Showing posts with label அத்தி. Show all posts
Showing posts with label அத்தி. Show all posts

Wednesday, September 25, 2013

அத்தி மரம்

பால் முதல் பட்டை வரை... அத்தி மரம்... அத்தனையும் வரம்!

காணக் கிடைக்காதது கிடைத்தால்... அதை 'அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருந்துப் பொருளாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. அத்திப் பழத்தை அன்றாட உணவில் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளலாம். நீர்நிலைகளின் அருகாமையில் அதிகம் காணப்படும் அத்தி மரத்தின் மருத்துவக் குணங்கள் குறித்து விவரிக்கிறார் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கோசிபா.

இலை
''உலரவைத்துப் பொடித்த அத்திமர இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லவை. காயங்களில் வடியும் ரத்தப்போக்கையும் இதைக்கொண்டு நிறுத்தலாம்.
இந்தப் பொடியில் தயாரித்த லோஷனைக்கொண்டு நாள்பட்ட மற்றும் அழுகிய புண்களைக் கழுவினால் குணம் கிடைக்கும். இதன் இலைகளைக் கொதிக்கவைத்த தண்ணீரால் வாய் கொப்புளித்தால் வாய்ப் புண்கள் ஆறும். ஈறுகளில் சீழ் வடிவதும் குணமாகும்.

பிஞ்சு
கிராமங்களில் அத்திப் பிஞ்சுடன் பாசிப்பயிறு அல்லது துவரம் பருப்பு சேர்த்து  சமைத்து உண்பார்கள். இதனால் மூலவாயு, மூலகிராணி, ரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கிவிடும்.  அத்திப்பிஞ்சுடன் வேலம் பிஞ்சு மாம்பட்டை ஆகியவற்றைச் சம அளவு எடுத்துக்கொண்டு வாழைப்பூ சாற்றில் நீர் சேர்த்துக் கஷாயமாக்கி  அருந்துவார்கள். வயிற்றுக்கடுப்புக்கும் சீதக்கழிச்சலுக்கும் இது நல்ல மருந்து.

காய்
பிஞ்சுபோலவே இதையும். நேரடியாகவே உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தலாம். முற்றாத காய்களைத் தேர்ந்தெடுத்தால் சமையல் சுவையாக இருக்கும்.  பிரமேகம், உட்சூடு, மலக்கட்டு போன்றவற்றையும் நீக்கும்.
பழம்

அத்திப்பழம் மிகச் சிறந்த குருதிப் பெருக்கி. மலமிளக்கியும்கூட. நன்றாக முதிர்ந்து தானாகப் பழுத்து கீழே விழுந்த அத்திப்பழத்தை அப்படியே உண்ணலாம். தேனில் ஊறவைத்து பதப்படுத்தியும் உண்ணலாம். மலக்கட்டையும் பித்தத்தையும் அடியோடு நீக்கும். உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
அத்திப்பழத்தை அப்படியே சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும்.  நெல்லிக்காய் சாப்பிடுவதுபோல அவ்வப்போது அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் கிட்டே வராது. அந்த நோய் இருப்பவர்களுக்கு அதன் பாதிப்பை ஆணிவேரோடு அகற்றிவிடும் வல்லமை வாய்ந்தது அத்திப்பழம்.

காட்டு அத்திப் பழத்தில் சிறிதளவு தினசரி ஒரு வேளை உண்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் உள்ளிட்ட தோலின் அனைத்து நிறமாற்றப் பிரச்னைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூசலாம்.

மலச்சிக்கல் விலக, வழக்கமான உணவுக்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கல் தொந்தரவு தீருவதற்கு இரவுதோறும் ஐந்து பழங்களை உண்டுவர நல்ல குணம் தெரியும். அத்திப் பழங்களை வினிகரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து தினசரி இரண்டு பழங்களைச் சாப்பிட்டுவருவது போதைப் பழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்துக்கு கைகண்ட மருந்து.

அத்திப்பழத்தில் புரோட்டின், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகள் அதிக அளவில் பொதிந்திருப்பது அறிவியல் ஆராய்ச்சிகளின்படி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனாலேயே, பலவீனமானவர்களுக்கும் ஜுரத்தில் கிடந்தவர்களுக்கும் உடல் தெம்பாக அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள். பிரச்னை எதுவும் இல்லாவிட்டாலும்கூட, தினசரி இரண்டு அத்திப்பழங்களை உண்டுவந்தால் அது உடல் கவர்ச்சியைக் கூட்டும்.

அத்திப்பால்
அத்தி மரம் முழுக்கவும் அரிவாளால் கொத்தப்பட்ட தழும்புகளைப் பார்க்கலாம். அத்தனையும் அத்திப் பாலுக்காகக் கீறப்படுபவை. சர்க்கரை நோயினால் ஏற்பட்ட பிளவை, கீழ்வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு அத்திப்பாலை பத்து போட்டால், விரைவில் குணம் தெரியும். வாத நோய்களுக்கு அத்திப் பாலை வெளிப்பூச்சாகத் தடவலாம். மூலம், பெரும்பாடு, ரத்த மூத்திர நோய்களுக்கு உள் மருந்தாகவும் கொடுக்கலாம்.

பட்டை
அத்திப்பட்டையில் மோர்விட்டு இடித்துப் பிழிந்த சாற்றைத் தொடர்ந்து குடித்துவந்தால், பெண்களைப் படுத்தி எடுக்கும் பெரும்பாடு ஓடிப்போகும். இதையே வேறு முறையில், அத்திப்பட்டையை நன்றாக இடித்து பஞ்சு போன்று மிருதுவாக்கி, சமையலுக்குப் பயன்படுத்தாத பாத்திரத்தில் போட்டு, அரைப் படி நீர் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு வரும் அளவுக்கு சுண்டக் காய்ச்சுவார்கள். தினசரி மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் இந்தக் கஷாயத்தை குடித்துவந்தால் உதிரப்போக்கு, ஆசனக் கடுப்பு, சீதரத்தபேதி போன்றவை நீங்கும்''.

- See more at: http://www.tamilkathir.com/news/6195/58/d,full_article.aspx#sthash.ZCrKVyY7.dpuf