kamakoti.org/kamakoti/newTamil/ayurindex.html

ஆயுர்வேதம் 4


சிக்கன்குனியா,மூட்டுவலிக்கு மருந்து
டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
சிக்குன்குனியாவால் ஏற்பட்டுள்ள காய்ச்சல், உடல் மற்றும் மூட்டு வலி, பசியின்மை, உடல் சோர்வு, ருசியின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் காணப்பட்டால் அச்சமயம் சாப்பிட ஏற்ற உணவு கஞ்சியேயாகும். காய்ச்சலின் வேகம் எவ்வளவுக் கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கஞ்சியையும், லேசானதாகத் தயாரிக்க வேண்டும். கஞ்சிக்கேற்ற பொருள்களில் புழுங்கலரிசியும் பார்லியும் நல்லது. புழுங்கலரிசியில் சத்து அதிகம். அதனால் அது உடலுக்கு வலிமை தரக்கூடியது. பார்லி உடலிலுள்ள அடைப்புகளைப் போக்கும். அதனால் வயிற்றில் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படாது.

புழுங்கலரிசியைச் சிறிது சிவப்பு காணும் வரை லேசாக வறுத்து, அதனுடன் பார்லியையும் வறுத்துச் சேர்க்கக் கஞ்சி எளிதில் ஜீரணமாகி விடும். வறுத்த முழு அரிசி, பார்லி ஒரு பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பங்கு சுண்டும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். வடிகட்டிய கஞ்சியை இளஞ்சூடாகச் சிறிது இந்துப்பு கலந்து காலை, மதியம், இரவு குடிக்கவும். கஞ்சியைக் குடித்த பிறகு இந்துகாந்தம் எனும் கஷாயத்தை 15 மிலி. எடுத்து 60 மிலி. சூடான தண்ணீர் சேர்த்துப் பருகக் காய்ச்சல், உடல்வலி, மூட்டு வலி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், உமட்டல் முதலியவை விரைவில் குறைந்து விடும். உடலுக்கு நல்ல பலத்தையும் இந்தக் கஷாயம் ஏற்படுத்தித் தரும். நல்ல ருசியும் பசியும் ஏற்பட்டு விட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நெல்பொரி ஒரு பங்கு, 20 பங்கு தண்ணீர் விட்டு கால் பங்கு சுண்டக் காய்ச்சி, அந்தக் கஞ்சியில் கால் பங்கு பால் கலந்து சாப்பிட களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படும். உடம்பில் கடுப்பு வலி, கனம், உடலை முறித்துக் கொள்ளும் வேதனை முதலிய வாயு அதிகமாயுள்ள நிலையில் இரண்டு புளியங்கொட்டையளவு சுக்கை எடுத்து அதை நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிடலாம். உடல் வலி, வேதனை, கனம் முதலியவை நன்கு குறையம்.

சிலருக்குக் காய்ச்சல் விட்ட பிறகும் தொடர்ந்து ஏற்படும் மூட்டு வலி, வீக்கத்திற்கு பிருகத்யாதி கஷாயம் 7.5 மிலி + பலாகுடூச்யாதி கஷாயம் 7.5 மிலி. சூடான தண்ணீர் 60 மிலி. கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட ஏற்பட்டுள்ள உபாதைகள் நன்கு குறைந்து விடும்.

வலி வீக்கம் உள்ள மூட்டுகளில் உத்வர்த்தனம் சூரணம், குலத்தம் சூரணம், ராஸ்னாதி சூரணத்தை 4; 2; 1 என்ற விகிதத்தில் கலந்து புளித்த சூடான மோருடன் குழைத்து பற்று இட்டு அது காய்ந்தவுடன் நீக்கி விடும் சிகிச்சை முறையால் மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள நீர் வற்றி வலி குறையும். ஜடாமயாதி சூரணமும் இதுபோன்ற வலி நிவாரணியே. இந்த மருந்துகள் நரசத்பேட்டை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவமனையில் விற்கப்படுகின்றன.

வீக்கம், வலி வற்றிய பிறகு மூலிகைத் தைலமாகிய பிண்டதைலம், ஸஹசராதி தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கித் தடவி அந்த மூட்டிற்கு ஓய்வளிக்கும் வகையில் துணியைச் சுற்றி வைத்திருக்க வலியும் வீக்கமும் குறைந்து விடும். தைலத்தைத் தடவி சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு வேப்பிலை, நொச்சி இலை, புளிய இலை, முருங்கை இலை, ஆமணக்கு இலை, எருக்கு இலை அகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரில் துணியைப் பிழிந்து ஒத்தடம் கொடுக்கப் பூரண நிவாரணத்தை விரைவில் பெறலாம்.

ஆயுர்வேதம் 3

“முதுகு வலிக்கு வெந்நீர்”
டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
முதுகை தாயில்லாக் குழந்தை என்று குறிப்பிடுவார்கள் காரணம், முதுகுப் பகுதியில் நம் கையால் எளிதாகச் சோப்போட்டு தேய்ப்பதும், எண்ணெய்யைத் தடவுவதும் முடியாது என்பதால்தான். முதுகுவலி உள்ளவர்கள் எப்போதும் நேர் சீராக உட்கார்வதும், நிற்பதும், படுத்துக் கொள்ளவும் வேண்டும். ஈஸி சேரில் சாய்ந்துகொண்டு தும்முவதும், அதிலிருந்து பக்கவாட்டில் குனிந்து பொருள்களை எடுப்பதும் கூடாது. ஒரு வேலையை ஒரே நிலையில் இருந்துகொண்டு முதுகுத் தசைகளுக்குக் களைப்பு ஏற்படுமளவுக்கு நேடுநேரம் செய்யக்கூடாது. காலணிகளில் குதிகால் அதிகம் உயர்ந்திருக்கக் கூடியவற்றையும், அதிகம் தேய்ந்தவற்றையும் அணியக்கூடாது. கனமான சாமான்களை இசைவு கேடாய் தூக்கக்கூடாது. சில்லிட்டிருக்கும் தரையில் முதுகுப்பகுதி படும்படி படுப்பதும், குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். நாற்காலியில் இருக்கையை முழுவதுமாக ஆக்கிரமிது நிமிர்ந்து உட்காரவேண்டும்.
குடலில்  வாயு அதிகரிக்கும் உணவுப் பண்டங்களாகிய காராமணி, மொச்சைக்கொட்டை, சூடு ஆறிய வறுத்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானம், பாக்கு, உப்புக்கடலை, சூடு ஆறியப்போயுள்ள பருப்பு சாம்பார் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குடலில் ஏற்படும் வாயு அழுத்தம்-மலச்சிக்கல், வயிறு உப்புசம், தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தும், உணவைச் சூடாகவும், நல்ல பசி ஏற்பட்ட பிறகும் சாப்பிடுவது நல்லது. இனிப்பு, புளிப்பு உப்புச்சுவை, வலி நீங்க உதவும் சுவைகளாகும்
.

ஆயுர்வேதம் 2

நாள் முழுவதும் நறுமணம் கமழ…
டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
மனித இனத்தின் உடல் கூறு எல்லாம் ஒரே தரத்தில் இருப்பதில்லை. தாயும் தந்தையும் சேர்ந்து கருவாக உதித்த அந்த கணத்திலிருந்த தாய், தந்தை பீஜ நிலை, கால நிலை, பிறந்த பின் வளர்ந்த சூழ்நிலை, உணவுப் பழக்கம் முதலியவற்றால் ஒவ்வொருவரது தேகநிலையும் ஒவ்வொரு விதமாக அமைந்துவிடுகிறது. இதை தேகவாகு என்று கூறுவர். நீங்கள் பித்த தேகவாகு உள்ளவராக இருந்தால் தேமல், அக்குளில் ஏற்படும் கடும் நாற்றம் போன்றவை பித்தத்தின் இயற்கை சுபாவத்தினால் ஏற்படுபவை. பித்த தோஷத்தின் குணத்தை வர்ணிக்குமிடத்தில் ‘விஸ்ரம்’ அதாவது துர்வாடை கொண்டது என்று வாக்படர் எனும் முனிவர் கூறுகிறார். பூண்டு, வெங்காயம், முள்ளங்கி போன்ற கார மணமுள்ள பொருளை உண்பவருக்கு துர்வாடை வியர்வையில் அதிகம் வெளிப்படும். வாசனை நிறைந்த சோப்பு, சென்ட், பவுடர் போன்ற உடலின் வெளிப்புற சக்திகளால் மட்டும் இந்த துர்வாடையை நிரந்தரமாக தீர்க்க இயலாது. உடலின் உட்புறத்தையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம், எரிச்சல், டென்ஷன் போன்ற நிலைகளாலும் பித்தத்தின் சீற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனாலும் துர்வாடை வியர்வையில் வரக்கூடும். உடல் மற்றும் மன அமைதியைத் தந்து பித்தத்தையம் ரத்தத்தின் சுத்தத்தையும் ஏற்படுத்தும் உணவு வகைகளான கரும்புச்சாறு, நெய், வெண்ணெய், சர்க்கரை கலந்து கடைந்த மோர், இனிக்கும் தயிர், புளிக்காத இனிக்கும் பழங்கள், பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை, மணத்தக்காளி, வல்லாரை, சிறுநீரை, பூசணிக்காய், பரங்கிக்காய், வெள்ளரிப்பிஞ்ச, புடலங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், வாழைப்பூ, சர்க்கரைவள்ளிக்கிழங்கு வாழைத் தண்டு, சுண்டைக்காய், மாவடு, இஞ்சி, எலுமிச்சை, நார்த்தங்காய், மாதுளம்பழம், நெல்லிக்காய், பழைய பச்சரிசி, கோதுமை, பச்சைப்பயறு போன்றவை சாப்பிட உகந்தவை. காரம், புளி, உப்பைக் குறைக்கவும். பானையில் வெட்டிவேர் போட்டு ஊறிய தண்ணீரை குடிப்பதற்குப் பயன்படுத்தவும்.
உடலில் நறுமணம் கமழ கடுக்காய்த் தோல், லோத்திரப் பட்டை, வேப்பம் பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, மாதுளம்பட்டை இவற்றை மிகவும் மென்மையான தூளாக்கிக் கொள்ளவும்.
இந்தத் தூளுடன் சந்தனத் தூள் மற்றும் ஃபேஸ் பவுடர் கலந்து வைத்துக் கொண்டு பூசிவர பெண்களுக்கு ஏற்படும் உடல் நாற்றம் மறையும். நாள் முழுவதும் நறுமணம் மாறாமலிருக்கும்.
கடுக்காய்த் தோல், சந்தனத் தூள், கோரைக் கிழங்கு, சிறுநாகப்பூ, விளாமிச்சைவேர், வெள்ளை லோத்திரப்பட்டை, ஃபேஸ் பவுடருடன் கலந்து உடலில் பூசிக் கொள்ள ஆண்களுக்கு வியர்வையால் ஏற்படும் கெட்ட மணம் விலகும்.
அக்குள் நாற்றம் விலக கடுக்காய், வில்வபழச் சதை, கோரைக்கிழங்கு, புளி, புங்கன் விதை இவற்றைத் தூளாக்கி தண்ணீரில் குழைத்து அக்குள் பகுதியில் பூசிய பின் குளிக்க அங்குள்ள கெட்ட மணம் மறையும்.
நாவல் இலையை நன்கு நைய அரைத்துப் பூசிக் குளிக்க கோடைக் காலத்தில் வியர்வையால் ஏற்படும் துர்வாடையும் கோடைக் கட்டி சினப்புகளும் மறையும்.
பாசிப்பயறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, விலாமிச்சைவேர், பூலாங்கிழங்கு இவை வகைக்குச் சம அளவு சேர்த்து இடித்த தூல், குளியலுக்குப் பூசிக் கொள்ள நல்ல மணம் தரவல்லது. தேமலும் மறைந்துவிடும். ஆயுர்வேத மருந்துகளில் ஏலாதி சூரணம் பாசிப்பயறுடன் கலந்து தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதம்

பகலில் தூங்கினால் சளி!
டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
கபம் அதிக அளவில் சீற்றமடைந்து மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பகுதியில் சேரும்போது அடைப்பை ஏற்படுத்துகிறது. மூச்சு சீராகச் சென்றுவர முடியாமல் இருப்பதால் நாம் வேக வேகமாக மூச்சை இழுத்து விட வேண்டியுள்ளது. கபத்தைச் சீற்றமடையச் செய்யும் உணவையும் செயல்களையும் நீங்கள் முக்கியமாக தவிர்க்க வேண்டும்.
பகலில் தூங்குதல், உடலுழைப்பு இன்மை அல்லது உடற்பயிற்சி செய்யாமை, சோம்பல், இனிப்பு, புளிப்பு, உவர்ப்புச் சுவைகள் உள்ள பொருள்களை உட்கொள்ளுதல், குளிர்ச்சி, எண்ணெய் பசை எளிதில் செரிக்காத உணவு, சம்பா அரிசி, உளுந்து, கோதுமை, எள்ளு, அரிசி போன்றவை மாவினால் செய்யப்படும் தின்பண்டங்கள், தயிர், பால், கரும்புச் சாறு, நீர்ப்பாங்கான இடங்களில் வசிக்கும் விலங்குகளின் புலால், நீரில் வாழும் உயிரினங்களின் புலால், பனை, தேங்காய், சுரைக்காய், பூசணி போன்ற கொடிகளில் காய்க்கும் காய்கறி வகைகள், உண்ட உணவு செரிமானடையும் முன் மீண்டும் உண்பது ஆகியவை கபத்தைச் சீற்றமடையச் செய்யும். மேலும் குளிர்ந்த பொருள்களை உட்கொள்ளுதல், குளிர்கால நாளின் முதல் ஜாமத்திலும், அந்திமாலை, உணவு உண்பதும், கபம் சீற்றமுறும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. நெய், வெண்ணெய், ஆடைத் தயிர், வெல்லம், கரும்புச் சாறு போன்றவை கெடுதல், தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தான்யங்கள் சாப்பிட உகந்தது. அரிசியை உணவாக மிதமாகச் சேர்க்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, கண்டந்திப்பிலி சேர்த்துக் காரமாய் உள்ள ரஸம் சாதம் சாப்பிட நெஞ்சுக் கூட்டில் படிந்திருக்கும் சளி இளகி மூச்சு சீராகச் செல்ல வழியை ஏற்படுத்தித் தரும். இதனால் இளகிய சளியை வெளியே கொண்டுவர வசம்பு, கடுகு, இந்துப்பு இவற்றை சம அளவு சூர்ணம் செய்து சிறிதளவு வெந்நீருடன் கலக்கி சாப்பிட்டு, மேலும் வெந்நீர் நிறைய குடிக்கவும். உடனே வாந்தி வரும். கபம் வெளியே வந்துவிடும். பிறகு மஞ்சள், ஓமம் இரண்டையும் தூளாக்கி துணித்திரியில் சுற்றிக் கொளுத்தி வரும் புகையை மூக்கினாலும் வாயினாலும் உறிஞ்சவும். நீலகிரித் தைலத்தை கொதிக்கிற வெந்நீரில் ஊற்றி ஆவி முகத்திலும் தலையிலும் படும்படியாக வேது பிடிக்கவும்.
ஆயுர்வேத மருந்துகளில் தசமூலகடுத்ரியாதி கஷாயம் 3 ஸ்பூன் (15 மி.லி.), 12 ஸ்பூன் (60 மி.லி) கொதித்து ஆறிய தண்ணீர், 1\4 ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 1 மாத்திரை சுவாஸனந்தத்துடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். வாஸாரிஷபம் 15 மிலி+ தசமூலாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்து அதனுடன் கலந்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். இரவில் படுக்கும் முன்பாக 5 கிராம் (1 ஸ்பூன்) அகஸ்திய ரஸாயனம் எனும் லேஹ்யத்தை நக்கிச் சாப்பிடவும். 48 நாட்கள் வரை சாப்பிடலாம். கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலைகளில் இம்மருந்துகள் கிடைக்கும்.