Thursday, December 24, 2015

திருநீறு (விபூதி) பற்றி மிகப் பெருமை


சித்தர்தாசன் சுந்தர்ஜி
“மந்திரமாவது நீறு’
வானவர் அணிவது நீறு’
என்று திருநீறு (விபூதி) பற்றி மிகப் பெருமையாகக் கூறியுள்ளனர்.
ஆன்மிக ஈடுபாடுள்ளவர்கள் திருநீறு அணிந்துகொள்கின் றனர். இது சைவர் களின் சின்னம் என்று கோவில்களில் பிரசாதமாகத் தருகிறார்கள். இதுபோன்று இறைவழிபாடு சம்பந்தப்பட்ட செயல்களில் திருநீறு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த திருநீறு சமயச் சின்னம் மட்டும்தானா? உடலில் திருநீறு பூசிக்கொள்வதால் நன்மையுண்டா? நாம் பூசிக்கொள்வது உண்மையான திருநீறுதானா? என ஏராளமான கேள்விகள் உண்டு. திருநீறு பற்றி சித்தர்கள் கூறியுள்ள சில உண்மைகளை சுருக்கமாக அறிவோம்.
திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப் பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்களால் உருவாக்கப்பட்டது திருநீறு. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.
திருநீறு தயாரிக்கும் முறைதிருநீற்றுப் பச்சிலைகள். (இதனை சில இடங்களில் மக்கள் திணுத்திப் பச்சை இலை என்றும் கூறுவர்), வில்வப்பழ ஓடுகள், பசுமாட்டுச் சாணம்.
மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.
நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.
இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.
நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும். நமது நெற்றியில் இந்த சாம்பலை முதலில் பூசியவுடன், வெண்மையான சாம்பல் தலையிலுள்ள நீரை உறிஞ்சி கறுப்பாக மாறும். பின் அதைத் துடைத்துவிட்டு மறுபடியும் பூசிக்கொண்டால் வெண்மை நிறமாகவே இருக்கும்.
இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள். பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.
மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப்பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை “புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்’, “மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு’ என்று குரு அகத்தியர் கூறுகிறார்.
இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்திவந்த மூலிகை மருத்துவப் பொருளாகும். எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“விந்துநிலை யறிந்து விந்தை கண்டால்
விதமான நாதமது குருவாய்போகும்
அந்தமுள்ள நாதமது குருவாயானால்
ஆதி அந்த மானகுரு நீயே யாவாய்’
என்ற குரு அகத்தியர் வாக்கினை ஏற்று, சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த உண்மைகளைக் கடைப்
பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வை நல்வாழ்வாக அமைத்துக்கொள்ள முடியும்!
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment