Showing posts with label தோட்டம். Show all posts
Showing posts with label தோட்டம். Show all posts

Friday, September 20, 2013

வீட்டுக் காய்கறி தோட்டம்

வீட்டுக் காய்கறி தோட்டம்

காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.

வீட்டுக்காய்கறித் தோட்டம்
மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது. மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.

வீட்டுக்காய்கறி தோட்டத்திற்கான இடம் தேர்வு செய்தல்
வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறி தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து நபர்கள் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு தேவைப்படும் காய்கறியை உற்பத்தி செய்ய 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானதாகும்.
நிலம் தயார் செய்தல்நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45 செமீ ஜ் 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.

விதைத்தல் மற்றும் நடவு செய்தல்
நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.

நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.

தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

பலவருட பயிர்கள்முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.
பயிரிடும் திட்டம்
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)
பாத்தி எண்
காய்கறியின் பெயர்
பருவம்
01.
தக்காளி மற்றும் வெங்காயம்
ஜுன் - செப்டம்பர்

முள்ளங்கி
அக்டோபர் - நவம்பர்

பீன்ஸ்
டிசம்பர் - பிப்ரவரி

வெண்டைக்காய்
மார்ச் - மே
02.
கத்தரி
ஜுன் - செப்டம்பர்

பீன்ஸ்
அக்டோபர் - நவம்பர்

தக்காளி
ஜுன் - செப்டம்பர்

தண்டுகீரை, சிறுகீரை
மே
03.
மிளகாய் மற்றும் முள்ளங்கி
ஜுன் - செப்டம்பர்

தட்டவரை / காராமணி
டிசம்பர் - பிப்ரவரி

பெல்லாரி வெங்காயம்
மார்ச் - மே
04.
வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி
ஜுன்  -  ஆகஸ்டு

முட்டைக்கோஸ்
செப்டம்பர்  -  டிசம்பர்

கொத்தவரை
ஜனவரி - மார்ச்
05.
பெரிய வெங்காயம்
ஜுன்  -  ஆகஸ்டு

பீட்ருட்
செப்டம்பர் -  நவம்பர்

தக்காளி
டிசம்பர் - மார்ச்

வெங்காயம்
ஏப்ரல் - மே
06.
கொத்தவரை
ஜுன் - செப்டம்பர்

கத்தரி மற்றும் பீட்ருட்
அக்டோபர் - ஜனவரி
07.
பெரிய வெங்காயம்
ஜுலை - ஆகஸ்டு

கேரட்
செப்டம்பர் - டிசம்பர்

பூசணி
ஜனவரி - மார்ச்
08.
மொச்சை, அவரை
ஜுன்  -  ஆகஸ்டு

வெங்காயம்
ஜனவரி - ஆகஸ்டு

வெண்டைக்காய்
செப்டம்பர் -  டிசம்பர்

கொத்தமல்லி
ஏப்ரல் - மே
 

மேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.

காய்கறி தோட்டத்தின் பயன்கள்முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.

வீட்டு காய்கறி தோட்டத்தின் பொருளாதார ஆதாயங்களும் பயன்களும்
காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு  காய்கறி தோட்டத்தில் கிடைக்கிறது.

வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.

வீட்டுக்காய்கறி தோட்டத்துடன் கூடவே கால்நடை வளர்ப்பு, பெண்கள் சுயவருமானம் பெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றது.

Thursday, September 19, 2013

மொட்டை மாடி, பால்கனித் காய்கறி தோட்டம்


March 13, 2012 at 12:54pm
அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இருக்க உதவும், மனதிற்கு ஆறுதல் தரும் ஆலயம் இது என்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாகக் காய்கறித் தோட்டம் வளர்ப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உள்ள இந்தத் தம்பதி, இந்தத் தோட்டம் உளவியல் ரீதியாக மனதிற்கு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டில், பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காய்கறித் தோட்டத்தை வளர்த்துவருகின்றனர். வாடகை வீட்டில் தோட்டம் போட முடியுமா? அதற்கு இடமும் நேரமும் இருக்குமா? அதைப் பராமரிப்பது சாத்தியமா? இப்படிப் பல சந்தேகங்களுக்கு அவர்களிடமிருந்து “முடியும்” என்று பதில் வருகிறது. மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்கிறார்கள்.
‘‘எங்க வீட்டு பால்கனித் தோட்டம் பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, வெற்றிலைக் கொடின்னு விதவிதமாக இருக்கு’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் லட்சுமி ஸ்ரீராம், தன் அனுபவத்தையே காய்கறித் தோட்டம் பற்றிய பாடம் ஆக்குகிறார்.
“என்னோட சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசாக இருக்கும்போது, தோட்டத்துல என் பாட்டி வளர்க்கிற கீரையை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. அரைக்கீரை சாப்பிட்டா, இரும்புச் சத்து மாத்திரையே தேவையில்லைன்னு சொல்லி பாட்டி வளர்க்கிற கீரை நல்ல உயரத்துக்கு வரும். அதோட விதையை சேகரிக்க, அதை சாம்பல்ல கலந்து மறுபடியும் விதைப்பாங்க. எதுக்கு பாட்டி சாம்பல்னு கேட்டா அப்பதான் விதையை எறும்பு சாப்பிடாதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.” அந்தப் பாட்டிதான் செடி வளர்க்கும் ஆர்வத்தை இவருக்குள் விதைத்துள்ளார்.
மேற்கொண்டுஅவரிடம்பேசிக் கொண்டிருந்ததில் காய்கறிகள் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
கோடைக் காலத்திற்கு ஏற்ற முறையில் என்னென்ன பயிரிடலாம்?
புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி.
மழைக்காலத்திற்கு?
அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய்


குளிர்காலத்திற்கு?
முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய்
மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கும், ப்ளாஸ்டிக் போன்றவற்றில் செடி, கொடி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவதே நல்லது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறும்.

அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்குக் கிடையாது. அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி செடி, கொடிகள் வளர்ச்சி குன்றத் தொடங்கும்.


மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்க்கத் தேவையான வழிமுறைகள் என்ன?
1 பங்கு செம்மண், 3 பங்கு ஆற்று மணல் கலந்த கலவையே செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்ற மண் கலவை. விதை ஊன்றிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இயற்கை உரங்களான ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாகத் தூவலாம்.
மொட்டை மாடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் மண்தொட்டியில் தாவரம் வளர்ப்பதால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?

ஒரு பாதிப்பும் ஏற்படாது. மண் தொட்டியில் செடி, கொடிகள் பயிரிடப்படும்போது, அதிகப்படியான நீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும்.
வாடகை வீட்டில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதில் ஏற்பட்ட அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்?.
பல அனுபவங்கள் உண்டு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி புகும்போது முதலில் நான் பார்க்க விரும்புவது, செடி, கொடி வளர்க்க இடம் கிடைக்குமா? என்பதுதான். வீட்டுச் சொந்தகாரரின் அனுமதி பெற்றுத்தான் காய்கறித் தோட்டம் போடுகிறேன். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்கூல் வ்யூ தெருவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அங்கு மொட்டை மாடியில் 140 மண் தொட்டிகள் வைத்து, காய்கறித் தோட்டம் அமைத்தோம். செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, முட்டை கோஸ், வெற்றிலை என விதவிதமான செடி, கொடிகளை வளர்த்துவந்தோம். வீடு காலி செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலையில், அத்தொட்டிகளை நன்கு பராமரிக்கக்கூடிய சில நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சில தொட்டிகளே வைத்துக்கொள்ள முடிந்தது. மண் தொட்டிகளைப் பிரிய மனம் இடம் கொடுக்க வில்லை. அது மறக்க முடியாத அனுபவம்.
மண் தொட்டியில் செடி, கொடிகள் முழுமையான வளர்ச்சியை அடையாததற்குக் காரணம் என்ன?
நான் தினமும் எழுந்தவுடன் என் வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவேன். வெற்றிலைக் கொடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வேன். பூத்துக் குலுங்கும் மல்லி, ரோஜா இதழ்களைத் தடவிக் கொடுப்பேன். பிஞ்சு விட்டுக்கொண்டிருக்கும் கத்திரி, வெண்டைக் காய்களை முத்தமிடுவேன். இவ்வாறு, நாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளைப் பேரன்புடன், பாதுகாத்துவந்தால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மண் கலவையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் நம் மனம்தான் காரணம். தாவரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிடுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. நம்மைப் போல தாவரத்திற்கும் உயிர், உணர்வுகள் உண்டு.


“ஏன் நீ காய்க்க மாட்டாய்?, ஏன் நீ பூக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்பதை விட, அத் தாவரங்களிடம் புன்னகை செய்யுங்கள். “நீ நன்றாக வளர்வாய்!” என்று வாழ்த்துக்களைச் சொல்லிவாருங்கள். நீண்ட காலம், வளமுடன் இருக்கும். செடி, கொடிகள் நன்கு வளரும்.

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.
''நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.
வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,
குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.
இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.
கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.
100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும்.

சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா?அதற்கும் எங்கும் போக வேண்டாம்.ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும்உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டுபூந்தொட்டிகளில் போட்டு வந்தால்அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடிஅளவு போட்டாலே, காய்கறிகள் செழித்துவளரும். குளியலறைக் கழிவு நீர்வெளியேறும் இடத்தில் கல்வாழை
சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால்அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும்.இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங்செய்வதுதான் இந்த முறையின்முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங்செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதேஇருக்காது. கழிவு நீர் இல்லை என்றால்கொசு இருக்காது. இதை எல்லாம்செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சிஇருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழிஅதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெதுவெதுப்பாகவும், சித்திரை வெயிலில்தண்ணீர்
எடுத்தால் குளிராகவும் இருக்கும்.என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின்குளிர் எப்போதும் அப்படியேதான்இருக்கிறது.
வெளிப்புற வெப்பம் கூடி,இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும்தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரியமரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியானநிலையில் சீராக இருக்கும்!''என்கிறார் இந்திரகுமார்.Source : AV


சிட்டுக் குருவிகள் வந்துபோகும் மொட்டை மாடி தோட்டங்கள்.
வீட்டில் கார்டன் போட இடமில்லையே என்ற கவலை இப்போது பலருக்கு இருக்கிறது. இனி அந்தக் கவலையில்லை! சிட்டி மெயின் ரோடில் உங்கள் வீடு இருந்தாலும்... அதில் மொட்டை மாடி இருந்தால்போதும் மனசுக்குப் பிடிச்ச கார்டன் ரெடி!
சென்னை அசோக் நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள அந்த வீட்டின் மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் ‘கீச் கீச்’ சப்தமிட்டபடி நம்மை வரவேற்றன... அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸினஸ் டைரக்டராக இருக்கும் கண்ணன்!

‘‘எங்க வீடு மெயின்ரோட்டை ஒட்டி இருப்பதால் எப்போதும் பொலியூஷன், தேவையில்லாத சத்தம்... வீட்டிற்கு வந்தால் அமைதியே இல்லியேன்னு ரொம்ப கவலைப்பட்டேன். அப்புறமாத்தான் மொட்டை மாடியில் கார்டன் வைக்கணும்னு தோணுச்சு. செடி, கொடின்னு இருந்தால்தான் பறவைகள் வரும்னு நினைச்சேன்... இப்போ என் டெரஸ் கார்டன் நினைச்சமாதிரி அமைஞ்சிருக்கு... நிறைய குருவிகள் வருது... காலை நேரத்திலேயும் மாலையும் அதுங்களோட சத்தம் இனிமையா இருக்கு. அப்பாவுக்குத் தோட்ட வேலைன்னா ரொம்பப் பிடிக்கும். அவருக்கும், அம்மாவுக்கும்கூட இந்த கார்டன் ரிலாக்ஸ் தர்ற இடமா இருக்கறதில் எனக்கு ரொம்ப திருப்தி, சந்தோஷம்!’’ என்கிறார்.

மொட்டைமாடியில் கார்டனா? பேஸ்மெண்ட்  ஸ்ட்ராங்க்தான், பில்டிங் வீக் ஆகிவிடாதா என்கிறீர்களா? ‘மொட்டைமாடியில் முறைப்படி கார்டன் அமைத்தால், பில்டிங்கிற்கு எந்த சேதாரமும் ஆகாது’ என்கிறார், லேண்ட்ஸ்கேப் நிபுணர் ஆண்டனிராஜ்.

எதைச் செய்ய வேண்டும்? எது கூடாது?

‘‘டெரஸ் கார்டன் அமைக்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் வைப்பது அவசியம். முதலில் மொட்டை மாடியில் தண்ணீர் எந்தப் பக்கம் நோக்கிப் போகிறது என்பதைப் பார்த்து, அதற்கு எதிர்பக்க இடத்தை கார்டன் போட தேர்ந்தெடுங்கள். அந்தப் பகுதியில் கார்டன் ஸ்கெட்ச் போட்டு, அரை அடி உயரத்திற்கு கார்டன் தரையை உயர்த்திக்காட்ட தடுப்புச் சுவர் கட்டுங்கள். இந்த தடுப்புச் சுவரின் நடுவில் கார்டன் நீர்வடிய துவாரங்கள் இருக்க வேண்டும்.  அதன்மேல் ஜியோ டெக்ஸ்டைல் மேட்டுடன் லைட் வெயிட் மண் கலந்து போட வேண்டும். இந்தக் கலவை 5 கிலோ எடை மண் தேவைப்படும் இடத்தில் மண்ணை 2 கிலோவாக குறைக்கக்கூடியது. இதன்மேல் புல்தரை அமைத்து, அங்கங்கே தொட்டிகள் வைத்து, வழித்தடங்கள் அமைத்துவிட்டால் கார்டன் ரெடி.

மழை பெய்தாலும், தண்ணீர் அதிகமாகிவிட்டாலும், வாட்டர் ப்ரூஃப் வழியே நீர் வடிந்துவிடும். மொட்டை மாடித் தரைக்கு எந்த டேமேஜும் வராது’’ என்கிறார் ஆண்டனிராஜ்.

அப்புறமென்ன... உங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் பச்சைப் பசேல் தோட்டம் போடவேண்டியதுதானே

ரசாயன உரமில்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள்
புதுச்சேரி, ஏப்ரல் 3: ரசாயன உரமில்லாமல் இயற்கை உரமிட்டு வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள் வளர்த்து வரும் தம்பதியினர். அவ்வாறு விளையும் காய்கறிகளை மட்டுமே சமைத்துச் சாப்பிட்டு வருவதாக கூறுகின்றனர்.




புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்தவர் பிரடெரிக் (வயது 63). இவர் புதுச்சேரி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் முதுநிலை மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி செங்கோல் மேரி (வயது 63). இவர் புதுச்சேரி மகப்பேறு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.
இவர்களது வீட்டின் இரண்டாவது மொட்டை மாடி முழுவதும்  தொட்டிகளில் பல்வேறு செடிகளும், மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றது. தற்போது இவர்களது மாடி தோட்டத்தில் உள்ள வாழைக் குலை தள்ளியுள்ளது. இதனைப் பார்ப்பவர்கள் மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிட்டு வருவது பற்றி செங்கோல் மேரி கூறியதாவது:
எனது கணவர் பிரெடரிக் ஒரு நாள் ரசாயண உரமில்லாமல், இயற்கை உரத்தில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து கணவரின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக கடந்த முயற்சித்து மாடியில் தொட்டிகளில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய்,  பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற செடிகளையும், கொடிகளில் வளரக்கூடிய பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவைகளையும் வளர்த்தேன்.
இதனை கடந்த 2000ம் ஆண்டில் இருந்து செய்து வருகின்றேன். அப்போது முதல் பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து பறிக்கப்படும் காய்கறிகளையே சமைத்துச் சாப்பிட்டு வருகின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வீட்டின் மெத்தையில் தோட்டம் வைத்திருப்பதைப் பார்த்த மதுரையில் உள்ள எங்களது நண்பர் ஒருவர் வாழைக்கன்று ஒன்றை கொடுத்தார். அந்த வாழைமரம்தான் தற்போது ஐந்தாவது முறையாக குளை தள்ளியுள்ளது.
மேலும் பப்பாளி மரத்தையும் வளர்த்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கில் வாங்கிய மாமரக்கன்று ஒன்றை தொட்டியில் வளர்த்தோம். அம்மாமரம் ஒரு ஆண்டிலேயே சிறந்த முறையில் கனிகளைக் கொடுத்தது.
அதன்பின்னர் நாங்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் தொட்டியை உடைத்துக் கொண்டு மாமரத்தின் வேர் வந்ததால், அம்மாமரத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்து விட்டோம்.
எங்கள் வீட்டு தோட்டத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றோம். ரசாயண உரங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. பூச்சி மருந்தாக சாண சாம்பலை மட்டுமே தூவுவோம். மற்றபடி எந்தவிதத்திலும் ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்துவதில்லை.
இந்த தோட்டம் எங்களுக்கு மிகந்த சந்தோஷத்தை தருகின்றது. மெத்தை எத்தனையாவது மாடியாக இருந்தாலும் நாம் நினைத்தால் தோட்டத்தை அமைத்து, பயிரிட்டு  காய்கறிகளைப் பறித்து சந்தோஷமாக வாழலாம். இந்த தோட்டம் வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...
திரு சுல்தான் அவர்களே,
மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி,தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக், முள்ளங்கி போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும்.அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/i2020201a-ea3153ep-abia32020i2039

திரு சுல்தான் அவர்களே, தயவுசெய்து உங்கள் ஊர் பெயரை குறிப்பிட்டு எழுதவும்.

முனைவர் கதிரேசன்,
வேளாண்மை, இண்.டி.ஜி.
இணைய தளங்களிலிருந்து

பசுமை மாடி- வீட்டுத்தோட்டம்!

பசுமை மாடி- வீட்டுத்தோட்டம்!


பதிவர் கவுசல்யா "மொட்டை மாடியில் வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி" என அவசியமான ஒரு பதிவிட்டிருக்கிறார், அதில் மாடியில் தோட்டம் அமைக்க பல பிளாஸ்டிக்/நைலான் வகை சாக்குகளை பரப்பி மண் இட்டு வளர்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இது எளிமையான ஒரு வழிமுறை என்றாலும் நீண்டகால அடிப்படையில் மேல் தளத்தினை பாதிக்கும் ,எனவே பாதுகாப்பான முறையினையும் இன்னும் கொஞ்சம் செயல்முறைகளையும் சொல்லலாம் என இப்பதிவு .

இந்த வாரம் பதிவர்களின் பதிவுக்கு துணைப்பதிவு போடும் வா...ரம் போல :-))

ஆமாம் இவரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் எல்லாத்துக்கும் கரெக்‌ஷன் சொல்லுறார்னு சில பாசமுள்ள பங்காளிகள் நினைக்கலாம், அப்படியல்ல ஒரு நல்ல கருத்தாக்கம் கொண்ட பதிவில் சில தேவையான கருத்துகள் விடுபடும் போது , எனக்கென்ன என கடந்து போக முடிவதில்லை, பெரும்பாலும் பின்னூட்டத்தில் சொல்லிவிடுவேன், பெரிதாக போகும் என நினைக்கையிலே தனிப்பதிவு. விடுபட்ட தகவல்களையும் அளித்து முழுமையாக்குவதால், அவ்வழிமுறைகளை பின்ப்பற்றுவோருக்கு கூடுதல் பலன் தானே கிடைக்கப்போகிறது.

சரி சொல்ல வந்த கதைக்கு போவோம் இல்லை எனில் சொல்ல மறந்த கதையாகிவிடும் :-))

நீர்க்கசிவினால் மேல் தளம் பாதித்தல்:

துண்டு துண்டாக சாக்குகளை பரப்பி மண் இடும் போது என்ன நிகழும் எனில் செடிகளுக்கு தெளிக்கும் நீர் மண்ணில் இறங்கி பின் சாக்குகளின் இடை வெளி வழியே தளத்தினை அடையும் , பின்னர் கொஞ்சம் ,கொஞ்சமாக கசிந்து தளத்தில் இறங்கும், குறைவான நீர் தானே தெளிக்கிறோம் என்றாலும் நாளடைவில் தளத்தில் இறங்கும், மேலும் மழைக்காலங்களில் அதிக நீர் மண்ணில் தேங்கி மேல் தளத்தில் இறங்க வழி வகுக்கும்.

நீர்க்கசிவினால் இரும்பு கம்பி துருப்பிடித்தல்.


இதனால் என்ன ஆகும் எனில் கான்கிரிட்டில் உள்ளே உள்ள இரும்புகம்பிகள் துருப்பிடிக்க துவங்கும், அப்படி துருப்பிடிப்பிடிக்கும் போது கம்பிகளின் தடிமன் அதிகரிக்கும் இது கன்கிரிட்டில் விரிசலை உருவாக்கும் , வீட்டின் உள்புறம் கூறையில் இருக்கும் சிமெண்ட் பூச்சுகள் படலமாக பெயர்ந்து விழவும் வழி செய்யும். இதற்கு spalling என்று பெயர். இவ்வாறு தளம் பெயர்வது உடனே நிகழாது ,சிலகாலம் ஆகும் என்பதால் நாம் உடனே உணர்வதில்லை.இது போன்று கூறையின் பூச்சுகள் பெயர்ந்து விழுவதை பழைய கட்டிடங்களில் நிறைய பார்க்கலாம்.


(படம் வடுவூர் குமார் வலைப்பதிவு,நன்றி!)


தளம் பெயர்ந்து விழுந்த வீட்டினை சரி செய்தவரின் அனுபவத்தினை இங்கு காணலாம்.
வடுவூர் குமார்-தலைவலி ஆரம்பம்


இவ்வாறு தளத்தின் வழி நீர் இறங்காமல் இருக்கவே மேல் தளத்தில் தட்டு ஓடு, வாட்டர் புரூஃப் பூச்சு எல்லாம் செய்கிறார்கள். இம்முறையெல்லாம் தண்ணீர் மேலே நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போது கைக்கொடுக்கும், மண்ணை பரப்பி நீர் பிடிக்க செய்யும் தோட்டம் இருக்கும் போது நாளைடைவில் நீர் உள்புக செய்து விடும்.

அப்படியானால் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க கூடாதா? அமைக்கலாம் அதற்கு ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது. இப்போது சுமார் ஒரு அடிக்கும் குறையாத அளவில் மண்ணை இதில் பரப்பி விட்டுக்கொள்ள வேண்டும்.

மண்கலவை:

நேரடியாக செம்மண்ணோ, தோட்ட மண்ணோ மட்டும் பயன்படுத்தினால் தாவரங்களின் வேர் நன்கு பரவாது எனவே,

ஒரு பங்கு மணல்

ஒரு பங்கு தொழு உரம்

தொழு உரம் கிடைக்காதவர்கள் கடைகளில் விற்கும் காயர் பித் கம்போஸ்ட்(coir pith compost) சர்க்கரை ஆலைகள் தயாரித்து விற்கும் பகசி கம்போஸ்ட் (bagasse compost)என ஒரு வாங்கிக்கொள்ளலாம், 10 கி.கி அளவிலான பைகளில் உரக்கடைகள், நர்சரிகளில் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் வாங்கிக்கொள்ளலாம் ,பின்னர் வீட்டிலேயே சமையல் கழிவில் தொழு உரம் தயாரிக்க வழி சொல்கிறேன்.

அடுத்து 3 பங்கு செம்மண் அல்லது தோட்ட மண்

எடுத்துக்கொண்டு நன்றாக கலந்து கொண்டு நாம் உருவாக்கிய தொட்டிப்போன்ற அமைப்பில் பரப்பிக்கொள்ளவும்.

பின்னர் அதில் ஒரு அடி வரப்பு ஒரு அடி வாய்க்கால் போல ரிட்ஜஸ் அன்ட் பர்ரோவ்ஸ் (ridges and furrows)என உருவாக்கி கொள்ள வேண்டும்.இதுக்கு பேரு தான் தோட்டத்தில பாத்திக்கட்டுறது, சிலப்பேரு சோத்துலவே பாத்திக்கட்டுவாங்க :-))

மேல் மாடியில் உருவாக்கும் சின்ன தோட்டத்திற்கு இது தேவை இல்லை " raised bed "சம பரப்பில் செடிகளை நடலாம் தான் ஆனால் இப்படி பாத்திக்கட்டி அதில் நடுவதன் மூலம் சில நன்மைகள் கிடைக்கும் அவை என்னவெனில்,

பெரும்பாலான தாவரங்களின் வேர்களும் ,தண்டுகளிம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அழுகிவிடும். ஏன் எனில் வேர்கள், மற்றும் தண்டுகள் மூலமும் தாவரங்கள் சுவாசிக்கும்.எனவே இது மழைக்காலங்களில் உதவும்.

மேலும் ஒரு வாரம் ,10 நாள் என ஊருக்கு செல்ல நேரிட்டால் யார் தண்ணீர் ஊற்றுவார்கள், நாம் ஆள் வைத்து விட்டு சென்றால் தான் உண்டு, இல்லை எனில் செடிகள் வாடிவிடுமே, அப்படிப்பட்ட சூழலில் இவ்வமைப்பு ஓரளவு கைக்கொடுக்கும், எப்படி எனில்,

வாய்க்கால் போன்ற அமைப்பு நிறைய மண்ணின் நீர்ப்பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் ,பின்னர் அவற்றின் மீது மட்டும் ஏதேனும் பிளாஸ்டிக் ஷீட், அல்லது சாக்கு கொண்டு மூடிவிட வேண்டும் , இது ஆவியாதல் இழப்பை தடுக்கவே. வழக்கமாக வைக்கோல் கொண்டு இப்படி செய்வார்கள், நகரத்தில் வைக்கோலுக்கு எங்கு போக. இம்முறைக்கு மல்ச்சிங் (mulching)என்று பெயர்.

சாதாரணமாக ஒரு முறை நீர் பாய்ச்சினால் ஒரு வாரத்திற்கு செடிகள் தாக்குப்பிடிக்கும். ஆனால் வழக்கமாக ஓரிரு நாளிலேயே வாடியது போல தெரிகிறதே எனலாம் அது முழு செழிப்பான நிலைக்கு, இது போன்ற தண்ணீர் தட்டுப்பாடு வரும் போது தாவரங்கள் கிடைக்கும் நீரை வைத்து முடிந்த வரை சமாளிக்கவே செய்யும்.நாம் ஊருக்கு போகும் போது செய்வது லைஃப் இரிகேஷன்.

மேலும் மல்ச்சிங்க் செய்த இடத்தில் ஈரப்பதம் நன்கு நிற்கும் ,எனவே அதுவும் கைக்கொடுக்கும் ஆகையால் ஒரு வாரம் 10 நாள் ஆனாலும் உயிர்ப்பிழைத்து விடும்.

அப்படியும் மனசு நிம்மதியடைவில்லை இன்னும் எதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா, அதற்கும் வழி இருக்கு.

பழைய அல்லது புதிய பானை எடுத்துக்கொள்ளவும் அடியில் மிக சிறிதாக ஒரு துளையிட்டு கொண்டு அதனை வாய்க்கால் போன்ற பகுதியில் , துளையிட்ட பகுதி அழுந்தி இருக்கும்படி பதித்து வைக்கவும். பின்னர் பானை நிறைய நீர் ஊற்றி மறக்காமல் பானையின் வாயை ஒரு தட்டு போட்டு மூடிவிடவும். ஊர் வாயைத்தான் மூட முடியாது பானை வாயையா மூட முடியாது :-))

ஏற்கனவே மண்ணில் ஈரப்பதம் முழு அளவில் இருப்பதாலும், பானையின் துளை சிறியதாக இருப்பதாலும் அவ்வளவாக நீர் வெளியேறாது.

மண்ணில் உள்ள நீர் ,தாவரங்களுக்கு பரப்பு இழுவிசை மற்றும் நுண் புழை (surface tension and capillary motion)ஏற்றம் மூலமே செல்லும், மண்ணும் அப்படித்தான் நீரை கிரகிக்கும் எனவே மண்ணின் ஈரப்பதம் குறைய குறைய பானை நீர் மெல்ல மண்ணில் கிரகித்து செடிகளுக்கும் போய் சேரும். எனவே எல்லா செடிக்கும் தனி தனி பானை வைக்க தேவை இல்லை. வீட்டு தோட்டத்தின் பரப்பு மற்றும் செடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பானையே போதும்.

இம்முறைகளை பின்ப்பற்றினால் தாராளமாக 15-20 நாட்களுக்கு நீர்ப்பாய்ச்சாமலே தாவரங்கள் பிழைத்துக்கொள்ளும்.

ஒரு கூடுதல் தகவல் , தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சொட்டு நீர் (drip irrigation)பாசனம் செய்ய பண வசதி இல்லாத நிலையில் தென்னம் தோப்புகளில் கூட மரத்துக்கு ஒரு பானை என புதைத்து வைத்து நீர் பாய்ச்சுகிறார்கள். ஒரு பானை நீர் தென்னை மரத்துக்கே ஒரு வாரம் தாங்குகிறது.

நம்முடை நீர்ப்பாசனம் மண்ணுக்கு நீர்ப்பாய்ச்சுவதில் கவனம் செலுத்துகிறது ஆனால் வேருக்கு நீர்ப்பாய்ச்சினால் போதும் என்பது தற்கால நீர் மேலாண்மை. ஏன் எனில் நாம் பாய்ச்சும் நீரில் 90% சதம் ஆவியாதல் மூலமே விரயமாகிவிடுகிறதாம்.

இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் நெல்லுக்கே நீர் சிக்கனமாக பயன்ப்படுத்த மடகாஸ்கர் முறையில் "thin film water irrigtion" பயன்ப்படுத்த சொல்லியிருக்கிறார்.நெல் வயலில் நீர் எப்போதும் நிற்க தேவை இல்லை இம்முறையில்.வயல் ஈரப்பதமாக இருந்தாலே போதும்.

வீட்டில் பயன்ப்பாட்டிற்கு பின்னர் வெளியேறும் நீரை சுத்திகரித்து மீண்டும் நம் வீட்டு தோட்டத்திற்கு பாசனம் செய்யப் பயன்ப்படுத்தலாம் அதற்கு எளிய வழி இருக்கிறது.

வீட்டுக்கழிவு நீர் சுத்திகரிப்பு:

ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது ஏதேனும் டிரம் போன்ற ஒன்று எடுத்துக்கொண்டு, அதன் அடியில் நீர் வெளியேற ஒட்டை இட்டுக்கொள்ளவும் ,பின் அதில் முறையே சம அளவில் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் ஜல்லி என நிரப்பி நிரப்பிக்கொள்ளவும் பின் அதனனுடன் விறகு எரித்த மரக்கரி துண்டுகளையும் சுமார் ஒரு கிலோ அளவுக்கு சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவை அனைத்தும் முக்கால் அல்லது பாதியளவே நிரப்ப வேண்டும்,அப்போது தான் நீரீனை பிடித்து வடிக்கட்ட டிரம்முக்கு நேரம் கிடைக்கும் :-))

இதில் ஏன் மரக்கரி சேர்க்கப்படுகிறது என்றால் அது ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon)போன்று இயல்பாகவே செயல்படும். நாம் குடிக்க பயன்ப்படுத்தும் நீர் சுத்திகரிப்பு எந்திரங்களிலும் ஒரு ஆக்டிவேட்டட் கார்பன் பில்டர் இருக்கும்.

இது நீரில் உள்ள வேதிப்பொருள்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை உடையது.நாம் ஆக்டிவேட்டட் கார்பன் என்றெல்லாம் செலவழிக்காமல் நேரடியாக இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருளான மரக்கரியைப்பயன்ப்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

வீட்டு உபயோக கழிவு நீரில் வழக்கமாக இருக்கும் சோப், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் சோப்பு, எண்ணை ,உணவு துணுக்கு என அனைத்தும் இந்த சுத்திகரிப்பு முறையில் 90% நீக்கப்பட்டு ஓரளவு இயல்பான நீர்க்கிடைக்கும்.

வீட்டில் தொழு உரம் தயாரிக்கும் முறை:

வீட்டை சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால் அதில் குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்ற அளவிலாவது குழி வெட்டி ,தாவர, உணவு கழிவுகளை சேமித்து உரமாக்கலாம்.

மண் தரை தான் தொழு உரம் தயாரிக்க ஏற்றது ஏன் எனில் மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் மட்க வைக்க உதவும், மேலும் துர்நாற்றம் , உணவுகள் ,தாவரக்கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினையும் உரிஞ்சிவிடும்.

அப்படி இல்லாத நிலையில் ஏதேனும் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து தொழு உரமாக்கலாம். முன் சொன்னது போல கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினால் துர்நாற்றம் வரும் இதனைக்குறைக்க அவ்வப்போது கொஞ்சம் மணல் அல்லது மண் கொண்டு மேலே மூடிக்கொண்டே வரவேண்டும், நீரினையும் கிரகித்துவிடும், துர்நாற்றமும் குறையும்.மேலும் எளிதில் மட்கவும் செய்யும்.முழுதும் மட்கி மண் போல ஆக குறைந்தது ஆறு மாதம் ஆகலாம். பின்னர் எடுத்து தோட்டத்துக்கு உரமாக இடலாம்.

ஏன் இப்படி மட்க செய்யவேண்டும் நேரடியாக தோட்டத்தில் தாவரத்திற்கு போட்டு விடலாமே என நினைக்கலாம். அதனால் பயனேதும் இல்லை.

தாவரங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ஆகியவற்றை நீரில் கரைந்துள்ள(water solluble nutrients) நிலையிலேயே கிரகிக்க முடியும்.மட்காத கழிவில் ஊட்டச்சத்துகள் இருந்தாலும் நீரில் கரையாத தன்மை கொண்டவை எனவே தாவரங்களால் பயன்ப்படுத்திக்கொள்ள முடியாது.

மட்கிய நிலையில் நீரில் கரையும் தன்மை வந்துவிடும். மாட்டு சாணத்துக்கும் இது பொருந்தும் ,ஈரமாகாவோ, காய்ந்தோ அப்படியே இட்டால் பலன் இருக்காது.மட்க வைத்தே இட வேண்டும்.மட்கிய நிலையில் கரிமப்பொருட்களில் இருப்பவை அனைத்தும் எளிய மூலகங்களாக உடைப்பட்டு எளிதில் கறையும் தன்மை அடையும்.

தொழு உரம் என்பது மெதுவாக ஊட்டச்சத்தினை வெளியிடும் (slow releasing fertilizr)தன்மை கொண்டது , இந்த பருவத்தில் இட்ட உரத்தின் பலன் அடுத்த பருவத்திலேயே தெரியும்.எனவே தொழு உரம் எல்லாம் இட்டும் வீட்டு தோட்டம் பச்சை பசேல் என செழிப்பாக வளரவில்லை என முதன் முதலில் தோட்டம் போட்டதும் எதிர்ப்பார்க்காதீர்கள். சுமாரான வளர்ச்சி தான் முதல் பருவத்தில் இருக்கும். அடுத்த பருவத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

உரம் போட்டதும் பயிரில் பசுமையை காட்டுவது இரசாயன உரங்களே அதனால் விவசாயிகள் அதனைப்பார்த்து நல்ல பலன் என செயற்கை உரங்களுக்கு போய்விட்டார்கள். நீண்ட கால நோக்கில் பின் விளைவுகள் எதிர்மறையாகப்போகும். எனவே வீட்டு தோட்டத்தில் உடனடி பலன் எதிர்ப்பார்த்து இரசாயன உரம் போட வேண்டாம்.இரசாயன உரங்கள் ,பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் நமக்கு குறைந்த செலவிலும், உழைப்பிலும் வீட்டுத்தோட்டங்கள் மூலம் கிடைக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:

# மொட்டை மாடியில் அமைக்கும் போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.

#கைப்பிடி சுவரோடு ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.

#குறைந்த இடத்தில் அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.

#நீர் தேங்காமலும், பானைகள் நீருடன் திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு முதல் அனைத்தும் வரும்.

#மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம் :-))

கட்டுப்படுத்த வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

#வீட்டு தோட்டத்தில் எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில் lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

எறும்பினை கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது :-))

# தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துபவை.

மேலும் மற்ற விவரங்கள் எல்லாம் கவுசல்யா அவர்களின் பதிவிலே நன்றாக விளக்கியுள்ளார்கள், அங்கு பார்க்கவும்.விடுபட்டவைகளை மட்டுமே நான் கூறியுள்ளேன் , இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ சந்தேகம் என்றாலோ பின்னூட்டத்தில் சொல்லலாம்.

நன்றி : http://vovalpaarvai.blogspot.in/2012/06/blog-post_14.html